Wednesday, September 3, 2008

"தேசிய பொருளியல் ரீதியில் பிற்படுத்தப் பட்டோர் ஆணையம்"

கடந்த மாதம், 23 சூலை, 2008ல் புதுச்சேரி மாநிலத்திற்கு, "தேசிய பொருளியல் ரீதியில் பிற்படுத்தப் பட்டோர் ஆணையம்", வருகை புரிந்தது. இவ்வாணையம், இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்திய அரசால் அமைக்கப்பட்டது. இதன் தலைவர், திருவாளர்.எசு.ஆர்.சின்கோ,ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ஆகும். திருவாளர்கள். நரேந்திர குமார் மற்றும் மகேந்திர சிங் ஆணையத்தின் உறுப்பினர்கள். டாக்டர்.பி.என்.இராம், முதுநிலை ஆராய்ச்சியாளர் அவர்களும் உடன் வருகை தந்தார்.

தற்போது, நடைமுறையில் நிலவும், இட ஒதுக்கீடு சலுகை பெறாத, பெருளாதார ரீதியில் பிற்படுத்த நிலையில் உள்ளவர்களுக்கு, கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து, பரிந்துரை செய்திட, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ,கருத்து கேட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, புதுச்சேரிக்கும் வந்திருந்தனர்.

இவர்கள் வருகை சம்பந்தமாக, புதுவையின் பல்வேறு அமைப்புகள், சரிவர விளங்கிக் கொள்ளாமல், ஏற்கனவே உள்ள," தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்"தான் வருகின்றது என நினத்து, அதற்கேற்ப தமது கருத்துகளை தயார் செய்து, கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் "திட்டத்துறை கருத்தரங்க வளாகத்திற்கு" வந்திருந்தனர்.

முன்னர் உள்ள பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், சமூக. கல்வி அடிப்படையில் பின் தங்கியுள்ள வகுப்பினரை மதிப்பெண் அடிப்படையில் ஆய்ந்தறிந்து இறுதி செய்தது.சமூக ரீதியில், கல்விரீதியில் உயர்வு என்பது பொருளாதார ரீதியில் உயர்வுக்கு வழி வகுக்கும் என்பது அனைவரும் உணர்ந்தது.

பொருளாதரத்தில் மட்டும் பின் தங்கிய நிலை, சமூக நிலையில், கல்வி நிலையில் உயர்வு உள்ள மக்கள் பிரிவினர்க்கு இட ஒதுக்கீடு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் ஏற்படுத்தி தருவது, முன்பு ஏற்பாட்டில் உள்ள இட ஒதுக்கீடு கொள்கைய சிதைத்து விடும் என்பதில் ஐயமில்லை!

சாதிய கட்டமைப்பு உயிருடன் இருக்கும் வரை, ஏற்றத் தாழ்வுகள் சமூக ரீதியில் இருகிப்போன சூழலில், இட ஒதுக்கிடூ என்பது சாதிய ரீதியில் அளித்திட வேண்டியது கட்டாயம்!

பொருளாதார ரீதியில் தாழ் நிலையில் உள்ளவர்கள் என்பது கூட, சமூகத்தின் அடித்தளத்தில் உள்ளவர்களுக்குத்தான் அதிகம் பொருந்தும். அவர்கள்தான் இட ஒதுக்கீடு வரம்பிற்குள் ஏற்கனவே உள்ளனர்.

உயர் சாதியினருக்கு முன்பே உள்ள 'சமூக மதிப்பு', 'உயர் நிலை'-ஒதுக்கீடு-, குறிப்பாக கோவில் கருவறைக்குள் வழிபாடு செய்வது போன்ற முந்துரிமை, அனைத்து சமூகத்திற்கும் பொருந்துமா?

இந்தியக் குடிமகன் என்ற நிலையில் அனைவருக்கும் சமமான சமூக மதிப்பு, வாய்ப்பு கிடைக்காத நிலையில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு தொடர வேண்டும் என்பதே கோரிக்கை.

அதிலே கூட ,பொருளாதார அளவுகோல் வைக்கப் பட வேண்டும் என நீதி மன்றங்கள் தொடர்ந்து வலியுறுத்தும் நிலையில், இது போன்ற புது இட ஒதுக்கீடு முயற்சிகள் தேவையில்லை!

இப் பிரிவினர்க்கு, அரசாங்கங்கள் சலுகைகள், பல நலத்திட்டங்கள் அளிப்பதில் யாருக்கும் கருத்து முரண் இல்லை. எனினும் தனியாக இட ஒதுக்கீடு ஏற்பாடு ஏற்புடையது இல்லை!

No comments: