Sunday, May 13, 2018

'போர்வை வாதிகள்!

சமூக இயக்கங்கள், செயற்பாட்டுக் குழுக்கள், அரசியல் கட்சிகள் போன்ற பல்வேறு அமைப்புகளில் முன்னணித் தோழர், முனைப்பு காட்டுபவர், முன்முயற்சியாளர் போன்ற செறிவான செயல்பாடு உடையவர் என்ற அடையாளம் தன்முனைப்பில் கொண்டு சேர்க்கிறது.

இதனால் கூட அதிக சேதம் இல்லை! குடும்பங்களில் தோழமையுடன் பழக வேண்டியவர்கள், நிலை பிசகி, கதாநாயக சித்தரிப்பில், கவடு கூட்டி, பாலியல் கொடுமை இழைக்கின்ற போக்கு பரவலாகி பாதிக்கப்பட்டவர் வெளிப்படுத்த முடியாத அவலம்!

 இவரெல்லாம் மனித உரிமை, மண்ணுரிமை, சமூக நீதி என்கின்ற பல்வேறு பரிமாணங்களில் தம்மை வித்தியாசப் படுத்தி, உயர்த்தி, அதற்கென சிறு கூட்டத்தை தம் வளையத்திற்குள் வைத்து வலம் வருபவர்கள்.

வெளிப்படையான எதிரிகளை விட கூடிக்கெடுக்கும், குடி கெடுக்கும் இவர்கள், தந்தை பெரியாரைப் பேசுவார்; அண்ணல் அம்பேத்கரை புகழுவார்; மார்க்சியம், லெனினியம்; ஈழ விடுதலை இன்ன பிற முழக்குவார்! அதற்கும் ஆமாம் சாமியாக ஒரு கூட்டம் குடை பிடிக்கும். வியாக்கியானம் கூறும்.

பெண்ணுரிமையும் கூட இப்படிப்பட்ட பேர்வழிகளின் நிகழ்ச்சி நிரல்களில் உண்டு. தனி மனித ஒழுக்கம், நம்பிக்கை மோசடி, பெண்கள் மீதான வல்லாதிக்கம் கண்டு கொள்ளப்படாத செயல்களாக, இயக்கங்கள் தப்புத் தாளங்களின் பிடியில், சாமர்த்தியமாக சதுராடுகின்றன.

இதுபோன்ற, 'போர்வை வாதிகளை',' முகமூடி மாந்தர்களை, மக்கள் சமூகம் அறியும் சூழல் உருவாக வேண்டும். வர்க்க எதிரிகளை விட மோசமான, பண்பாட்டுச் சிதைவு விளைவிக்கும் இச் சக்திகள்/சகதிகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.'

No comments: