Monday, January 21, 2019

"வாழ்க வள்ளுவம்"

புதுச்சேரி சிந்தனையாளர்கள் அரங்கம், 20.01. 2019 கவியரங்கம்

வாழ்க வள்ளுவம் என்போம்
வளமான வாழ்வு அதன் வழி நிற்போம்
வாழ்வின் அடிப்படை அறம் என்பார்
வாழ்ந்திடும் வாழ்க்கைக்கு பொருள் என்பார்
இன்பம் எய்திட அன்பென்பார்
அறமும் அன்பும் பிணை என்பார்
மறத்திற்கும் மாண்பு சேர்த்திடுவார்
துணை அன்பென்று காட்டிடுவார்
இறையியலில் அறிவியல் பாய்ச்சிடுவார்
இருட்டறை மதங்களை விரட்டிடுவார்
வான் சிறப்பை வகையாய் விளக்கிடுவார்
வாழுவு அதுவே என்று ஊட்டிடுவார்
நீத்தார் பெருமை நீட்டிடுவார்
நித்தில உண்மை நாட்டிடுவார்
கல்விச் சிறப்பை கண்ணென்பார்
கல்லாமை நிலையை விலங்கென்பார்
ஏழைக்கு இரங்கிடும் வள்ளுவம்
ஏற்றமிகு சிந்தனைக் கருவூலம்
பிறப்பொக்கும் சம உரிமை என்றிடுவார்
பிற பிரிவு தொழில் வகைதான் என்றறைவார்
அறிவுச் சமூகத்தின் வடவையாம்
ஆண்ட தமிழினத்தின் செவ் வரியாம்
உலகை உய்விக்கும் உயிர் மறையாம்
உண்மை இது நேர் மறையாம்

No comments: