Sunday, March 11, 2007

விண்வெளிப்போர் ?

புதிய போர்க்களம் உருவாகும் போக்கு குறித்து, மக்களின் கவனத்தை திருப்ப வேண்டிய அத்தியாவசிய சூழலில், நாம் இப்போது இருக்கிறோம். சில நாடுகள் விண்வெளியில் ஆயுதங்களை நிலை நிறுத்த, பல ஆய்வுகளை மேற்கொண்டு, திட்டமிட்டு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருகின்றன. இதுவே,விண்வெளிப்போர் என நாம் குறிப்பிடுகிறோம்.


மிக விரைவில், இவ்வாறு விண்வெளியில் நிலை நிறுத்தப்பெறும் ஆயுதங்கள், அங்கிருந்து விண்வெளி ஊடாக அல்லது விண்வெளியிலேயே, போர் புரிய பயன்படுத்தப்படும் என்றால், அது வியப்பில்லை. விண்வெளியானது, இராணுவ உபயோகத்திற்காக பயன்படுவது பொதுவாகிப் போன நிலையில், குறிப்பாக ஈராக் மீதான அமெரிக்க போர், முதல் முறையாக உண்மையான "விண்வெளிப்போர்",என சில அமெரிக்க இராணுவ அதிகாரிகளே வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளனர்.


எனினும், "இராணுவமயம் ஆக்கப்பட்ட விண்வெளிக்கும்", "ஆயுதமயம் ஆக்கப்பட்ட விண்வெளிக்கும்" நிறைய வேறுபாடு இருக்கிறது. பிந்திய நிலையை உருசியா, கனடா, சீனா, மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மிகக் கடுமையாக எதிர்க்கின்றன. இப்போக்கு ஆயுதப் போட்டியை பூமியில் மட்டுமின்றி; விண்வெளியிலும் அதிகரிக்கச் செய்யும் என்பதால்; 1967ஆம் ஆண்டில், 96 நாடுகளால் விண்வெளி ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டது.


அது, எந்த ஒரு நாடும் பேரழிவு ஆயுதங்களையோ, அணு ஆயுதங்களையோ அல்லது இதர ஆயுதங்களையோ, விண்வெளியில் வைத்து வரக்கூடாது, என தடை விதிக்கிறது. மேலும், விண்வெளி மற்றும் அனைத்து விண்வெளிக் கோள்களும், அமைதியான நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப் படவேண்டும்; இராணுவ ஆயுதங்கள் மற்றும் இராணுவ ஒத்திகை நடவடிகைகளுக்கு விண்வெளியைப் பயன்படுத்தக் கூடாது எனவும், தெளிவாக கட்டுப்பாடுகள் விதிக்கிறது.


எனினும், இவ்வொப்பந்தப் பிரிவு ஓட்டைகளின் வழியாக, செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதங்கள்; விண்வெளியில் வைத்து வரப்படும் "லேசர்எதிர்ப்பு" ஆயுதங்கள் மற்றும் இதர வகையிலான விண்வெளி ஆயுதங்கள்; இதுவரை கட்டுப்படுத்தப்படவில்லை. ஆனால், பேரழிவு ஆயுதங்கள் நிலை நிறுத்தம் மட்டுமே, தற்போது தடை செய்யப்பட்டுள்ளது.


செயற்கைக் கோள் எதிர்ப்பு ஆயுதங்களில், விண்வெளியில் சுற்றிவரக்கூடிய செயற்கைக் கோள்களை அழிப்பதும் அல்லது அவற்றை செயல் இழக்கச் செய்வதும்; விண்வெளி அடிப்படையான "லேசர் கதிர் வீச்சு" பாய்ச்சும் செயற்கைக் கோள்களும்; விண்வெளி கண்ணி வெடிகளாகவும் அல்லது சிறிய அளவிலான நுண்ணிய செயற்கைக் கோள்கள்; குண்டுகளாகவும் செயல்படும் அல்லது செயற்கைக் கோள்களை சுட்டு அழிக்கக்கூடிய இயங்கு ஆற்றல் மிக்க ஆயுதங்களாகவும் பயன்படுகின்றன.


ஐக்கிய அமெரிக்க நாட்டின், விண்வெளி இராணுவத்திற்கு, தலைமைப் பொறுப்பு வகிக்கும் படைத்தளபதி, திருவாளர்.ஆழ்லி அவர்கள், தரையில் இருக்கும் எதிரியின் இலக்குகளை விண்வெளியில் இருந்தும், விண்வெளி இலக்குகளை விண்வெளியிலேயும் எதிர் கொள்ள முடியும், என தீர்க்கமாக கூறியுள்ளார். இதிலிருந்து, அணு ஆயுதப் போரை புதிய மட்டத்திற்கு, அதாவது விண்வெளிப் போர் அளவிற்கு முழுமையாக உயர்த்திட, அவர் உறுதி கொண்டுள்ளார் என்பது நன்கு தெளிவாகிறது.


எனவே, அழிவுக்கான, அச்சுறுத்தலுக்கான விளவுகளை, நம் மீது திணிக்கும் இது போன்ற விண்வெளிப்போர் ஆக்கிரமிப்பை, அமைதியை விரும்பும், சனநாயகத்தை விரும்பும், உலக மக்கள் அனைவரும் எதிர்க்க வேண்டிய கால கட்டத்தில் வாழ்ந்து வருகிறோம் என்பதை உணர்ந்து, ஒன்று பட்டு செயல்பட வேண்டும்.

No comments: