"அறுத்துகிச்சாம். கழுதை, எடுத்துகிச்சாம் ஓட்டம்"
வெய்யில் காலங்களில் அப்போதெல்லாம் இரண்டு மாதங்கள் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடுவது வழக்கம்.
பெரும்பாலும் தார்சாலைகள் போடாத வீதிகள். இருபுறமும் வீடுகள் அமைந்த அமைப்பு. திண்ணைகள் கொண்ட இல்லங்கள்.புறக்கடையில் கிணறு, தொட்டி கக்கூஸ், வேப்ப மரம், செடி செட்டுகள் கிணற்று நீரே குடிக்க, கொப்பளிக்க என அனைத்து உபயோகமும்.. மின்சார இணைப்பு ஒன்றிரண்டு வீடுகளில்தான்.பெரும்பாலான இல்லங்கள் கா விளக்கு, அரி க்கன் விள க்குகளில் இராப் பொழுதைக் கழிக்கும்.
தெரு சாக்கடைகள் தேக்கம் இல்லாது ஓட்டத்தில், தவளைகள் வாழும் இடமாகவும் விளங்கியது.கொசுத் தொல்லைகள் அற்ற ஊராகவம் இருந்தது.மணற்பாங்கான இடங்களில் வீட்டுக்கு வீடு, முன் கட்டில் முருங்கை மரங்களை பார்க்கலாம். தெரு முனையில் இருந்த கோவில் மதிற் சுவர் ஒட்டிய பகுதியில் தென்னை மரங்கள் அலங்கரிக்கும். அடுத்து, தண்ணீர் குழாய். பொதுமக்கள் தேவைக்கு இருக்கும். பக்கத்தில் பன்னீர் பூ மரம் வெள்ளை பூக்களுடன் வாசனை பரப்பும்.
வீதிக்கு வடக்கில் விட்டு ,விட்டு பூவரச மரங்கள் அணி வகுக்கும். வரிசையாய் கூரை வீடுகள் நேர்க்கோட்டில் தெற்கு பார்த்த அமைப்பில். புறக்கடை இறக்கம் தனுசு பிள்ளை தோப்பு. மிகப்பெரிய தென்னந்தோப்பு பெருவாரியான மக்களுக்கு இயற்கை உபாதை கழிக்கும் வாய்ப்பாக அமைந்தது.
இத்தகைய புற சூழலில், கோடைக்கால சிறார்கள் மாணவப் பருவம் விளையாடி, பொழுது போக உகந்ததாக இருந்தது.வீட்டில் உள்ள பாட்டிகள் கதை சொல்ல, விடுகதை போட ,ஒரே ஆரவாரமாக , ஆரோக்கியமாய் பொழுதுகள் புலரும்.
வீட்டில் கொழுக்கட்டை, கடலை அவித்து தருவது. எள் அடை, வெள்ளை முறுக்கு, கடல்பாசி, கமர்கட்டு, கசகசா மிட்டாய் என பலவகை தின்பண்டங்கள் தெருவில் விற்கும், வாட்ச் மிட்டாய் பாட்டுப்பாடி, பிள்ளைகள் கையில் கட்டி, தாடையில் கொசிரு ஒட்டி செல்லும் வியாபாரி.இவையாவும் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
நுங்கு, பலாச் சுளை, மாம்பழம், மல்லாக் கொட்டை, கொண்டைக் கடலை போன்ற பண்டங்களும் நாவின் சுவை தணிக்க பட்டியலில்.இல்லங்களில் சுட்டு அளிக்கும் முறுக்கு, கொழுக்கட்டை வகைகள் கூடுதல் தீனி என்றால் மிகையாகாது.
சொந்த, பந்தங்கள் வீட்டிற்கு விடுமுறை காலப் பயணம் செல்வதும் உண்டு.அதில் வீட்டு சடங்குகள், சம்பிரதாயங்கள் என்று பல நிகழ்ச்சிகள் இணைவது உண்டு.
சலிக்க வெய்யிலில் ஆடுவது, பம்பு செட்டுகளி ல் குளிப்பது, உண்டி வில் அடிப்பது, மீன் பிடிப்பது, நீச்சல் பழகுவது ஆகியவை களும் அடங்கும்.வீட்டுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு, ஆட்டம் போட்டு அலு த்து , திரும்பி கண்டிப்பும், தண்டனையும் அடைவதும் உண்டு.
அம்மை நோய் வாரி கொட்டி அவதி படுவது, கை கால்களில் சிரங்கு வந்து, நீல மருந்து, மற்றும் மருந்து கடைகளில் கிடைக்கும் எஸ் பவுடர் தேங்காய் எண்ணெய் குழைத்து, பூசுவதும் வழக்கம்.
கோடை விடுமுறை முடிந்து பிள்ளைகள் எப்போது பள்ளிகளுக்கு ச் செல்லும் என்று பெற்றோர் ஆவலுடன் எதிர்பார்ப்பதும் உண்டு. அத்தகைய சூழல் குறித்து அண்டை வீட்டாருடன் வாடிக்கையாக பேசும்போது உதிர்க்கும் சொற்றொடர், " அறுத்துகிச்சான் கழுதை, எடுத்த்துகிச்சாம் ஓட்டம்", என்பது.
அம்மா எங்களிடமும் , நாங்கள் அடங்காமல் ஆட்டம் போடும்போது, இவ்வாறு கூறியது உண்டு.
உண்மையில் , குதிரையைக் கண்டதை விட கழுதையைப் பார்த்ததே அதிகம். அதிலும் அதன் குட்டி ,அவிழ்த்து விட்ட சமயத்தில் அதம் பறக்கும் விதமாய் அயராது ஓடி, புழுதி கிளப்பும். அவ்வளவு எளிதில் அதை மடக்கி பிடித்து விட முடியாது.