Saturday, January 26, 2019

மன நோயாளிகள்-மனித உரிமை

ஐ.நா. மன்றத்தின், உலக நல அமைப்பு, இந்தியவில் உள்ள மன நோயாளிகள் குறித்து அளித்துள்ள தகவல்கள் சில.உச்ச நீதி மன்றத்தின் வழக்கில் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

உலக அளவில், அதிக எண்ணிக்கையில் மன நல பாதிப்பு உடையவர்கள் இந்தியாவில் அதிகம் என்கிறது.தேசிய மன நல கணக்கெடுப்பு- 2016 புள்ளி விவரம்.
 மக்கள் தொகையில் ஏறக்குறைய 14% விழுக்காட்டினர் ஆக்கபூர்வ மனநல மருத்துவம் தேவைப் படுபவர்களாக உள்ளனர் என்கிறது. மேலும், 2% விழுக்காட்டினர் தீவிரமான பாதிப்பில் உள்ளனர் என்கிற தரவும் அளிக்கிறது.

மாநில அரசுகளும், யூனியன் பிரதேச அரசுகளும் மனநல மருத்துவச் சட்டம் 2017ன் படி, மாநில மனநல அதிகார அமைப்பு மற்றும் மனநல மீள்பார்வை வாரியம் அமைத்திடாமல் உள்ளன என்கின்ற செய்தியும், மனநல காப்பங்கள் குறித்த ஒரு வழக்கில்- உத்தரபிரதேச பதயூம் மாவட்டத்தில் உள்ள மனநோயாளிகள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட கொடுமை சம்பந்தமாகவும் உச்சநீதி மன்றத்தின் கவனத்திற்கு சுட்டிகாட்டப்பட்டது.

சங்கிலியால் கட்டி வைப்பது மனித உரிமை மீறிய செயலாகும், மனித கண்ணியத்திற்கு எதிரான நடவடிக்கையாகும் எனவும், கெளரவ் பன்சால் என்கின்ற வழக்கறிஞர்  மனநல நோயாளிகள் பிரச்னை தொடர்பாக  உச்சநீதி மன்றத்தில்தொடர்ந்த பொதுநல வழக்கில், உச்சநீதி மன்ற நீதிபதிகள் மாண்பமை. ஏ.கே.சிக்ரி, மற்றும் எஸ். அப்துல் நாசீர் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

பறவைப் பாடல்







மேவ்லானா சலாலுதீன் ரூமி

பறவைப் பாடல் ஏக்கம் தணித்திடும்
அவைபோல் மிகு களிப்பில் நான்,
சொல்வதற்கு ஏதுமின்றி!
உலகளாவிய ஆன்மாவே சில பாடல் பழகிடு
அன்றி என்னூடாக விரும்பிடு!

(மொழியாக்கம்)

Monday, January 21, 2019

"வாழ்க வள்ளுவம்"

புதுச்சேரி சிந்தனையாளர்கள் அரங்கம், 20.01. 2019 கவியரங்கம்

வாழ்க வள்ளுவம் என்போம்
வளமான வாழ்வு அதன் வழி நிற்போம்
வாழ்வின் அடிப்படை அறம் என்பார்
வாழ்ந்திடும் வாழ்க்கைக்கு பொருள் என்பார்
இன்பம் எய்திட அன்பென்பார்
அறமும் அன்பும் பிணை என்பார்
மறத்திற்கும் மாண்பு சேர்த்திடுவார்
துணை அன்பென்று காட்டிடுவார்
இறையியலில் அறிவியல் பாய்ச்சிடுவார்
இருட்டறை மதங்களை விரட்டிடுவார்
வான் சிறப்பை வகையாய் விளக்கிடுவார்
வாழுவு அதுவே என்று ஊட்டிடுவார்
நீத்தார் பெருமை நீட்டிடுவார்
நித்தில உண்மை நாட்டிடுவார்
கல்விச் சிறப்பை கண்ணென்பார்
கல்லாமை நிலையை விலங்கென்பார்
ஏழைக்கு இரங்கிடும் வள்ளுவம்
ஏற்றமிகு சிந்தனைக் கருவூலம்
பிறப்பொக்கும் சம உரிமை என்றிடுவார்
பிற பிரிவு தொழில் வகைதான் என்றறைவார்
அறிவுச் சமூகத்தின் வடவையாம்
ஆண்ட தமிழினத்தின் செவ் வரியாம்
உலகை உய்விக்கும் உயிர் மறையாம்
உண்மை இது நேர் மறையாம்

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்!

இலக்கியச் சோலை கவியரங்கம், 19.01.2019, "செகா கலை"க் கூடத்தில்.

உழவின் வாழ்வே வாழ்வு
உழவற்ற வாழ்வு தாழ்வே
அச்சாணி உலகு அதுவே
அரசாட்சி இருப்பும் உழவே
அகலாது நிற்பின் அழகே.


வாழ்வார் உழுதுண்போரே
வீழ்வார் தொழுதுண்போரே
வள்ளுவம் பகர்வது மேலும் கேட்பாய்
கைம் மடங்கின் துறவும் நிற்காதே
கழனி விலகிடும் சமூகம் வெல்லாதே


சுழலும் ஏர்ப்பின் எட்டி நிற்காதே
சுறு சுறுப்பேற்றிட தயங்காதே
உறுபசி ஒழியும் கலங்காதே
ஓவாப் பிணி குறையும் உணர்வாயே
செறுபகை விலகும் அறிவாயே

தொல் தமிழர் பண்பாண்மை தேக்குவாயே
தொல்லறிவு இது ஏற்பாயே!

"வேதனைப் பொங்கல்"

17.01 2019 காணும் பொங்கலை முன்னிட்டு,புதுவை, கருவடிக்குப்பம், சிவாஜி சிலை அருகில்,இந்தியக் கலைப் பண்பாட்டுப் பேரவை சார்பில் நடந்த, கவியரங்கில், வாசிக்கப்பட்ட கவிதை.


எங்கள் விழா! பொங்கல் விழா!
ஏரின் பெருமை ஏற்றிய விழா!
அறுவடை விழா! ஆதவன் விழா!

வெடியில்லை! வெறுப்பில்லை!
வேதனை இல்லை! தீவாளியில்லை!
கிழக்கின் வெளி உழைப்பில் தேக்கி,

கதிர் வணங்கி கலத்தில் சேர்க்கும்
வேளாண்மை விழா!
விருந்தோம்பி விடியல் கூட்டும்
உழவின் விழா!

இன்று,
மரபின் பெருமை! மங்கிடும் உரிமை!
நீரும், நிலமும், நின்னை விட்டு நீங்கிட
திண்ணை இழந்த வீடாய், தெருவில்.
உருக்குலையும் உழவு!

சந்தைப் பச்சையில்
வறுமை வெல்லம் சேர்த்து,
சம்பிரதாயப் பொங்கல்!
இயலாமை விறகெரியும்
அடையாளம் இழந்து!

பெருவணிகப் பசிக்கு அன்னமிட
இயலா அட்சயப் பாத்திரம்!
அசந்து போகும் ஆதிரையாய்!
தஞ்சைக் கழனிகள்
அந்நியமாதல் நிரலில்.

கரும்பாய் இனித்த வாழ்வும் கசப்பாய்!
இயற்கைப் பேரிடர், சூழல் அழிவில்
டெல்டா மாவட்டங்கள், பொட்டல் காடாய்!
சுருண்டிடும் தமிழகம் சுரும்பாய்!

Monday, January 14, 2019

வண்ணங்கள்



கவிஞர். ஷெல் சில்வர்ஸ்டெயின்

என் தோல் ஒரு வகை பழுப்பு
இளஞ்சிவப்பு, மஞ்சள், வெள்ளை
என் கண்கள் சாம்பல், நீல, பச்சையாகும்
எனக்கு சொல்லப்பட்டது 
அவை இரவில் செம்மஞ்சள் நிறத்தில்
என் முடி சிவப்பு, இளம்பொன், பழுப்பு நிறம்
ஈரத்தில் அது வெள்ளி நிறத்தில்
அனைத்து வண்ணங்களும்
கண்டுபிடிக்கவில்லை 
இன்னும் நான் உள்ளே.

(மொழியாக்கம்)


Saturday, January 12, 2019

பேரார்வம் ஈர்த்திடும் உண்ணி


கவிஞர்.பாப்லோ நெருடா

என் பேரார்வம் ஈர்த்திடும் உண்ணி
மணிக்கணக்கில் என்னைக் கடிக்கட்டும்,
அவை நிறைவான, தொன்மையான, 
சமஸ்கிருதம் போன்றவை,
அவை முறையீடு ஏற்கா பொறிகள்.
உண்பதற்காக கடிப்பவை அன்று,
துள்ளலுக்கு மட்டும் குதிப்பவை ;
விண்கோள நடனமாடிகள் அவை,
நுண்ணிய கழைக் கூத்தாடிகள்,
மிக மென்மையான,
மிகவும் ஆழமான ஆட்ட வட்டரங்கில்;
என் தோல் மீதில் பாய்ச்சலோட்டம்,
உளக் கிளர்ச்சியை வெளிப்படுத்தட்டும்,
பொழுது போக்கட்டும் என் குருதியில்,
எவராகிலும் அவற்றை அறிமுகம்
எனக்கு செய்திட வேண்டும்.
உன்னிப்பாக, அவற்றை நான் 
அறிந்திட விழைவேன் ,
எதைச் சார்ந்திருக்க நான் அறிந்திடட்டும்.

(மொழியாக்கம்)

Thursday, January 3, 2019

கடந்திடும் ஆண்டு கனிவானதே


கவிஞர்.வால்டர் சேவேஜ் லாண்டர்.

விடைபெறும் ஆண்டு கனிவாய்,சுவையாய்
விழும் தெளிப்பின் நறுமணம்;
வாழ்க்கை கடந்திடும் இன்னும்
மோசமான படை நடப்பில்,
களிம்பற்ற அதன் இறுதி நாளில்.

அதன் முடிவுக்கு நான் காத்திருக்கிறேன்,
அதன் துயரம் வழி நடத்துகிறேன்,
ஆனால்,
அதன் துக்கம் என் நெஞ்சத்திலோ,
அன்றி
என் கல்லறையிலோ விழவேண்டாம்.
வீழும் கண்ணீர்,
அனைத்திற்கும் ஆறுதல் அளித்திருக்கும்.

(மொழியாக்கம்)

Wednesday, January 2, 2019

நான் சோமாலி


சோமாலிய நாட்டுக் கவிஞர். அப்துல் காதிர் எர்சி
சோமாலி-ஆங்கில கவிதை தொகுப்பினர் மொழிபெயர்ப்பில்

அயராத இந்நாட்களில்,
நீ மெய்யாக உயிருடன் இருப்பின்.
கடந்த காலங்கள் எதிரொளிப்பாய்.
சுவடுகளைத் தேடு.
உம்மிடம் கேள்:
யார் சோமாலி?

உயிருடன் இருப்பவர் எவரும்
எம்மை ஒடுக்கவில்லை.
அனைவரும் சமம் நான் நம்புகிறேன்.
எம்மைக் காண வருகை தருகையில்
அரை மன விருந்தோம்பல் இல்லை,
காண்பாய்:
நான் சோமாலி

அக்கறை உள்ளவர் என்போரே
சங்கிலியால்  எம்மை அச்சுறுத்தும் சமயம்,
ஓட்டைகள் நிரம்பிய கலமாக நீங்கள்.
உமது இருமுக துரோகம் ஒழுகிக் கொண்டிருக்க.
என்னைக் காட்டிக் கொடுக்கும் முயற்சிகள்
தாக்கம் உண்டாக்காது,
நான் சோமாலி.

எம்மிடம் ஏதும் இல்லை என்றாலும்,
என் தலை நிமிர்ந்து நிற்கிறது,
நான் பிச்சை எடுக்கவில்லை,
அகத்தில்
நான் செல்வந்தன், சுயமரியாதை,
கண்ணியம் மற்றும் பெருமையில்.
நீ என் எதிரியாயின்,
என்னை வெல்ல முடியாது,
நீ என் நண்பனாயின்,
எனது இதயம் முழுதும் உனக்காக.
நான் சோமாலி.

நம் முன்னால்  உள்ள பாதை
கடுமையானது,
ஆனால் தெளிவானது,
எனது பயணம் வேதனை மிக்கது
எனது எல்லைகள் மிகத் தெளிவாயினும்
எனது வாள் இடர், துயர் தரும்,
என் ஆன்மா முன்பே மரத்தில் தொங்கிடும்.
நான் சோமாலி.

எனக்கு  தீங்கிழைக்க கூடியவர்
எவரும் இல்லை,
என்னிடம் நெருங்கினால்,
நான் எதிர்ப்பேன் என்றறிவார்.
வெற்றி என்னுடையதாயினும்,
நான் ஒடுக்க மாட்டேன்
தவறிழைப்பேற்றவர் எவரும்
தம் உரிமைகள் மீண்டும் அடைவார்,
எனது எதிரிகள் கூட நியாயமாக நடத்தினர்.
நான் சோமாலி.

போர் அச்சத்தில் நான்,
எப்போதும் அமைதியைத் தேடி,
எதிரிகளிடம் நான் பின்வாங்க மாட்டேன்,
அவர்கள் நெருங்கினால்,
என்னை தற்காத்துக் கொள்வேன்,
பகையிடமிருந்து என் முகத்தை திருப்பிடேன்,
கோழையல்ல நான்-
நான் சோமாலி.

காற்றுபோல் விசையாக ஆயினும்
உந்துணர்வு மனிதன் அல்ல,
நஞ்சு போல் வெறி ஆயினும்
சகிப்பில் போர்த்தி,
எங்கெங்கு தேவைப் படினும்
நல்லதைக் கொணர விருப்பமிக்கேன்.
நான் சோமாலி.

என் கண்ணோட்டம் எண்ணாத மனிதனிடம்,
நான் ஒத்துப்போக வலியுறுத்தம்
ஏற்க மாட்டேன்,
உலகின் பிறரிடம் இணைந்து
எனது ஒடுக்கு முறையாளர்களின்
பிணை சங்கிலிகளை அறுத்தெறிவேன்.
எவருக்கும் ஊழியன் அல்லன்,
சுமை அகன்று, சுதந்திரமாய்,
நான் சோமாலி.

என்னை விட மிகுதியான செல்வம்
உடையவனாய் இருப்பினும்,
ஆதரித்து தொண்டாற்ற வராதே,
 உமது பொய் புகழ் எமக்கு விழைவன்று,
அடங்கா ஆசையன்று,
நான் உறங்கேன், நான் பெருவிழிப்பில்.
உமது ஆழமற்ற வாக்குறுதிகள்
இணங்கச் செய்யாது.
நான் சோமாலி.

என் கால் நடைகளை மேய்க்கும்போது,
சமயத்தில் நீ பிரித்திட வந்தாய்,
வீட்டு விலங்குகளை விரட்டுவதுபோல்
என்னை தொலைவாக, பரந்த வெளியில்
பிரித்து விட்டாய்,
ஆனால் எனது இலச்சினையை
நீ மறைத்திட இயலாது;
எனது பணி தற்போது-
எது சரியோ அதைச் செய்வது
எனது கடமை தெளிவாய்-
மீண்டும் எழுதுவது
நான் சோமாலி.

(தமிழ் வடிவத்தில்)