Thursday, July 26, 2007

தனிமைக்கு அப்பால்

எனது தனிமைக்கு அப்பால்
மற்றொரு தனிமை
அங்கே உறைகின்றவனின்
தனிமையைவிட
எந்தன் தனிமை
நெரிசல் மிகுந்த சந்தைக்கடை
எந்தன் தனிமை என்பது
சப்தங்களின்
ஒரு குழப்பம்


அப்பால் உள்ள தனிமையைக் காண
தவிப்பு மிக அதிகம்,
ஆனாலும்,
மிக இளம் வயது எனக்கு,
மேல் பள்ளத்தாக்கின் குரல்கள்
இன்னமும்
என் செவிகளை ஈர்க்கிறது


அவற்றின் நிழல்கள்,
எந்தன் வழியை தடுத்தது,
என்னால் செல்ல முடியவில்லை!

இம்மலைகளுக்கு அப்பால்,

வசீகரிக்கும் தோப்பு உண்டு!

அங்கே குடிகொண்டுள்ள
எனது அமைதி
வேறொன்றம் இல்லை!
சுழல் காற்றாகும்!
என்னை ஈர்க்கக்கூடிய
மகிழ்ச்சி,
ஒரு இல்பொருள்
காட்சியாகும்!


மிக இளையவன் நான்,
மிக கிளர்ச்சியானவனும் கூட,
புனிதமான,
அத்தோப்பினை நாட,


இரத்தத்தின் சுவை
என் வாயில்,
இன்னும் ஒட்டிக்
கொண்டிருக்கிறது


எனது முன்னோர்களின்
வில்லும், அம்பும்,
இன்னமும் எனது கைகளில்,
என்னால்
செல்ல முடியவில்லை!


இந்த சுமையான மனத்தினைத்
தாண்டி,
எந்தன் சுயேச்சையான மனம்
இழுக்கிறது,

என்னுடைய கனவுகள்
சுயேச்சையான
அகத்திடம்!


அந்திபொழுதில் சமர் செய்கிறது,
அகம்,
அதற்கு எம் கனவுகள்
யாவும்,
அந்திப் பொழுதின் போர்க்களம்


எம் விருப்பங்கள் யாவும்,
எலும்புகளின் ஒலிப்பாகும்
யான் மிகவும் இளையவன்,
எனது சுயேச்சையான மனமாக
இருந்திட,
மிகவும் வன்மம் கொண்டுள்ளேன்


எவ்வாறு சுமையான
எனது சுயத்தை
யான் கொல்லாது,
அல்லது
அனைத்து மனிதர்களும்
விடுதலை பெறாமல்,


யான் எனது சுயேச்சையான
மனதாக
மாறுவது எவ்வாறு?


இருண்மையில் எனது வேர்கள்
அழிந்துவிடாமல்,
எமது இலைகள் காற்றில்
கீதம் இசைத்து
எவ்வாறு பறக்க முடியும்?


எனது சொந்த அலகினால்
கட்டப்பட்ட கூட்டைவிட்டு,
எமது குஞ்சுகள்
வெளியில் கிளம்பாமல்,


எவ்வாறு என்னுள் இருக்கும்
சூரிய கழுகு
வெளிச்சத்தில் பறக்க முடியும்?

(-கலில் சிப்ரான்-

தமிழ் வடிவம் முத்துக்கண்ணு)

No comments: