Saturday, February 28, 2015

இப்படி! அப்படி!
விருப்பப்படி,

இருக்கும் படி!


தப்படியும்,
தாளமடி!

தவிக்கின்ற காலமடி!

தாங்கி நிற்கும்
கோலமடி!



என்னிடத்தை நீ பிடிப்பாயா?
நான் நகர்ந்தால் தான்
நடக்கும்
நடப்பு தெரியாதா?

எம் நகர்வுக்குத் தடை,
உம் வெற்றியாக!

உம் கனவு!
செயல்பாடு!

ஊக்கம் அளித்தவர்
வரலாற்றில்,
தேக்கம் அறியார்.

நோக்கம் புரியா
நோய் மாந்தர்,

இன்னும் நோயின்
பிடியில்,
உயர்விற்காக!

ஒதுங்கி, பதுங்கி
பல்லிலித்து,
பாசக் கயிற்றுடன்........
அதிகாரம்!!

முண்டியடித்து
முந்தி விரித்து,

பந்தி முடித்து
தொந்தி பெருத்து,

சந்தி சிரித்து
குந்தியிருக்கும்......

Tuesday, February 24, 2015

செப்புடு வித்தை காட்டும்
செருப்படியின் கழிப்பு
நீ!

தெருப்படியும் கூசும்
உம் நடைகள்,
கழிப்புகளின் மக்கிய வாசம்
நீ!

கொழிக்கும் மனிதர்
பழிக்கு அஞ்சாமல்,
கோரோசணை என்பார்!

கோணல் புத்தியின் நாணல்
மனிதர்,
நரி ஊளையின் நாற்ற மூளைகள்,
தெரு நாய்கள்
போட்டியின் புணர்ச்சி மைந்தர்

(ஒரு நிகழ்வின் மிகுந்த பாதிப்பில் 2012 ல் மன இறுக்கத்தில் கிறுக்கியது)
(ஒரு புதுமனை புகுவிழாவிற்கு சென்ற பொது ஏற்பட்ட பட்டறிவு)

கழட்டி விட்டேன்,
மீண்டும் பூட்டிக் கொள்ள
திரும்பினேன்.


விட்ட இடம் தேடினேன்,
இடம் மாறியிருந்தாய்
நிறம் மாறவில்லை,
விரிந்திருந்தாய்.

நெரிசலில்
தேடலில்,

இங்கிருந்து அங்கு சென்றாய்
என்றெண்ணி,
தயக்கத்துடன்
செலுத்திய பாதம்,

நெருக்கடியின்றி
தளர்ந்திருந்த பாதுகை,
எமதா?

அய்யத்துடன்,
ஒப்ப முடியாமல்
தவித்து திரும்பினேன்,

எம் பாதங்களை அலங்கரித்த
 நீ!
எவர் பாதங்களை
அலங்கரிக்கிறாய்?
கண்டவை கடந்தவையாக
நின்றவை நேரவையாக

எழுந்தவை ஏங்கவையாக
உணர்ந்தவை ஊடவையாக

என்னவை ஏற்றவையாக
ஒண்மை ஓங்கவையாக

அறிந்தவை ஆக்கவையாக
இழந்தவை ஈன்றவையாக

காலவையின் கூத்தில்
கிறங்கினேன்

Monday, February 23, 2015

அதிரடி முழக்கம்!

உன்னத பேச்சுகள்
ஊடக உலா
காட்சிகள்:
"புலிகளைக் காப்போம்"


அழிந்து வரும் இனம்
ஆள்வோர் அதிர்வு தினம்,
ஆக்கத்தில் இல்லை
அவர் குணம்.

வாழ்விட ஊடுருவல்
வாழ்வச்சத்தில் குடிகள்,
மக்கள் வாழ்விடம் காத்திட
ஆயுதம் தரித்தது
மக்கள் சனநாயகம்,
அதிரடியாக

அந்நியனை அழிக்கும் தோரணை
அதிர் வேட்டு விசையில்,
குண்டுகள் விரைந்து துளைத்திட
கோர மரணம்.

புலிகளுக்கு இல்லை வாழ்வுரிமை!
எவருக்கும் இல்லை காட்டில்!
எங்களைத் தவிர!!

Sunday, February 22, 2015

(2011 அக்டோபர் மாத ஒரு மழைக்கால இரவின் அனுபவம்.ஏட்டில் இருந்தது. இன்று ஏற்றம் பெற்றது)

இடி, மின்னல், போர்க்களம் போல். நள்ளிரவு கடந்தும் மழையின் இழையாக ஓயாது முழக்கம். மனிதர்களே! உங்களால்தான் இயலுமா! தீபாவளி மாதம் உங்களுக்கு மட்டுமா!

நீங்கள் வெடிப்பது செயற்கை வெடி, எம் வெடி, வேடிக்கை இயற்கை! இடைவிடாத மழையுடன் இன்னல் தீர்க்க துரோகம் இல்லை! துயரம் இல்லை! எம்மிடம் பேதம் இல்லை,

செய்கை நியாயப் படுத்தும் வேதம் இல்லை, வெறுப்பு அரசியலும் கை வசம் இல்லை!அனைவரும் சமம் எம் ஆட்சியில், மண் வளம் சேர்த்திடும் எம் வெடி! மனிதர் நலம் கெடுத்திடும் உம் வெடி! ஒரு சாரரை உயர்த்திடும் வணிக வெடி!
உடன் இருந்தே கொல்லும், உருக்குலைத்திடும்.

கடன் சுமந்த மக்கள் கண்ணீரில், காலந்தோறும் கிடங்கியில்,வண்ணக் கனவுகளை அடுத்தவர் அனுபவிக்க, எண்ண கனவுகள் இமைகளை த் தாண்டியும் தாண்டாமல், ஏங்கிய வலியுடன் உள்ள வாழ்க்கை.பொங்கும் உணர்வே பட்டாசாக, பொசுப்பு இதுவே என்றாகி போக்கிடும் இயல் வாழ்க்கை.

எக்கிடும் சாதிக்காரர் எசமான உயரத்தில், ஏற்றுமதியில். எக்காள மொழி ஏழைக்கென்றாகி!
வாழ்க்கை!

அவனைப் பார்த்து
இவனைப் பார்த்து

அங்கே பார்த்து
இங்கே பார்த்து

என்னைப் பார்த்து
என்னுள் அவனைப் பார்த்து
அவனுள் என்னைப் பார்த்து

அங்கே சேர்ந்து
இங்கே சேர்ந்து
அங்கங்கே இருந்து

அவனைத் தாங்கி
இவனைத் தாங்கி

அங்கே வாங்கி
இங்கே வாங்கி

அங்கங்கே வாங்கி
இங்கங்கே வாங்கி
அவனுள் வாங்கி

நேற்று
இன்று
நாளை
என்றாகி,

உணர்ந்த போது
உருண்டோடிடும் ..........

Friday, February 20, 2015

எங்கும் பள்ளம்
புதை குழியாக,

அவர் வெட்டி
மூடியும் மூடாமல்,

இவர் வெட்டி
மூடாமல் மூடி,

போவோர் வருவோர்
பொருமலை தேக்கி
இருமலைத் தூக்கி,

இடர் பல சேர்க்கும்
இரவும் பகலும்.........
இறந்த போது ஏங்கினேன்!

இருந்த போது தூங்கினேன்!



இழந்த போது தேடினேன்! 

சேர்ந்த போது ஓடினேன்!



மறந்த போது நினைத்தேன்!

நினைத்த போது தொலைந்தேன்!
மருத்துவமனையும் துப்புரவும்!

தற்செயலாக ஒரு நெருக்கடியின் பிடியில் அரசு மருத்துவமனை பக்கம் அடியெடுத்து வைக்க நேர்ந்தது.அவசர கதியில் தீவிர சிகிச்சைப் பிரிவு அல்லாடிக் கொண்டிருந்தது.

 மூத்த மருத்துவர்," என்னங்க வயசானவங்களை தனியே அனுப்பியிருக்கீங்க, அவுங்களுக்கு சிவியர் அட்டாக் தெரியுமா" என அழுத்தமான தொனியில் கேட்டுக்கொண்டிருக்க,செவிலியர் ஒருவர் கேஸ் ஷீட்டை காண்பித்து இதில் கையெழுத்து போடுங்க,

 நீங்க என்ன வேணும் என்று வினவிக்கொண்டு, மேலும் கீழும் என்னை நோட்டமிட்டார்.பிறகு நீங்க அனைவரும் வெளியில் நில்லுங்க என்று கதவை இழுத்து சாத்தி கடமை செய்தார்.

தாழ்வாரத்தில், அங்கும் இங்குமாக மனிதர்கள் குத்தம் காலிட்டு உட்கார்ந்து துயரத்தை பங்கிட்டுக் கொண்டிருந்தார். நின்ன கால் நிலைக்க, உட்கார மனமில்லாமல் நாற்காலியை அல்லது விசுப்பலகையைத் தேடினால் விசும்பல்தான் வரும்போல் இருந்தது.

எங்கும் அவைகளுக்கு இடமில்லை.நல்லதுதான் போங்க! இருந்தால் அங்கும் இங்கும் இழுப்பார்கள்,இடத்தை அடைத்துக் கொள்ளும் தொல்லை இல்லை இப்ப! கிடங்கி போல இடம் இருப்பதால் அடைத்து உட்கார்ந்து கொள்ளலாம், படுத்தும் கொள்ளலாம்.

இடையிடையே நோயாளிகளை சுமக்கும் சக்கர வண்டிகளும், கிரீச் கிரீச்சிட்டு ஏற்ற இறக்கமாக, வயதானவர்களைப்போல் தள்ளாடி, லிப்ட்டுக்கள் சென்றும், வெளியேறியும் வினோத பயணம்.

குப்பை கூடைகளுக்கு பொசுப்பில்லை, அங்கும் இங்குமாக, கட்டுத்துணிகளின் மிச்ச சொச்சம்,முகமூடிகளின் முத்திரைகள்,வெற்றிலைப்பாக்கு, சிகரெட்டுத் துண்டுகளின் சிங்காரம்,

 வீசி எறியும் பூக்கள், திண்பண்டங்கள், பொட்டலங்கள் என பலதிறப்பட்ட பொருள்கள் அங்கும், இங்கும் முரசறிவிக்கும் மருத்துவமனை வளாகத்திற்குள்.

முனகலுடன் ,முனகலாய்,கூச்சல் ஒலிகளை சுமக்கும் ஏசி எந்திரங்களின்
வெளியேறும் நீர்வீழ்ச்சிகள் ஓடையாய் எச்சில்கள் சுமந்து, ஈக்கள் பாக்கள் இயற்றும் பான்மை நம்மை நினைவுக்கு கொண்டுவரும்

 நீங்கள் அரசு மருத்துவமனையில்தான் இன்னமும் இருக்கின்றீர் என்று.

தகரக் கொட்டகைக்குள் தொலைபேசி எக்சேஞ்ச்,தாரை தாரையாய் தொங்கும் ஒட்டடைகள் வெளவாள் தோற்கும், உடைந்தும், பெயர்ந்தும்,உரிந்தும் நிற்கும் சுவர் ஓரங்கள்,சுதைப் பூச்சுகள்,கரப்பான் பல்லிகளின் அடைக்கலமாக

 .அட்டைப் பெட்டிகளை அடுக்கி வைத்து, படுக்கை அமைத்து தூங்கும் 'அயராத ஊழியர்கள்'-மருத்துவமனை காப்பாளர்கள்.

மருத்துவமனை உணவு நேரமாகும், சிற்றுண்டி வாங்கி வாருங்கள் என சாலையோர உணவகங்களுக்கு சலுகை காட்டிடும் ஊழியர்கள்,

செவிலியர்கள்.சிரித்தால் முத்து உதிரும் எனக் கவனமாக,உதிராமல் செயல்படும் உயரத்தில் சேவகம்.

விரட்டுவது, வெளியேற்றுவது, அதிகார தொனியில் அதட்டுவது, ஆர்ப்பரிப்பது: அரசாங்க மருத்துவமனை ஊழியம்!

Wednesday, February 18, 2015

பண நாயகத்தின்
சனநாயகம்

பாதை மாறிய 
தனி நாயகம்

கொடிகளின் அணி வகுப்பு
கொள்கைகளின் பிணி தொகுப்பு
வாழ்க்கை

உறக்கம்: நெடுநாள் ஒத்திகை
மரணம்: ஓர் நொடி அரங்கேற்றம்
கூவி விற்கிறார் நெய்!
கூவாமல் விற்கிறார்
பொய்!
உலக தாய்மொழி நாள்

ஒவ்வொரு ஆண்டும் 21,பிப்ரவரி தாய்மொழி நாள் ஆகும்.கிழக்கு

பாக்கிசுத்தான் நாட்டில் வங்க மொழி பேசுபவரின் தாய்மொழி உரிமை

மறுக்கப்பட்டதின் காரணமாக, வங்க மொழி உரிமை, சமத்துவ உரிமை

 முன்னெடுக்கப்பட்டு, ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கு சென்று,  உலக

தாய்மொழி நாள் அறிவிப்புக்கு காரணமாக அமைந்தது.


வங்க மொழி பேசுபவர், வங்காளிகள் தங்கள் பண்பாட்டு கூறுகளில் ஒன்றான

மொழி நலம்பேணுவதில்,காப்பதில் உரிமை உறுதிப்பாட்டில் இந்தியத்

 திருநாட்டின் பிறமொழி-பண்பாட்டு மக்களுக்கு வெளிச்சம் பாய்ச்சுபவர்களாக

விளங்குகின்றனர்.


இந்தியத் துணைக்  கண்டத்திலும், உலகப் பண்பாட்டு வரலாற்றிலும்,

செம்மொழி, தொன்மை மிக்க தமிழ்மொழி, தமிழினம் படும்பாடு, பறிபோய்க்

கொண்டிருக்கும் உரிமைகள் ஏராளம். சிதைந்து, சிதலமடைந்து

கொண்டிருக்கும் வாழ்வுரிமைகளில் , சிந்திக்க ஒரு மொழி,செயற்பட

ஒருமொழி,பிழைக்க ஒரு மொழி, தழைக்க ஒருமொழி என

அடையாளம் நாள்தோறும் தொலைந்து, அடிப்படை இழந்து, ஆர்ப்பரிக்கும்

அரங்க பதுமையாக தமிழர்கள்!


அறிவியல் ஏது? தொழில் நுட்பம் ஏது? என வினாக்கள் எழுப்பிடும் வினோத

கூட்டம்.காரணம் யாதென கவனமுடன் பரிசீலிக்கும் கண்ணியம் இழந்திடும்

 தமிழ் மக்கள்.


நிலம் உம் வசம் இல்லை! வளம் உம் வசம் இல்லை! பயம் உம் வசம் உண்டு!

பாசாங்கு உம் வசம் உண்டு! பள்ளிகளிலும்கூட பளிச்சென்ற ஆங்கிலம்,

 பிற மொழி பயின்றிட பரபரப்பு உண்டு! பேசத் தெரிந்தால் மட்டும்

போதும்.தமிழ் சோறு போடுமா? என்று விடைக்கும் மனப்பான்மை

பரவலாக.ஆட்சிக் கட்டிலில் அமர்வோரும் இதற்கு விதி

விலக்கல்ல.


வியாக்யானம் விசாலமாக,அளந்திடும் திறமை,மொழிப் புலமை

தனி மனிதனே தமிழ் மொழியின் உருவகமாக, பிம்பமாக போற்றிடும் சுவறி,

போக்கிலி மனம், பேதை குணம், பெருகி விளங்கிடும் கட்சி அரசியல்!

கும்மாளம், சிம்மாசனம்,சினேகம், சீர்திருத்தம் யாவும் சில்லரைக்காக!


இன்னும் எத்தனை பத்தாண்டுகள் சென்றாலும் மொழி நாள் நமது வழி நாளாக,

 விடியல் நாளாக சகல நிலைகளிலும், தமிழ் அரியணை ஏறும் நடைமுறை

தினமே மெய்யான தாய்மொழி நாளாகும் தமிழனுக்கு!


 அதுவரை பல தளங்களிலும் தமிழ் மக்கள் உரிமை, சனநாயக உரிமை

எடுத்துச் செல்லப்பட்டு, உரிமை மீட்பு இயக்கம் நமது வாழ்வின் செயல்முறை

இலட்சியம் ஆக வேன்டும்1

Friday, February 13, 2015

அரசியல்: உம் சேவை தொடர்ந்து நில்!

அதிகாரம்: எம் தேவை புரிந்து கொள்!

:
உயிர் தந்தாய்!
உடல் தந்தாய்!
உணர்வளித்தாய்!
உணவளித்தாய்!

உள்ளொளி வெளிச்சம்
பாய்ச்சி,
தன்னொளி குன்றினாய்!

தளர்வுற்ற  போதிலும்
தாளாண்மை கூட்டினாய்!

வேளாண்மை குறைந்திடும்
வேளையில்,

சூழல் மேலாண்மை
மெருகூட்டி,

மேன்மை காட்டினாய்!

(இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யா நினைவாக)
விடுவித்த பிறகும்
சிறைக்குள்,

எம் பார்வையில்!

விடிந்தும் விடியாத
பொழுது,

உம் விடுதலை!

விரைந்து
தொழில் ஏற்கிறாய்!

கரைந்து
கடமை சேர்க்கிறாய்!

Thursday, February 12, 2015

இராணிப்பேட்டை சிப்காட் தொழிலாளர்கள் துயரம்
தொடர் கதையாகும் மரணம்!!
**********************************

கனவுகளின் பிடியில் கைதியாக
கதவுகள் ஏதுமின்றி,
நாளும் தேய்ந்து, ஓய்ந்து
உறங்கிய நீ,
உழைப்பத்தான் விற்று வந்தாய்
உயிரை அல்ல!

விடியல் உம்மை சகதியாக்கும்
கழிவுத் தொட்டி
பலி(ழி) வாங்கும்
கழிவோடு கழிவாக
கழித்துக் கட்டும்
கதி நீ அறியாய்!

பாதுகாப்பு முதலீட்டுக்குத்தான்!

பரிதாபம்,இரங்கற்பா,நிவாரணம்
இழப்பீடு!!

சடங்குகளின் பிடியில்
சாமர்த்திய நர்த்தனம்,

அரசு எந்திரம்
எடுத்தாளும் தந்திரம்,
எகத்தாள மந்திரம்........

Wednesday, February 11, 2015

முறிந்த நட்பு
முளைத்த செடி

கிளைத்தது

நாள் தோறும்
பராமரிப்பில்

தண்ணீர் வார்க்கும்
தவிக்கும் நினைப்புகள்

காலங்களில் கரையும்
கவின்  கோலங்கள்

ஆவல் கூட்டும்
நாவல் மரங்கள்
ஆவுடையார் மரம்
அன்னாந்து பார்க்க
வைக்கும்,

அப்படியும் இப்படியும்
செல்லும் காலம்,
ஓரமாக இருந்தாலும்
ஈர்க்கும் மண(ன)ம்.

சிந்தும் பூக்கள்
சேகரிக்கும்
மக்கள்,

தேனீக்கள்
கெஞ்சும்

சிவ தலங்களின்
சீரிய விருட்சம்
காய்ந்தது ஏனோ
என பதறிய
உள்ளம்

கதறிய எம்மிடம்
சூழல் வினைஞர்
பகிர்ந்த துயரம்

"சாராயக் கடை உரிமையாளன்
மனையில் இருந்த
சங்கடம்
சடுதியில் அமிலம்
வேரில்
விட்டழித்த
வீணன்
கட்டிடம் காப்பாற்ற
சாய்த்தனன்"

Tuesday, February 3, 2015

ஆன்மீக வழியும், ஒழுக்க ஒழுகலாறு உள்ளிட்ட, நெறிமுறை அடிப்படையிலானதே ஆகும்.எம் மார்க்கமும் மனித வாழ்வை செப்பனிட,  பண்படுத்த அதற்குரிய கால,சமூக சூழலில் கால் பதித்து, ஊன்றி நின்றது.

அதற்காக பல்வேறு இடர்களை சந்தித்து, ஓங்கியது, ஓய்ந்தது, ஒருங்கிணைந்தது என அறியப்படுகிறது.சில இடப் பெயர்ச்சிக்கு ஆளாகி பிற தேச சமூகங்களில் செறிவான வரவேற்பை பெற்றது.

ஓரு புறம் ஆன்மீகம் பேசுவதும், மறுபுறம் ஒழுக்க சிதைவான பாதையில் பயணிப்பதும், பயன் அடைவதும்.இது வேறு, அது வேறு என சுய நிறைவு, தற்காப்பு பாணியில் விளக்கம் அளிப்பது, நியாயம் கற்பிப்பது எவ்வகையிலும் முறையன்று!
ஒரு நிலையில் பார்த்தால் தம் மனம் அடகு வைக்கப்படுதலுக்கு இணையாகும்.

பிறந்தது முதல் அணிவிக்கப்பட்ட முகமூடியை முற்றிலும் வசப்படுத்தி
வாழ்க்கையை ஓட்டுவது, அறிந்தே இவ்வாறு முனைந்து செல்வது ஒழுங்கு
ஆகாது.
தெரிந்த மொழி
தெரியாத பாதை!

அறிந்த மனிதன்
அறியாத மனம்!
விரிவாக்கம்

காவல் பூமி!
காலியான சாமி!
முகம்!

ஒப்பனை மனிதா!
பொழுதும்
வாய் பேசி,
வக்கனையாக,
வேடம் தரி!
மூடி
அணி!
முக்காலும்,
முழுசுமாக