Monday, March 26, 2007

மறைந்து போகும் கைவினஞர்.

குயவர்பாளையம், கொசக்கடை, ஆகிய பெயர்கள் கைவினைஞரான குலாளர் சமூகத்தை, நம் நினைவிற்கு கொண்டு வருகிறது.கோட்டக்குப்பத்தில் கூட, குயவர்கள் தொழில் செய்வதைப் பார்த்திருக்கிறேன்.புதுவை அரும்பார்த்தபுரத்தில் கூட, மண் கலயங்கள் செய்வதைப் பார்த்திருக்கிறேன்.கொசக்கடைத் தெருவில், மத்திய சிறைச்சாலைக்கு பின் பக்கத்தில், பானைகள், சட்டிகள் விற்கும் சந்தை இப்போதும் உண்டு.

அலுமினியம் 60களில் ஊடுருவல் செய்தது. அடுத்து, எவர்சில்வர்,(நிலைவெள்ளி) அதற்கடுத்து, பிளாசுடிக்(ஞெகிழி). இவைகள் விடை கொடுத்து அனுப்பின, விரைவாக மண்பாண்டங்களை. புதிய பாணி வாழ்க்கை முறைகள் உலை வைத்தன, பூர்விக மண்ணின் அம்சங்களை. ஒரு காலத்தில் அனைத்து பிரிவு மக்களின் சமையல் பாத்திர தேவைகளை பூர்த்திசெய்த, மிக அடிப்படையான தொழில் பிரிவு மக்களான குயவர்கள்,மண் உடையார் என்றும் அழைக்கப்பட்டனர்.

இம்மக்கள், மதம், கலாச்சாரத் துறைகளில், குறிப்பாக பொம்மைகள், குதிரைகள், வீரர்கள், சாமி உருவங்கள், கோவில் கோபுரங்களில் வைக்கும் கலசங்கள், கும்பங்கள், கரகாட்டத்திற்கு கலயங்கள் என்பன போன்ற பிற படைப்புகளிலும், பண்பாட்டு முத்திரையை, தனிப் பதிவுகளை ஏற்படித்தினர். தற்போது, இவர்கள் முகவரி இல்லாத கடிதங்கள், செல்லுபடியாகத நாணயங்கள்.

No comments: