"வேலைக்காரன் திறமையை வெய்யிலில் பாரு"
எதற்கு இப்படி சொல்கிறார்? என்ன?
இது கொ ச்சையா? அன்றி
பச்சையா?
இந்த சொல்லாடல் சூ ட்சுமம் புரியாமல் தவித்த வயது. படிப்பறிவு இல்லாத காரணத்தினால் அம்மா இப்படி , கொச்சையாக, அல்லது அசிங்கமா பேசுகிறார் என்று கூட எனக்கு நானே சுய விளக்கம் கொண்டு ,வெட்கப்பட்டு , விலகியது உண்டு.
எங்கள் வீட்டு எதிரில் மண்ணாங்கட்டி ஐயா , அப்பாவின் பால்ய நண்பர்.சலவையாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். தாயா, பிள்ளையா குடும்ப பழக்கம் உடையவர். வன்னியர் தெரு மருவி, வண்ணார் வீதி ஆகி இருந்தது. மூன்று வீடுகள், பூர்வீ க சொத்து உரிமையாக இருந்த காலம்.
இதில், எங்கள் குடியிருப்புக்கு எதிர் புறத்தில் அவர்கள் வீடு கட்டிக் கொண்டிருந்த சமயம். சிமெண்ட் உபோயோகம் அரிதான காலத்தில், கரசூர், தொண்டமாந த்தம் கிராமங்களின் சுண்ணாம்பு சூலையில் இருந்து , கட்டை வண்டியில் ஏற்றி வரப்படும் சுண்ணாம்பு. புளிக்க வைத்து,இடித்து, பக்குவப் படுத்தி எடுக்கும் பெண்கள் ,பாட்டுப்பாடி பூசு வேலைக்கு ஆயத்தம் செய்வார்கள்.
சுமார் ஓராண்டுக்கு மேலாக , அவசர கதி தவிர்த்து, கட்டு வேலை , பூசு வேலை , மெல்ல,மெல்ல, உறுதியாக நடந்து கொண்டிருந்தது.
கிராமத்தில் வயல், வரப்பு வேலைகள் இல்லா சமயத்தில் கொத்தனார் வேலை. அது தருணம்,நாட்டுப் புற பாடல்கள் நளினமாக வந்து விழும். உலக் கைகள் தாளத்தில். சிறுவர்கள் வேடிக்கைப் பார்க்க ,சிரமமின்றி அரங்கேறும்.
பொன்னி ஆயா , கூரை வேயப்பட்ட ,எதிர் வீட்டு வாசற்படியில் குத்தங் காலிட்டு அமர்ந்து உற்சாகமாய் வேலை வாங்கிக் கொண்டு, அம்மாவிடமும் ,வீட்டுக் கதைகள் சன்னமான குரலில் பேசிக் கொண்டிருப்பார்
இந்த உரையாடலில் , குடும்ப பிரச்னை உள்ளிட்ட அம்சங்கள் வந்து இறங்கும்.சுமை இறக்கி வைத்தாற்போல. இதன் மத்தியில் எங்கள் காதில் வாங்கிய வரிதான் இது.
வெய்யிலில் வேலை செய்யும் மேஸ்திரி,சித்தாள் குறித்து, அவர் வேலையின் கீர்த்தி , அல்லது நேர்த்தி சம்பந்தப்பட்டது என்ற புரிதலில் மட்டும் அப்போதைக்கு அறியப் பட்டது.
சில காலம் கழித்து, கடுமையான காற்று, மழையில் ,மோட்டு வலை பிய்ந்து பறந்த கூரை வீட்டில், உள்ளே மழை கொட்ட, இருக்கும் சட்டி, பானைகள், பண்ட பாத்திரங்கள் நீர் பிடிக்க, சிறு,குட்டைகளாக நனைந்தது.
கேஸ் பலகைப் பெட்டிக்குள் கொம்மை வைத்த அடுப்பு வைத்து , பொங்கி சாப்பிட்டு,மழைக் காலத் தை சமாளித்த பிறகு, வானம் வெளுத்த பின், தென்னை ஓலைக் கீற்று , தேங்காய்த் திட்டில், தோப்பு கீற்று, பார்த்து வாங்கி வந்து ,மீண்டும் கூரை போடும் வேலை எங்கள் வீட்டில் நடந்தது.
கீழிருந்து மேலே ,வரிசையாக ஓலைகளை அடுக்கி ,தென்னை பாலை நாரில் , ஒன்றோடு ஒன்று பிணைத்து, அட்டி, அட்டியாய் வேலை நடக்கும். மூங்கில் கழியில் சொருகி மேலே உயர்த்தி கொடுப்பார்கள்.உயரம் போகப் போக ஏணியில் ஏறி நின்று, ஒத்தாடையுடன் பணி நடக்கும்.
முகடு எட்டியதும், மறு பக்கம் இருந்து கூரை வேயப்பட, படிப்படியாக, மோ ட்டு வலை மூடுவதுதான் உச்ச கட்டம். பொதுவாக,மழைக் காலங்களில், சூறைக் காற்று ,கூரை வீட்டில் வசிப்பவர் வயிற்றில் புளியைக் கரைத்து விடும். மேட்டு வலையை பதம் பார்த்து விடும்.
வெய்யில் காலங்களில் குளு, குளு என்று இருக்கும்.அதன் அனுபவமே அலாதியானது. தென்னை நார் கயிற்றுக் கட்டிலில் சொகுசாக அப்பா உறங்க, அவர் சென்ற பின், இடத்தைப் பிடிக்க போட்டியில் நாங்கள் முந்துவோம்.
கோடையில், அவ்வாறு படுத்துக் கொண்டு மோட்டு வலையைப் பார்க்க, சூரிய ஒளிக் கற்றை ஒன்றிரண்டு நட்சத்திரங்கள் போல வீட்டினுள் பிரகாசித்தது. இதைப் பார்த்து பரவசப் பட்டு அம்மாவிடம் தகவல் சொல்ல அவரும், "அடடா, மழைக்குப் பின் , மப்பும், மந்தாரமாக இருக்கும் போது கூரை அவசர கதியில் போட்டது. இப்பத்தான் புரியுது, பொன்னி ஆயா சொன்னது. "வேலைக்காரன் திறமையை வெய்யிலில் பாரு" , அர்த்தம் "
அட, பேச்சு வழக்கில் நம் முன்னோர்கள் எவ்வளவு அழகாக, ஒரு வேலையைப் பற்றிய கணிப்பை, மதிப்பை, மிக எளிமையாக நமக்கு விளக்கி உள்ளார் என்று உணர முடி.கிறது.