Saturday, December 29, 2007

மோதல் கொலை கலாச்சாரம--3

தேசிய மனித உரிமை ஆணையம் மேற்பார்வை உள்ள அமைப்பாக, குற்றம் இழைப்பவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடியதாக இருந்தாலும், போதுமான மூல வளங்கள் இல்லாததின் காரணமாக, புலனாய்வு செய்யக் கூடிய ஊழியர் பற்றாக்குறை உள்ளதின் காரணமாக, பரிந்துரை செய்யக் கூடிய சட்ட அதிகாரம் மட்டும் உடையதாக விளங்குகிறது.

இதன் விளைவாக, காக்கி உடையில் உள்ளவர்கள் துறை ரீதியான ஒழுங்கு நெருக்கடிகள் மற்றும் புற நிலை அமைப்பின் மேற்பார்வையிடல் அதிகார அழுத்தமும் இன்றி, செயல் படுகின்றனர். மேலும் அரசாங்க ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்திட, குற்றவியல் விசாரணை நடைமுறை சட்டம் பிரிவுகள் 132 மற்றும் 197 ன் கீழ் மத்திய அரசு அல்லது மாநில அரசு ஆகியவைகளிடம் முன் அனுமதி பெற வேண்டும்.

அரசு அனுமதி பெறுவது என்பது அவ்வளவு எளிமையானது இல்லை. உடனடியாக நடக்கக் கூடியது இல்லை.எனவே மோதல் பெயரில் கொலைகள் செய்திடும் ,நிகழ்த்திடும் குற்றச்சாட்டுகள் எழும் காவல் துறை அதிகாரிகள, எவ்வித பாதிப்பும் இன்றி, எழுதப்படாத விதி விலக்காக திகழ்கின்றனர்.

அரசாங்கத்தின் அனுமதி ஒருவேளை கிடைத்தாலும் குற்றம் இழைப்பவரை கூண்டல் ஏற்றி தண்டனை அளிப்பது என்பது ,ஒரு நெடிய பல ஆண்டுகள் நீடிக்கும் நீதி மன்ற போராட்டமாகவும், பெருந்தடையாக உள்ளது. நீதிமன்ற தீர்ப்பு வரும்போது, குற்றம் சாட்டப்பட்ட காவல் அதிகாரிகள் பல கட்ட பதவி உயர்வுகள், அல்லது பணியில் இருந்து ஓய்வு பெற்று இருப்பார்.

காலத்தின் தேவை
மோதல் கலாச்சாரத்தை போக்கி, பொறுப்பு கலாச்சாரத்தை காவல் துறையினர் மத்தியில் உருவாக்குவது என்பது பெரு முயற்சி ஆகும். இதற்கு பல முனை அணுகுமுறை தேவைப்படும். மிகப் பெரிய பிரசனை ஆயினும், இதிலிருந்து நம்மால் ஒதுங்கியிருக்க முடியாது.

நமது சனநாயக கொள்கைகளைக் காத்திட வேண்டுமெனில், மோதல் கொலைகள் சட்ட ரீதியான மற்றும் நியாயமான காவல்துறை பணி எனும் சிந்தனப் போக்கு காவல்துறையினர் மத்தியில், அரசியல்வாதிகள் மத்தியில் மற்றும் பொது மக்கள் மத்தியில் நீடிக்கும் வரையில் மாற்றத்திற்குரிய தடைகள் ஏராளம். கடுமையான துறை விசாரணை அமைப்புகள் உடனடி தேவையாகும்.

காவல்துறை சட்டங்கள மற்றும் காவல்துறை சீர்திருத்தம் தேவை.காவல்துறை குறிப்பேடுகள் தேவை. காவல் துறையினரால் இழைக்கப்படும் குற்றங்களை வகைப்படுத்தி, அதன் தீவிரத்திற்கு ஏற்ப குற்றம் இழைத்த காவல் அதிகாரியின் பதவி நிலைக்கேற்ப, நடவடிக்கை எடுக்கக்கூடிய அதிகாரிகளை, நிர்ணயம் செய்திட வேண்டும்.


மோதல் கொலை கலாச்சாரம்- 2

நாட்டில் மோதல் கொலை கலாச்சாரம் மேலோங்கி இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. முதலாவது, காவல்துறை, கொலை நிகழ்த்தும் சீருடையில் உள்ளவர்களுக்கு பரிசுப்பொருட்கள், பணமுடிப்பு,பதக்கம் ஆகிய வெகுமதிகள் அளித்து அவர்கள் கொலை நிகழ்த்த ஊக்கப்படுத்துகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டுவது என்கின்ற போர்வையில் அப்பாவி பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். பரிசுப் பொருட்களை அறுவடை செய்து மகிழ்ந்தனர். காவல்துறையின் அத்து மீறல் குறித்து புலன் ஆய்வு இன்றும் நிலுவையில் உள்ளது. கிளர்ச்சிக்காரர்கள் மீது பஞ்சாப் காவல் துறை நிகழ்த்திய பயங்கரம் காவல்துறையின் ஒழுங்கை மட்டுமில்லாது, பொது ஒழுங்கையும் வெகுவாக கெடுத்துள்ளது.

காவல்துறையின் அதிகார மீறல் போக்குகள், அதன் விளைவுகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. காவல் மரணங்கள் பஞ்சாப் மாநிலத்தில் அதிகமாக காணப்படுவது, இச்சூழலில் ஆச்சரியப்படுவதாக இல்லை!

இரண்டாவதாக, போலி மோதல் சாவுகள் பிரச்சனையில் பாரபட்சமற்ற, நம்பகமான புலனாய்வு செய்வதற்கான துறை ஏற்பாடு முற்றிலும் இல்லை. சரியான விசாரனை இல்லாமல், குற்றம் இழைப்பவர்கள் மீது வழக்கு தொடர்ந்து தண்டனை அளித்திடுவது என்பது ,அதிக நம்பிக்கை அளிப்பதாக இல்லை.

Monday, December 24, 2007

உதயமானேன்!

தமிழா!
நம்பினேன்!
உருப்படுவாய் !
உரிமை காப்பாய் !

மொழி காப்பாய்!
வழி திறப்பாய்!
என்று!

விழித்திருந்து,
உறங்க வைத்தாய்!
உரிமை கிறங்க
வைத்தாய் !

'சேதுவை மேடுறுத்தி
வீதி சமைப்பாய்'
என்று!
நீ !
சேத்துப்பட்டில்
வீதி சமைத்தாய் !

சோத்துப் பாட்டிற்கு
கையேந்தும் சோதனை!
தமிழ்நாடு!

சாதனை செய்ய
ஏன் மறந்தாய்?

திக்கெட்டும் செல்வாய்!
செல்வம் கொணர்வாய்!
சிங்காரத தமிழ்
ஏற்றுவாய்!
என்றிருந்தேன்!

ஏறினாய்! நீ !
ஏமாந்தது!
தமிழ்!

படத்தை போட்டாய் !
பாடத்தை மறந்தாய்!

ஆனந்த சுதந்தரம்
அடைந்தாய் என்றேன்!
ஏமாற்றமே !

ஆனந்தம்
இல்லை !
சுதந்தர ம்
இல்லை!
சந்தி சிரிக்க,
வைத்தாய் !

உழைக்கும் கூட்டம்
உயர்வில்லாது !
சுரண்டும் கூட்டம்,
சொர்க்கபுரி
அமைத்திட!

உலகமயமாக்கும்
ஊடுருவச் செய்தாய் !

ஊர் உயர,
உழவு உயர,
யாது செய்தாய்?

' நந்தியாய்,
சிங்கூராய்,
கலிங்கமாய்,
குர்கானாய்,'
'சிறப்பு' செய்தாய் !

ஏரின் பெருமயை
நீரில் கரைத்தாய்!
' நீண்ட பயணத்தை'
நிர்கதியாக்கினாய் !

'வேண்டினேன்
பராசக்தியை'
'மீண்டும் பிறந்திட,
வேர்களைக் காத்திட',

உதயமானேன்!
'ஏ.கே ௨007'
உடன்!

Tuesday, December 18, 2007

யாருக்காக?

உணவு பாதுகாப்பு
2008ல்,

* இந்தியாவில் உணவுப் பண்டங்களின் விலை மிகவும் அதிகரிக்கும;

* வேளாண்மை உணவுப் பண்டங்கள் உற்பத்தி மிகவும் குறைந்து போகும;

* ஐ.நா. மன்றத்தின் புள்ளி விவரப்படி,கிராமப் பகுதியில், தானியங்கள் நபர் ஒன்றுக்கு,
152 கிலோ கிராம் மட்டுமே கிடைக்கிறது.
* 1990ல் கிடைத்த அளவிற்கு 23 கிலோ கிராம் குறைவாகவே கிடைக்கிறது.

* மிகுந்த வறிய நிலையில் உள்ள மக்களில் 30% விழுக்காட்டினர்,

நபர் ஒன்றுக்கு, நாள் ஒன்றுக்கு 1700 கலோரிகள் மட்டுமே உட்கொள்கின்றனர்,

* உலக நாடுகளின் குறைந்த பட்ச தரம், 2100 கலோரிகள், நாள் ஒன்றுக்கு

70% சதவீத வருவாய் செலவு செய்து, 1700 கலோரிகளுக்கும் குறைவான உணவு சாப்பிட்டு வாழும் சூழலில், வளர்ச்சி வீதம்; உயரமான கட்டிடங்கள்; கணணி வளாகங்கள்; அழகிய தார்சாலைகள்; புதிய தொழிற்சாலைகள் போன்ற புற வளர்ச்சி நிலைகள். யாருக்காக?

66% விழுக்காட்டினர் நாள் ஒன்றுக்கு 20 உருவாய்க்கும் குறைவான வருவாயில் ! அரசியல் சட்டம் சொல்லும்"இந்திய மக்களாகிய நாம், நமக்கு நாமே அளித்துக் கொண்ட..." யாருக்காக?

Friday, December 14, 2007

'மோதல் சாவு கலாச்சாரமும்', காவல் துறையும் 1

புசுகர் ராசு மற்றும் சோபா சர்மா

மோதல் சாவு போர்வையில், காவல் துறையினரால் இரண்டு வியாபாரிகள் கொல்லப்பட்ட வழக்கில், பத்து காவலர்கள் குற்றவாளிகள் என அண்மையில் தில்லி உயர்நீதி மன்றம தீர்ப்பளித்தது. இது, பெருகிவரும் மோதல் கொலை கலாச்சார பிரச்சனையை, சமூகத்தின் முன் நிறுத்தியுள்ளது. மோதல் சாவுகள் குறித்து பொது மக்கள:' இது காவல் துறையின் வழக்கமான, அவசியமான நடவடிக்கைகள் ஆகும் என்பது'.

மோதல் சாவு் குறித்து, காவல்துறை தீர்மானிக்கும் அதிகாரம் குறித்து, ஆய்வு செய்திட தீர்மானகரமான ஏற்பாடுகள் இல்லை.போலி மோதல் சாவுகள குறித்து எழுப்பப்படும் புகார்கள் குறித்தும புலன் விசாரணை செய்திட,சுயேச்சையான ஏற்பாடும் இல்லை என்பதே, நிலையை மிகவும் அபாய கட்டத்திற்கு தள்ளி உள்ளது எனலாம்.

வணிகர்கள் பிரதீப் கோயல் மற்றும் சகசித்சிங், புதுதில்லியில் நடு நாயகமான இடத்தில் காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் கண்டனக் குரலை எழுப்பியது. எழுந்த நெருக்கடியின் காரணமாக காவல்துறை ஆணையர் பதவி விலக நேரிட்டது. கொலை வழக்கு சி.பி.ஐ'ன் விசாரணைக்கு அளிக்கப்பட்டது.

பலியானவர்களின் குடும்பத்தினர் வசதி படைத்தவர்கள். இதன் காரணமாக வழக்கு முடிய பத்தாண்டுகள் ஆகியது என்றாலும், வழக்கத்திற்கு மாறான மன உறுதியுடன் வழக்கினை நடத்தினர். என்றாலும், பெரும்பான்மை வழக்குகளில் காவல்துறை வாதங்களை ஊடகங்களும், பொதுமக்களும், அவர்கள் கூற்றுப்படியே ஏற்கின்றனர்.

தில்லி கோனாட் பகுதி மோதல் கொலையிலும், காவலர்கள் தற்காத்துக் கொள்ள திருப்பிச் சுட்டதின் காரணமாகவே அவர்கள் இறந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. உண்மையில், கொலை செய்யப்பட்டவர்கள் உடல் அருகே பழைய துப்பாக்கியை வைத்து தடயங்களை மாற்றினர்.எனினும் அவர்கள் சொல் எடுபடவில்லை.

அதிகரிக்கும் போக்கு
அண்மைக் காலமாக மோதல் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தேசிய மனித உரிமை ஆணையத்தின் புள்ளி விவரப்படி (சம்மு காசுமீர் தவிர்த்து) 2002--03ல் 83 பேர் கொல்லப்பட்டனர்; 2003-௨004ல் 100 பேர் கொல்லப்பட்டனர்; 2004- 2005ல்-- 122பேர் கொல்லப்பட்டனர். உத்தரப் பிரதேசத்தில் இக்காலக் கட்டத்தில் 41, 48, 66 கொலைகள், காவல் துறையால் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆந்திராவில் 41 பேரும் கொல்லப்பட்டனர். அமைதியான மாநிலமான உத்தரக்கண்டும் 12 மோதல் கொலைகளை நிகழ்த்தி தம் கடமையை நிறைவேற்றியுள்ளது.

மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் அறிக்கை - மொழியாக்கம்

Tuesday, December 11, 2007

பாரதி நெஞ்சம்!

மொழிப்புலம் காத்திட,
வழிப்புலம்
செய்திருப்பான!
தமிழரைக் காத்திட,
தாண்டியும்
சென்றிருப்பான்!

தோள் வலியால்,
தமிழ்த் தேசியத்தைக்
காத்திருப்பான்!

இன்னலை எதிர்கொள்வதில்,
இன்முகம்
காட்டியிருப்பான்!
இறும்பூது
அடைந்திருப்பான்!

இமயத்தில் உலாவிய நீ,
தென் திசையை ,
இலகுவில் கடந்திருப்பாய்!

இந்திய தேசத்திற்கு,
இறவாப் புகழ்
சேர்த்திருப்பாய!

புதுப்பரணி பாடி,
தரணி புகழ்
தமிழனுக்கு
சேர்த்திருப்பாய!

சோம்பல் தமிழனின்
சோதனை தீர,
சூடேற்றியிருப்பாய்!

காட்டுத்தீயாய்
சனாதனவாதிகள்
சட்டையை உரித்திருப்பாய்!

உரிமைக்காத்திட,
ஊரைத் திருத்திட,
உலக்கையாய்
இடித்திருப்பாய்!
உணர்வை
எழுப்பியிருப்பாய்!

கடல் கடந்து வாழும்
தமிழரின் ,
களை இழந்த,
நிலை உயர்த்திட!
ஏவுகணையாய்!

கண்டம் விட்டு
கண்டம்,
பாய்ந்திருப்பாய்!

காவிகளை மிதித்து
காவியம் நிகழ்த்த!
தமிழனின்
தனி மானம்,
பதித்திருப்பாய!

காலனை உதைக்கும்
வைர நெஞ்சம!
அஞ்சா நெஞ்சம்!

கோள் வாழ் குறை
கொதித்து,
மிதித்து,
கோணல் நிமிர்த்தியிருப்பாய!

குயில்களின் சோலை
எங்கும் புதுக்கி ,
புதுமை
கூட்டியிருப்பாய் !

காற்றும் மழையும்,
வானும், நீரும்,
நிலமும்,
மலையும், காடும்

நீக்கமற நிறைந்திடும்
புதுப் பாரதம்,
சூழல்
மாற்றியிருப்பாய!

Saturday, December 8, 2007

புண்ணிய புதுவை!

போக்கும் சரியில்லை!
போக்குவரத்தும்!
சட்டமும்!

இல்லை!
ஒழுங்கும்!
சாலைகளில்!
வேலைகளில்!


மாரியும் இல்லை!
மாறுதலுமில்லை!
கோரிய மழையும் ,
வடகிழக்கில்
இல்லை!


கால் பங்கு மழையும்,
கவலை
தீர்க்க வில்லை!
ஏரிகள் ஏதும்,
நிறையவில்லை!


படகு,
உணவு விடுதி,
சுற்றுலா வளர்ச்சி!
பொழுது போக்கு
குறைவில்லை!


தண்ணீர் விளையாட்டு!
நீர் இருந்தாலும்....
நேரிய வழி,
எமக்கு
தேவையில்லை!

தவி,
புட்டியலுடன்....

Tuesday, December 4, 2007

இந்தியா- வளர்ச்சிக் குறியீட்டு எண்!

இந்தியா, அய்க்கிய நாடுகள் சபையின் மனித வளர்ச்சிக் குறியீட்டு எண் 126லிருந்து 128க்கு கீழ் தள்ளப்பட்டுள்ளது, இது நல்ல செய்தி அல்ல. அய்க்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித்திட்டம் 1990லிருந்து, ஆன்டுதோறும் மனித வளர்ச்சி அறிக்கையை தயாரித்து வருகிறது. வளர்ச்சித் திட்டத்திற்குப்பின் மக்களை மையப்படுத்தும் நோக்கத்திற்கு, முக்கியம் அளித்து இவ்வறிக்கையை தயாரித்து வருகிறது.

1. வாழ்நாள் நீட்டிப்பு
2. முதியோர் கல்வி அளித்தல்
3. மக்களின் வாழ்க்கைத்தரம்,

ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, இவ்வறிக்கை தயார் செய்து, இறுதி செய்யப்படுகிறது.

இந்திய அரசு கல்விக்கு 1991ல் 12.2% சத வீதம் செலவு செய்தது. 2005ல் 10.7% சதவீதமாக இது குறைந்துள்ளது. 58% சதவீத குழந்தைகள் மட்டுமே காச நோய் தடுப்பு ஊசி அளிக்கப்பட்டுள்ளது. 22% சதவீதம், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை மட்டும் வயிற்றுப்போக்கு அளிக்கப்படும் வாய் வழி மருந்து அளிக்கப்படுகிறது.

பசுமையக வளி வெளிப்படுதுதல் பிரச்சனையிலும், இந்தியா அதிக அளவு வெளிப்படுத்துதல் காரணமாக மனித வளர்ச்சிக் குறியீட்டு எண் 126லிருந்து 128 க்கு கீழிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அய்க்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித்திட்டம் 2050க்குள் பசுமையக வளி/ காற்று வெளிப்படுத்துதலை 1990ன் அளவிற்கு ஒப்பிடும்போது 50% சதவீதம் குறைக்கப்பட வேண்டும் என இலக்கு நிரணயிக்கப்பட்டுள்ளது.

வளர்ச்சி அடைந்த நாடுகள் 80% சத வீதத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். 2020க்குள் 20 லிருந்து 30% விழுக்காடு வரை குறைத்துக் கொள்ள வேண்டும். வளர்ச்சி அடையும் நாடுகள் 20% சதவீதம் குறைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவித்துள்ளது. அய்க்கிய அமெரிக்க நாடு, ஆண்டு தோறும் நபர் ஒன்றுக்கு, 20 டன் அளவு பசுமையக வளியை வெளிப்படுத்துகிறது. மிக அதிக அளவிலான பசுமையக வளியினை வெளியிடுகிறது. இந்தியா ஆண்டு தோறும், நபர் ஒன்றுக்கு 1 டன் பசுமையக வளியை வெளியிடுகிறது.

Friday, November 30, 2007

அய்ம்பூத அடுப்பங்கரை!

அதிகாரத்தின் குறியீடு! அடுப்பங்கரையும்! புது வரவுக்கு பொசுப்பில்லை! உனக்குத் தெரியாது! உம்மால் முடியாது! பக்குவம், சுவை பதார்த்தம், பல ஆண்டு அனுபவம் உமக்கேது! ஒத்தாசையாக எமக்கு கீழ், உதவிகள் செய்!

விறகு அடுப்பு காலத்திலிருந்து, விடியாத வாழ்க்கை. ஊதாங் குழல் பிடித்து ஊதி, 'சாம்பல் நீறு' பூசிய முகத்துடன், கண்ணெரிச்சல், கை கசக்கல், எரும்பட்டை வைத்து, இலாவகமாக இரண்டு விறகு வைத்து, சுள்ளிகள் வைத்து, செத்தை செணாறு பூட்டி, நாற்பது ஆண்டுகள் நடத்திய ஆட்சி! அதிகாரம்!

விடிந்தது முதல் உறங்கும் வரை ஓயாது எரிந்த அடுப்பங் கரை! இரண்டு தலை முறைகள் உருவாக்கிய சோதனைக் களம், சாதனைக் களம், குயவன் பட்டறையில் உருவாக்கப்பட்ட கொம்மையுடன் கூடிய அடுப்புகள். அய்ம்பூதங்களில் அடிப்படை பூதம், 'அக்னி'. எரியும் பசித் தீயை எதிர்கொண்ட அடுமனை!

எக் காலத்தும் எதிர்கொள்ளக் கூடிய 'தீ'. அதனுடன் வெந்த தியாகத்தை எடுத்துக் கொள்ள, கைப்பற்றிட உம்மால் முடியுமா? எல்.பி.சி. சமையல் வாயு காலத்திலும், எம் பிடி தளர்த்திட முடியாது! எனக்கு வேண்டும். எம் விருப்பம் போல் சமைத்திட, சுட வைத்திட, பிற தேவைக்கு! என்னையும் "பூதத்தையும்" பிரித்து விடாதே! என் உரிமையை அழித்து விடாதே! அடக்கு முறையை அழித்து விடாதே!

70ஐத் தாண்டிய பிறகும் ஏன் இப்படி! ஒழிவாக இருக்கலாமே! அது சரிப்பட்டு வராது! என் உலகத்தை என்னிடமிருந்து பிரித்து விடாதே!

உணர்ந்திடுவோம்!

குறை வைக்கா இயற்கை!
கூட்டித்தரும் வளம்!
வான் மழை!
வரையாது வழங்கும்!
கான் உயிர்கள்!
காலம் நீட்டிக்கும்!

ஆறு, சிற்றோடை,
சில்லென்ற காற்று,
பசும்புல் வெளி,
பனித்துளிகள் தெளிப்பு!

படர்ந்த நிலத்திணைகள்,
குடை விரிப்பு!
சமூகம் முழுமைக்கும்,
கடை திறப்பு!

முற்றுரிமை எமக்கே!
முழக்கம்,
அதற்கில்லை!
காப்புரிமை கச்சேரியும்,
அதற்கு இல்லை!

அரண் அமைப்பு,
ஆள் சேர்ப்பு,
அவலம் அதற்கில்லை!
தற்காத்து,
தனி உடமையாக்கும்,
கடமையும் அங்கில்லை!

மடமை விரட்டும்!
மனித கடமை உணர்த்தும்!
அனைவருக்கும்,
பொது ஆற்றல் உணர்த்திடும்!

அறிந்திலோம்!
ஆயிரம், ஆயிரம்
ஆண்டுகளாய்!
அன்னியர் எவரும்
போகவில்லை!

ஆட்சி செய்கிறார்!
அவரவர் உள்ளத்தே!
சுரண்டலும், சுழ்ச்சியும்
உன்னுள்ளிருந்தே
ஆயுதமாய்!

உலகிற்கு
அழிவு அயுதமாய்!
சோதனை!
இரோசிமா, நாகசாகி,
பொக்ரான், செர்னோபில்
இவையனத்தும்
தோற்கும்,
உலைக்களம்!

கதிர் வீச்சாய்!
தடையின்றி,
தேசங்களை கடந்து!
நேசங்களை மறந்து!
நாசங்களை விளைவிக்கும்
நாசகாரிகள்!

உலகமயமாகி நிற்கிறது,
உள்ளொளி இழந்து!
உயிரியல் ஆயுதமாய்!

உணரவேண்டும் இன்று!
உணர்ந்திடுவோம் நன்று!

Sunday, November 25, 2007

பார்ப்பனத் தன்மை!

பார்ப்பனத் தன்மை என்பது உயர் சாதியினருக்கு மட்டும் சொந்தமான, அவர்களிடையே மட்டும் மண்டி கிடக்கின்ற பண்பு அல்ல? ஒடுக்கப்படும் மக்கள் மத்தியில், குறிப்பாக இச் சமூகத்தில் கற்றவர்கள் மத்தியில், அதிலும் சிறப்பாக, அரசு ஊழியத்தில் உள்ளவர்கள் இடையில், மிகவும் செறிவாகவே உள்ளது.

தங்கள் கண் முன்னே நிகழும் நிர்வாக சீர் கேடுகள், பெரிய அளவிலான முறைகேடுகள் ஆகியவற்றிற்கு துணை போகக் கூடியவர்களாக இருக்கின்றனர். கேட்டால், " எப்படி எதிர் நீச்சல் போட முடியும்?, போகும் போக்கிலேயே ஒட்டிக் கொள்வதும் அவர்களைக் கட்டிக்கொள்வதுமே உத்தி, நடைமுறைத் தந்திரம்", என பல்வேறு விளக்கங்களை எடுத்து வைக்கிறார்கள்.

அரசியல் சட்டம் அளித்துள்ள ஒதுக்கீடு உரிமை, சரியாக செயல்பட வேண்டும் என்னும் தார்மீகத் துணிவு இன்றி, அரசு எந்திரத்தின் ஒரு பகுதியாக, கெட்டியாக தன்னை இணைத்துக் கொண்டு தாம் வந்த வழித் தடத்தையும் மறந்து, உயர் சாதியினரோடு உயிர் தொடர்பு கொண்டு, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்படும் சமூகத்திற்கே எதிராக, முனைப்புடன் உயர் சாதியினரோடு அவர்களின் போர்வாளாக செயல்படுகின்றனர். பரந்த அளவில் தாக்குதலுக்கும் , பிரிவினை சூழ்ச்சிகளுக்கும் உணர்ந்தே வெளிப்படையாகவே செயல்படுகின்ற போக்கு, தொழிற்சங்க அரங்கிலே மிக அழுத்தமாக நடை பெறுகிறது.

Friday, November 23, 2007

ஏன்!

காட்டிக் கொடுப்பேன்!
ஏன்!
கூட்டியும் கொடுப்பேன்!
வேட்டியும் தேவை
இல்லை!

"மானமும் அறிவும்,
மனிதருக்கு அழகு",

எவனுக்கு வேணும்
மானம்!
எதற்கு வேணும்
அறிவு!

என்னை ஆள்பவனுக்கே
பற்றாக் குறை!
எனக்கு மட்டும் எதற்கு!

இப்படியே வாழ்ந்து
விட்டேன்!
வளர்ந்தும் விட்டேன்!
உயர்ந்தும் விட்டேன்!

அயராமல்!
ஊர் அறிய!
அரை நூற்றாண்டு
ஆளூமை!

காப்பாற்றாது!

எனக்கொன்றும் இழப்பில்லை
உனக்குத்தான்!
உன் நெடுதுயில் நீக்கினேன்!
நெஞ்சை உயர்த்தினேன்!

வஞ்சகர் வலை விரிப்பில்,
மீன்டும் வீழ்கிறாய்!
மீட்பு இம்முறை,
உமக்கு இல்லை!

கற்றதும் மற்றதும்,
உம் பாதையில்!
கலங்கரை விளக்கம்,
உமக்கு காணாது!

திசை காட்டியும்,
திக்கு முக்காடும்!
கசை அடியும்,
உம்மை காப்பாற்றாது!

Thursday, November 15, 2007

பந்த்- சட்ட விரோதம் இல்லை-1

இரசேந்திர சச்சார்- மக்கள் சிவில் உரிமைக் கழகம்

1997 ல் கேரள உயர் நீதி மன்றம் பந்த் அழைப்பை தடை செய்தது. உச்ச நீதி மன்றம் 1998 ல் இதனை உறுதி செய்தது. தொடர்ந்து தொழிற் சங்கங்கள், அரசியல் செயல் வீரர்கள் மத்தியில், அடிப்படை உரிமைகளான பேச்சு உரிமை, சங்கம் வைக்கும் உரிமைக்கு எதிரான தீர்ப்பு என எதிர்ப்பு அலை, வெறுப்புணர்ச்சி ஆகியவற்றை உண்டாக்கியது.

பந்த் அழைப்பை விடுத்தவர்கள், எந்த ஒரு குடி மகனையும் வேலைக்கு செல்வதையோ நேரிடையாகவோ, மறைமுகமாகவோ தடுக்கவில்லை என்றாலும், குடி மக்கள் மனதில் ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தக் கூடும். அதன் காரணமாக, அவரின் அடிப்படை உரிமைகள் பாதிக்கக் கூடும் என்ற வலுவான காரணத்தை அது முன் வைத்தது. இக்கருத்து கரக் சிங் வழக்கில் அய்ந்து நீதிபதிகள் அளித்த தீர்ப்புக்கு முரணாக அமைந்தது.

நீதி மன்றமும் 'அர்த்தால்'(உருது சொல்) அல்லது பொது வேலை நிறுத்தம் குறிக்கும் (செனரல் ஸ்ட்ரெய்க்) தடை செய்யவில்லை. அரசியல் கட்சியினர் அதனை தொடர்ந்து பந்த் என்று அழைக்காமல், பல போராட்ட முறைகளை கைக்கொண்டனர்.

தமிழ் நாடு அரசு அண்மையில், அமைதியான 'பந்த்' நடத்த அழைப்பு விடுக்கும் வரை, இதில் பிரச்னை அதிகம் இல்லாது இருந்தது. 2003ல் உச்ச நீதி மன்றம், வழக்குரைஞர்கள் வேலை நிறுத்தம் செய்திட உரிமை இல்லை அல்லது வழக்கு மன்ற புறக்கணிப்பு செய்திட உரிமை இல்லை என்று அறிவித்தது.

என்றாலும், நீதி மன்றத்தின் கண்ணியம், சுயேச்சைத் தன்மை, நலன்கள் குறித்த பிரச்சனையில் ஒரு நாளுக்கு மேற்படாத வேலை புறக்கணிப்பை நீதி மன்றம் கண்டு கொள்ளாது என்று கூறியது.


அமைதியான முறையில் எதிர்ப்பு ஊர்வலம், தர்ணா போராட்டம், தொடர் உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை, நீதி மன்ற வளாகத்திற்கு வெளியில், வழக்குரைஞர்கள் நடத்தலாம் என்று தீர்ப்பு அளித்தது.

இந்திய வழக்குரைஞர்கள் மற்றும் மாநில வழக்குரைஞர்கள் சங்கங்களும், நீதி மன்ற சீர்திருத்தம் தொடர்பாக, இந்திய அரசு காலந் தாழ்த்தி வருவது தொடர்பாக, ஒரு குறிப்பிட்ட நாளில், தலை நகர் தில்லியில்,
அமைதியான எதிர்ப்பு போராட்டம் நடத்தப்படுகிறது என்றால், அது சமயம் வழக்குரைஞர்களின் குடும்ப உறுப்பினர்கள், கட்சிக்காரர்கள்,
நல விரும்பிகள் ஆயிரக்கணக்கில் தெருவிலே இறங்கி ஆதரவு தெரிவிப்பார்கள் என்பதில் எனக்கு சற்றும் அய்யம் இல்லை.


வழக்குரைஞர்களால் தடையேதும் ஏற்படுத்தப் படவில்லை என்றாலும், தவிர்க்க முடியாத அளவில் காவல் துறையின் நிர்வாகத் திறமையின்மை, ஒட்டு மொத்த திறமையின்மை நிலையில், மறைமுகமாக ஏற்படும் பிரச்சனைக்கு, வழக்குரைஞர்களுக்கு தடை விதிக்கக்கூடாது.

சனநாயக உரிமை என்பது உறுதியான அர்த்தம் உள்ளதாகும். ஆங்கிலேய நீதி மன்றங்கள், அமைதியான போராட்டத்தில் கலந்து கொள்ளும் சிலரால் நிலைமைகள் மோசமானால் அதற்காக, எதிர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்பவர்களை பொறுப்பாக்க முடியாது, என உறுதியாக தீர்ப்பளித்துள்ளன.

எனவே, ஒரு மாநிலத்தின் ஆளும் கட்சி, பொதுமக்கள் நலன் கருதி, பலர் திட்டத்திற்கு எதிரானவர்களாக இருப்பினும், ஒரு திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி விடுக்கும் 'பந்த்' சட்ட விரோதமானது என எவ்வாறு தீர்ப்பளிக்க முடியும்.

சுடுவர்ட் மில் இவ்வாறு கூறியுள்ளார்." மனித சமுதாயம் முழுமையும், ஒருவரைத் தவிர, ஒரு அபிப்பிராயத்தில் இருந்தால் ஒருவர் மட்டும் எதிரான கருத்தில் இருந்தால், அந்த ஒருவரின் குரலை அடைத்திட நியாயம் இல்லை, என்றாலும் அந்த ஒருவர் அதிகாரம் உடையவராக இருப்பின், மனித சமுதாயத்தின் குரலை அடைத்திட நியாயம் உடையவராகிறார்".

ஒரு அரசாங்கம் 'பந்த் அழைப்பு' விடுத்தால் அதை எதிர்த்திட வேண்டும். ஏனெனில் அரசு செயல்படாது இருந்திட முடியாது. அவ்வாறாயின், இதயம் செயல்படாது நிகழும் இறப்பிற்கு அது சமம்.

நடுநிலையான அனைத்து கட்சிகளின் வழியாக, எந்த ஒரு அதிகாரமும் பயன்படுத்தி, 'பந்த்' விருப்பமில்லாத குடிமக்கள் மீது திணித்து நடத்துவது சரியல்ல, என ஒரு நீதி மன்றம் வலியுறுத்துவதை என்னால் புரிந்து கொள்ள இயலும். தமது உத்தரவினால் பேருந்து இயக்கம் தடுப்பது, சட்டத்தால், உத்தரவால் கடைகளை மூடுவது, வியாபாரக் கடைகளை மூடுவது- வேலைகளை நிறுத்துவது, அரசியலமைப்பின்படி அனுமதிக்க முடியாதது ஆகும்.

Sunday, November 11, 2007

இந்திய மகளிர்- வருவாய்- மக்கள் சிவில் உரிமைக் கழகம்

* செயல் ஊக்கம் உள்ள ரொக்க வருவாய் ஈட்டும் மகளிர்- 12.7% விழுக்காடு

* ஆண்டுக்கு 25,000 உருவாய் ஈட்டுபவர்- 16.8%

* 25,000லிருந்து 1,00,000 வரை ஈட்டுபவர்- 55.73%

* உருவாய் 1,00,000 க்கு மேல் வருவாய் ஈட்டுபவர் 28%

* பட்டம் பெற்ற 68% விழுக்காட்டு மகளிருக்கு எவ்வித வருவாயும் இல்லை

* வேளாண்மை கூலி உழைப்பாளிகள் 35.4 %

* 5.2 % தனியார் சம்பளம் பெறும் ஊழியர்கள்

Saturday, November 10, 2007

வெறியாட்டு!

கேப்பைக்கு வழியில்லை!
கோப்பை என்கிறார்!
கோடி உருவாய்
விளம்பரம்,
சூதாட்டம்,
முதலீடு.

பகல் ஆட்டம்!
இரவாட்டம்!
விளையாட்டு மற!
வெறியாட்டு செய்!

அடிமை வரலாறு,
புத்தாக்கம் செய்!!

தனித் தன்மை,
தற்கால சமூக
நிகழ்வு
தப்பித்துக் கொள்!!

கோழி?

"குப்பையைக் கிளறும்......"
குப்பை
இங்கே?

பாதசாரி

இந்த சாரி,
அந்த சாரி,
இடது சாரி,
வலது சாரி,
எந்த "சாரி"யும்,
எங்களுக்கு வைரி

காவல்!

நடமாட முடியலே!
நடுத்தெருவில்!
நாலு மூலை சுமை தாங்கியில்!
நாலு காலும் வலிக்கிறது,
ந(ர)க(ர)த் தெருக்களில்.

மாடி வீட்டிற்குள்
மல்லு கட்ட முடியலே!
குந்தியிருந்த வீடும்,
குட்டிச்சுவரும்,
தெருவோரமும் தோதில்லை!

வலம் வருகிறார்,
'பாசக்கயிற்றுடன்' ,
நேசம் மறந்து.
பக்குவமாய் நகர்ந்தேன்,
படிக் கட்டுகளில் உயர்ந்தேன்!

ஊருக்கே நீர் அளிக்கும்,
தொட்டி,
உயரமானது,
நல்ல நிழல்,
காற்று.

எவர் வருவார்,
அதன் மேலே,
எசமானன் நான்!
எசமானியும் என்னருகே!
நிசமாகவே புது உலகம்!

உங்களுக்கு,
நீர் அளிக்கும்,
காவல் "நாயகன்"

Thursday, November 8, 2007

தொடரும் வன்முறை!

மேற்கு வங்க மாநிலத்தின் நந்தி கிராமத்தில், சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படுவதை எதிர்த்து தொடர்ந்து போராடி வரும் மக்கள்,இதுவரை பல உயிர் இழப்புகளை சந்தித்து வருகின்றனர். சி.பி.எம் கட்சியினர் தமது மூர்க்க நடவடிக்கையால், காவல் துறையை ஓரம் கட்டி விட்டு, மக்களை உயிர் வதை செய்து வருகின்றனர்.

நேற்று, மக்கள் போராட்ட இயக்கத்தின் தேசிய தலைவராகிய தோழர். மேதா பட்கர் அவர்களை நந்தி கிராமத்திற்கு போகும் வழியில் தடுத்து, அவரது தலை மயிரை பிடித்து இழுத்து சேலையப் பற்றி இழுத்தும், அடித்திருக்கின்றனர், மார்க்சிய கட்சியின்," மாண்புறு தொண்டர்கள்".

"விமர்சனம்", "சுய விமர்சனம்", எல்லாம் கட்சி வகுப்பிற்குள்ளே திருப்பிச் சொல்லப்படும் கிளிப் பாடங்களா?

சிவில் உரிமையை மதிக்கும் அனைவரும் இப்போக்கினை எதிர்த்து வலிமையான கண்டனக்குரல் எழுப்ப வேண்டும்!

Tuesday, November 6, 2007

"காட்டுத் தீ"

எழுதினார் விமர்சனம்!
மொழி பெயர்ப்பு,
இந்தியில் நூலாக,

அறிவுலக ஆக்கினை!
கதிர் வெளிச்சம்
பாய்ச்சினார்!
வட புலத்திற்கும்.

மடமைத் தீ விரட்டிய
"மானுடத் தலைவன்",

சனாதன,
ஆதிக்க சக்திகளை,
அடையாளப் படுத்திய
"காட்டுத் தீ"

வேண்டாம் கவலை!
உம் அறியாமையும்

சேர்த்தே பொசுக்கும்!
"ஆற்றல் வடவை",

எங்கள் தேசம்!!

கருத்து சுதந்திரம் கவலை இல்லை எமக்கு! இந்து மதத்தின் காலாட்படை நாங்கள்! பெரியார் யார்? வால்மீகி இராமாயணத்தில் இராமனைப் பற்றி என்ன எழுதி இருந்தால் என்ன? குடிகாரனோ? எப்படியோ? பண்பாடு அல்லவா?

உண்மையைக் கூற நீங்கள் யார்? கோல் உள்ளவன் இடம் ஆடும் குரங்கு அல்லவா? நீங்கள்! பசித் தீயை அணைத்தோம்! பக்தி தீயை விரைவு படுத்துவோம்! ஒரே பண்பாடு! ஒற்றைக் கலாச்சாரம்! ஓங்கி ஒலிப்போம்!இந்து தேசம்! எங்கள் தேசம்!உங்களுக்கு இடம் இல்லை!

மதச் சார்பற்ற நாடு! சமதர்ம சமுதாயம்! அரசியல் சட்டத்துக்குள் சிறை வைப்போம்! எவன் எழுதிய புத்தகத்தையும் கொளுத்துவோம்! அதை எழுதியவனையும்! எங்கள் மீது சட்டம் பாயுமா! நாங்கள் தான் அதன் மீது!

குசராத்! கோத்ரா யாகம், குண்டம் மறந்து போனதா! கோவை 'சொக்கபானை' மறந்து போச்சா! ஒரிசா பாதிரி தீக்கிரை மறந்து போச்சா! அயோத்தியின் அரங்கேற்றம்! அடுத்தடுத்து ஆசிர்வாதம்! அனைவரும் எம்மிடம்! அணி மாறியிருப்பினும் ஆன்ம இராகம் எங்களுடையதே!

Saturday, November 3, 2007

செய்திடார்!!

"ஊர்வளம் சேர்க்க
நீர் வளம் தேவை"

ஊர் அறிந்திட,
உரக்க பேசுவார்,
ஊர்வலம் போவார்!!

நித்திய வாழ்வில்
நீர் வளம் சேர்த்திடார்!!
மழைக் காலம்
வரும் முன்,
ஆயத்த வேலைகள் செய்திடார்!!

நீர் நிலைகள்
நீர் அதிகம் சேர்ந்திட
தூர் வாரிடார்!!

"நீர் வள மாநாட்டில்"
வாய்ச்சொல் வீசுவார்!!

மாயையில்!!

மூலை முடுக்குகளில்
பந்தல்!
வண்ண, வண்ண,
செம்மாந்த நிலையில்,
உருவங்கள்!!


உழைக்கும் மக்கள்
உற்பத்தி!!
உருவாக்கம்!!
கலாச்சாரம்!!

கலக்கும் விழாப்பதாகை,
விளம்பரம்,
நிழற் படங்களுடன்,


"சீவா மன்றம் சதுர்த்தி விழா,"
மதத்தை
தாண்டவில்லை!!
மன்றம்!!

"விநாயகம் வென்றது",
காலச் சக்கர
சுழற்சி,
வயப்படுத்தவில்லை
தலைமை!


பகுத்தறிவுக்கு
வேலை இல்லை!
தனிப்பட்ட செய்தி,
"நம்பிக்கை"

கட்சித் தோழருக்கு?

Friday, November 2, 2007

அடக்கம்!

எந்த சிலைக்கும்,
மாலை மரியாதை!
எனக்கதில் இல்லை
வெட்கம்!

கூட்டத்தோடு கூட்டமாக
கரைந்திடுவேன்,
குதூகலம்
கூட்டிடுவேன்!

கூனல் உணர்வு
மாற்றிலேன்,
கூச்சம் ஏதும்
போக்கிலேன்!

'மனிதருக்கு அழகு,
மானமும் அறிவும்'
எமக்கு
அது இல்லை!

தேவை,
அதிகாரமும்!
ஆதிக்கமும்!

ஆண்டு கிடக்கிறது!
அனைவரும்,
எமக்கு......

பீடம்?

கூறியதும்
மறந்து போகும்!

ஏறிய பின்,
பாரிய
நோக்கமும்!
பட்டு போகும்!

நேரிய வழி,
நேற்றைய நெறி!
ஊருக்குத்தான்!

நம்பிக்கை?

இராமர் பாலம்
அழிக்கக் கூடாது!
நம்பிக்கை!
பண்பாட்டின்
அடிப்படை!

வாழ்ந்தானோ!
இல்லையோ!
காவிய நாயகன்!
காலத்தைக் கடந்தவன்!

அயோத்தியில் பிறந்தவன்!
ஆண்டை தகுதி
படைத்தவன்!
திராவிடன் முடி
முரித்தவன்!

வானரங்கள்
சிறப்பு பெற்றவன்!
அணிமாறிய அனுமான்!
அடிமையாக ஆண்டவன்!

மீண்டும்!
புத்தாக்கம் செய்கிறார்!
அடிமை வரலாற்றை,
அடையாளப்படுத்தி!

ஆதிக்கம் சாதிக்க,
நிலை நிறுத்தம்,
செய்கிறார்.

ஆராதனைக்கு,
பஞ்சமில்லை!
ஆரியக் கூட்டம்
ஆலைச் சங்காய்!!

Tuesday, October 30, 2007

அழகு?

நெடிய கடற் கரை!
நெற்குவியல்
புதுவை!!

கற்குவியல்
புதுவை!
கவின் மிகு காட்சி!!

கரை அகன்றது,
எவர் காரணம்?

தந்திராயங் குப்பம்,
கோட்டக் குப்பம்,
பனைமரத்
தடுப்புகளைத்
தாண்டி,

சூறாவளி காலம்,
மாரி காலம்
அரித்து முன்னேறும்
கடல்,
பின் வாங்கும் மக்கள்!!

எவர் பொறுப்பு?

Sunday, October 28, 2007

நந்தி கிராமத்தில் நிகழ்ந்தேறிய பயங்கரம்- மக்கள் சிவில் உரிமைக்கழகம்.திபாகர் பட்டச்சார்யா-2

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதி உதவை அளித்திட அரசாங்கம் முன் வந்ததாகவும், பாரத்தைக் கொன்ற அரசாங்கத்திடமிருந்து எவ்வித உதவியும் பெற மாட்டோம் என மறுத்துவிட்டதாக குடும்பத்தினர் கூறினர். கொலைகாரர்கள் பட்டியலையும் அளித்தனர்.

பாரத்தின் சித்தப்பா மகன், புசுபேண்டு, 14, மார்ச் அன்று கொலை செய்யப்பட்டு, உடல் 5 நாள் தம்லுக் மருத்துவமனை சவக்கிடங்கில் கிடந்தது. பாரத்தின் அத்தை, தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு, பூட்டப்பட்டக் கிடந்த, அசொகே மோண்டல் என்பவரின் வீட்டையும் காண்பித்தார். தனே சி.பி.எம். மகளிர் பிரிவிற்கு தலைவியாக இருந்தும், கிராமத்தில் தங்குவதற்கு அனுமதிக்கப் படவில்லை என்றும் தெரிவித்தார்.

அடுத்து கேசூரி மாணவர்கள் 10க்கும் மேற்பட்டவர்களைச் சந்தித்தோம். அவர்கள் கூறியதாவது, 70க்கும் மேற்பட்ட கேசூரி பகுதியைச் சேர்ந்தவர்கள்- சமி ரக்சா சமிதியைச் சேர்ந்தவர்கள்- நந்தி கிராமத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறினர்.

நந்தி கிராமம் மற்றும் தம்லுக் மருத்துவமனையில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் ஆண்கள், பெண்கள் ஆகியோரையும் குழு சந்தித்தது. அதில் காணமல் போன- கணவனை பறி கொடுத்த மனைவிகளும் அடங்குவர்.

கோகுல் நகர், கங்ரா, அதிகரிபாரா கிராமம் அகியவற்றைச் சேர்ந்த பெண்கள் தொடர்ந்து பயங்கலந்த பீதியில் இன்னும் வாழ்ந்து வருகின்றனர். 14, மார்ச் தாகுதலுக்குப்பின், பெரும்பாலோர் குளத்தில் இறங்கி தப்பித்துக் கொண்டனர். ஏராளமான பெண்கள் வெளியே இழுக்கப்பட்டு, கணவன் ,குழந்தைகள் முன்னிலையிலே கற்பழிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தியம் பார்க்கவே அஞ்சினர்.

மற்றொருமுறை எங்கே காவல்துறையும், சி.பி..எம். கட்சியும் கை கோர்த்து தங்களை வதை செய்து விடுவார்களோ எனும் குலை நடுக்கத்தில் , வெளியில் எங்கும் செல்லாமல் இருக்கின்றனர். உணவுப்பண்டங்கள், காய்கறிகள் எவையும் கிராமத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.

ஒவ்வோரு நாள் மாலையும் குண்டு வெடிப்புச் சம்பவமும், துப்பாக்கிச் சுடும் ஒலியும் கேசூரி பக்கத்தில் இருந்து கேட்டவண்ணம் உள்ளது என்று கூறினார்கள். உண்மையில் முழு அளவிலான தடைகள் , சமி ரக்சா சமிதி ஆதிக்கத்தில் உள்ள கிராமங்களில் நிலவுகிறது.

Saturday, October 27, 2007

நந்தி கிராமத்தில் நிகழ்ந்தேறிய பயங்கரம்- மக்கள் சிவில் உரிமைக் கழகம். திபாகர் பட்டச்சார்யா- 1.

நந்தி கிராமத்தில் நிகழ்ந்தேறிய பயங்கரம்- மக்கள் சிவில் உரிமைக்கழகம்.திபாகர் பட்டச்சார்யா.

மக்கள் நலம் அமைப்பின் தலைமையில் ஏப்ரல்8,2007ல் நந்தி கிராமத்திற்கு சென்றனர் .மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் சார்பாக, கல்கத்தா உயர்நீதி மன்றத்தின் வழக்கறிஞர் திபாகர் பட்டச்சார்யாவும் கலந்து கொண்டார். பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு மருத்துவ சிகிச்சையும், நிவாரணமும் அளிக்கும் நோக்கத்தில் இக்குழுவினர் அங்கு சென்றனர்.

நந்தி கிராமத்தின் காவல் நிலையத்தில் இருந்து சோனேகூரா கிராமத்தை நோக்கி பயணப்பட்டனர். வழியில் ஏழு சாலைகளில் பள்ளம் பறிக்கப்பட்டு காவல்துறையினர் செல்ல முடியாதவாறு தடைகள் ஏற்படுத்தி இருந்தனர். காவலர்கள் உடையில் சி.பி.எம். கட்சியினர் பல இடங்களில் கற்குவியல்களை போட்டு, விளக்கு கம்பங்களைச் சாய்த்து, மரக்கிளைகளை போட்டு தடைகள் ஏற்படுத்தி இருந்தனர். உள்ளூர் மக்கள் குழுவினரின் வாகனம் செல்வதற்கு உதவி செய்தனர்.எனினும் மார்க்சிசுட் கட்சியினர் எந்த நேரத்திலும் தாக்குதல் தொடுக்கலாம் என்ற அச்சத்தில், திகிலுடன் இருந்தனர்.

மருத்துவ முகாம் தொடங்கிய பிறகு, சனவரி7ல் பாரத் மொண்டலுடன் கொலை செய்யப்பட்ட பிசுவசித் மெயத்தியின் வீட்டிற்கு குழுவினர் சென்றனர். பிசுவசித்தின் தந்தை, எசு. கே. சலீம், தாய் மற்றும் 7 வயது சகோதரர் ஆகியோர் இருந்தனர். அவர்கள் பிசுவசித் எவ்வாறு சுட்டு கொல்லப்பட்டார் என்கின்ற விவரத்தைக் கூறினார். 12 வயது நிரம்பிய பிசுவசித் எவ்வாறு சி.பி. எம். கட்சியினரால் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்தும் சோகத்துடன் விவரித்தனர். பிசுவசித்தின் தந்தையே தீவிரப் பற்றாளார்.தாத்தா ஒன்றுபட்ட கம்யூனிச்ட் இயக்கத்தின் உறுப்பினர்.

அடுத்து பாரத் மோண்டல் வீட்டிற்குச் சென்ற குழு, தந்தை, தாய், மனைவி சகோதரன், இரண்டு மகள் ஆகியோர் உள்ளடக்கிய கூட்டுக் குடும்பம். குண்டு துளைக்கப்பட்ட காயத்துடன் இருந்த பாரத்தின் சகோதரரை அவரது வீட்டில் பார்த்தனர்.

Tuesday, October 2, 2007

பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரி குச்சார் இன மக்கள் மீண்டும் போராட்டம்!

காந்தி பிறந்த நாள் அன்று, குச்சார் சமூக மக்கள், இன்னும் காலங் கடத்தப்படும் தங்கள் கோரிக்கையைத் தீர்க்க, மாநில அரசை வலியுறுத்தி திரளாக சிறை நிரப்பும் போராட்டம் நடத்துகின்றனர். 500 ஆயிரம் மக்களுக்கு மேல் இராசசுத்தான் மாவட்டத் தலை நகரங்களில் ஏழு இடங்களில் கைதாகும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அறிய வருகிறது.

இதற்கிடையில், இப்போராட்டத்தை எதிர்க்கும் விதமாக, பழங்குடியினரின் அகில இந்திய மாநாடு செய்ப்பூரில் நடை பெறுகிறது. அதில் பழங்குடி இனத் தலைவர்கள், மத்திய அமைச்சரவையில் உள்ளவர்களும், கலந்து கொள்கிறார்கள். அவர்கள் பழங்குடியினர் பட்டியலில் பிரிவு அல்லது உடைவு ஏற்படுவதை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என முழக்கம் செய்து உள்ளனர். ஒருபடி மேலே சென்று, இதனை 'செய்ப்பூர் அறிவிப்பு', என அவர்கள் பெயரிட்டுள்ளனர்.


பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரி, மே, சூன் மாதங்களில் காவல்துறையின் மனித உரிமை மீறலைச் சந்தித்து, சொல்லொண்ணா துயரங்களுக்கு ஆட்பட்டு, உயிர்களை இழந்து, உடமைகளை இழந்து, மாநில அரசின் உத்தரவாதத்திற்கு கட்டுப்பட்டு, நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு தற்போது பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாத சூழலில், அடுத்தக் கட்ட போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.


பிரித்தாளும், இராசுசுத்தான் பாரதிய சனதாவின் அரசு, குச்சாரின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் 'குச்சார் பிரச்சனைக்கு' செவி சாய்க்குமா? ' மீனா சமூகத்தினர்', மற்றும் இதர பழங்குடியினரை அவர்களுக்கு எதிராக நகர்த்தி உயர் சாதி அரசியலை முன் நிறுத்துமா?

Sunday, September 30, 2007

அந்திம அங்கீகாரம்!

தொழுகிறாய்! அழுகிறாய்!
தொழுது அழுகிறாய்!!

தொலைந்தான் என்றாய்!
எடுத்துக் கொண்டான்!
பறித்துக் கொண்டான்!

அந்திம காலத்தில்,
அங்கீகாரம்!
ஏற்றுக் கொண்டாய்!!

கழற்றியதை இறக்குகிறார்,
நள்ளிரவில்!
இரங்குகின்றார்!!

ஏக்கத்துடன் தேம்புகிறாய்!
புலம்புகிறாய்!
புதிதாக இழந்ததைப்போல்!!

Saturday, September 29, 2007

நீ ஏன்.... ?

அவளே அழவில்லை!
நீ ஏன்.... ?
அவளே கலங்கவில்லை!
நீ ஏன்.....?
அவளே விழையவில்லை!
நீ ஏன்.....?
அவளே வாய் திறக்கவில்லை!
நீ ஏன்.....?
அவளே உறங்கி விட்டாள்!
நீ ஏன்.... ?
அவளே இயல்பாய்!
நீ ஏன்.... ?

மருத்துவக் கழிவுகள்?

புதுச்சேரி மாநிலத்தில் 8 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அரசு மருத்துவ மனைகள் 'சிப்மேர்' மற்றும் பொது மருத்துவமனை ஆகிய இரண்டு மட்டுமே. இதைத் தவிர, தனியார் 'மருத்துவ வளாகங்கள்', சந்துகளிலும், மூலை முடுக்குகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் 'ஆகாயத் தாமரை' போல 'பசுமையாக, குளுமையாக', வணிகம் கொழிக்கின்றன. புதுவையின் முன்னேற்றத்திற்கு 'இரத்த சாட்சிகள்'!!

11 ஆயிரம் எய்ட்சு நோயாளிகள்- நல்ல மாநிலம்! சிறந்த பகுதி! அனைவருக்கும் மருத்துவம், இலவசமா என கேட்டு விடாதீர்கள்? பணத்தை போட்டவன், 'போண்டியாக முடியுமா'? புரிந்து கொள்ளுங்கள்!!

இவைகள் தினம் தினம் உற்பத்தி செய்யும் மருத்துவக் கழிவுகளை எவ்வாறு கையாள்கின்றன? நடுவண் அரசு இயற்றி உள்ள சுற்றுச்சூழல் சட்டத்தில் குறித்துள்ளவாறு, கழிவுகள் வகைப் படுத்தப்பட்டு, தரம் பிரிக்கப்பட்டு, ஆழ்ந்த நிலையில் பூமியில் புதைப்பு; 'இன்சினரேட்டர்' எனப்படும் எரியூட்டப்பட்டு அழிப்பது; 'ஆட்டோகிலேவிங்' எனப்படும் சலவை செய்வது; என பல முறைகள் கண்டிப்பாக கடைபிடிக்கப் படவேண்டும் என நிர்ணயிக்கப் பட்டுள்ளதே, அவ்வாறு செய்யப்படுகிறதா? மக்கள் கேட்கின்றனர்?

Tuesday, September 25, 2007

ஆளும் வர்க்க உத்தி- கிரிக்கெட்

24 இரவு, தரையிலிருந்து ஆகாயத்தை நோக்கி, அலை அலையாய் சீறியது வான் வெடிகள், கூட்டம், கூட்டமாய் இளைஞர் பட்டாளம் ஆர்ப்பரிப்பு, ஆலைச் சங்கை அமிழ்த்திடும் சங்கொலி, கானகத்தை வீழ்த்திடும் ஊலை, குலவை ஒலிகள், விலங்குகள் அஞ்சும் வெடி. பாதையில் பயணப்படுவோர் பயந்து, சிலர் நயந்து, வெற்றிக் களிப்பு! பாக்கிசுத்தானை தோற்கடித்தது! பரவலான பேச்சு, அரசுத் துறைகளில் நிர்வாகம் நிழலுக்கும் கூட பஞ்சம்!

அரசியல்வாதிகள், குறிப்பாக சரத் பவார், இந்திய வேளாண்மைத் துறை அமைச்சர், பாராட்டு! கோடிக் கணக்கில் உருவாய் பரிசளிப்பு! கோலாகலம்! கும்மாளம்! இந்தியா சாதனை! அனைத்து செய்தி ஊடகங்களிலும் நாடகங்கள், அரங்கேற்றம்!!

விளையாட்டை, விளையாட்டு என்ற கோணத்தில் பார்க்காமல், நெறி பிறழ்ந்து, வெறியூட்டும் பார்வையில், மக்கள் திரளை மகுடியின் கீழ் ஆட்டி வைக்கும், மூளை சலவை செய்திடும் போக்கு, ஒரு சமூகத்தை, அதன் நிகழ்கால பிரச்சனைகளிலிருந்து எவ்வளவு தொலைவில் எளிதாக, திசை திருப்பி இழுத்துச் செல்ல முடியும் என்பதை, மீண்டும், மீண்டும், நமக்கு நன்கு தெளிவு படுத்துகிறது.

77 % விழுக்காட்டு இந்தியன், நாள் ஒன்றுக்கு உருவா 20 க்கும் குறைவாகவே சம்பாதிக்கக் கூடிய சமூக அவலத்தில் இருக்கும்போது, குறிப்பாக, விவசாயிகள் அன்றாடம் விதர்பா போன்ற மகாராட்டிரா மாநிலத்தில் தொடர்ந்து தற்கொலையில் நித்தம், நித்தம் செத்துக் கொண்டிருக்கும் போது, பிற பகுதிகளில், ஒரிசாவில், வங்காளத்தில் மழை, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களில், வாழ்வாதாரம் இழந்து வாடும் பல்வேறு உயிரூட்டமான மக்கள் பிரச்சனைகளிருந்து, மக்களை திசைத் திருப்பும் சூழ்ச்சியில், ஆளும் வர்க்கம் பல்வேறு உத்திகளை கையாள்கிறது. அதில் ஒன்றுதான் கிரிக்கெட் விளையாட்டு.

விளயாட்டை அரசியலாக்கி, தொடர்ந்து இந்திய சமூகத்தில் அழுத்தமான பல பிரச்சனைகள், சிக்கல்கள் எழும்போது எல்லாம் பயன்படுத்தி, தொடர்ந்து பாக்கிசுத்தான் மீது தீராத வெறுப்புணர்வை, உரமூட்டி வருகிறது. இந்திய தேசிய வெறி உணர்வை, தீனி போட்டு மக்கள் மனங்களில், பகைமைத் தீயை வளர்த்து வருகிறது.

சகித்துக் கொள்வது, அடுத்தவர் உணர்வுக்கு, நம்பிக்கைக்கு மதிப்பளிப்பது போன்ற உயர்ந்த விழுமியங்களை எல்லாம் மக்கள் மனங்களில் இருந்து படிப் படியாக நுண்ணியல் செயல் பாடுகளின் வாயிலாக, விளையாட்டை பயன்படுத்தி, ஒரு சமூகத்தின் மனப் பான்மையையே சிதைத்து, செல்லரித்து, வேறுபாட்டு பகை உணர்வை வளர்த்து வருகிறது.

Saturday, September 22, 2007

கர்நாடகாவில் தொடரும் காவல்துறை மோதல் படுகொலைகள்!!

மக்கள் சிவில் உரிமைக் கழகம்-கர்நாடகா
***********************************************************
குதர்முக் தேசிய பூங்கா, மேற்கு தொடர்ச்சி மலையில் அமைப்பதை எதிர்த்து மக்கள் இயக்கம் உருவாகி எழுச்சியுடன் தொடர்ந்து போராடி வருகின்றது. சகெட் ராசன், முடுகேரி தாலுக்காவில் 2005ல், சிக்மகலூர் பகுதியில் மோதல் சாவில் கொலை செய்யப்பட்டதிலிருந்து, அரசுக்கும் நக்சல்பாரி இயக்கத்திற்கும் மோதல்கள் வலுத்து வருகின்றது. பசுமையான,அமைதியான இப்பகுதி, மோதல் களமாக மாறியுள்ளது.

அண்மையில், 10, சூலையில், மெனசினகத்யா கிராமத்தில் அரசுக்கும் நக்சல்பாரிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 5 கிராமவாசிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சுந்தரேசு குதிர்முக் தேசிய பூங்காவை எதிர்க்கும் அமைப்பின் பண்பாட்டுக் குழுவின் உறுப்பினர் ஆவார். வீதி நாடகங்கள் போன்ற பல விழிப்புணர்வு நடவடிக்கைகளில் மலைவாழ் ம்க்களிடம் தொடர்பு கொண்டிருந்தவர். பரமேசும் அவரது கூட்டாளிகளும் ராமேகவுடவின் வீட்டில் ஒளிந்திருந்தனர், 10ந் தேதி சூலையில் நடைபெற்ற காவல் துறை மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று காவல் துறை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

ஆனால் மக்கள் சிவில் உரிமைக் கழகம், மற்றும் பிற முற்போக்கு குழுக்கள் நடத்திய ஆய்வில், நிகழ்த்தப்பட்ட மோதல், போலி மோதல், காவல் துறையின் அழித்தொழிப்பு நடவடிக்கையே, என கண்டறியப்பட்டுள்ளது.

இதில் கவுதம் மாவோய்சுடு இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதும், மற்ற நால்வர் அப்பாவிகள் என்பதும், தேசிய பூங்கா அமைக்கப் படுவதை எதிர்த்து செயல்பட்டு வந்தவர்கள் என்பதும் தெளிவானது.

மேலும், நக்சல்பாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எவரும் காவல் துறையினரை எதிர்த்து மோதலில் ஈடுபடவில்லை என்றும், அவர்கள் சரண் அடைய தயாராக இருக்கும் போதே சுட்டு வீழ்த்தப்பட்டனர் என்பதும் நிரூபணம் ஆகியது.

ரமேகவுடாவின் இரண்டு குழந்தைகளும் தற்போது அனாதையாகி நிற்கின்றனர். கர்நாடக அரசும், மோதல் சாவுகள் என, தன் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது.

இதேபோல், சிருங்கேரியில், அகும்பே எனும் பகுதியில் அரசு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து ஒன்று கொளூத்தப் பட்டதாகவும் அதில் நக்சல்பாரிகளுக்கு சம்பந்தம் உள்ளது என்று கூறி. கேசவ் எக்டே என்பவர் வீட்டை நக்சல்பாரிகள் தீ வைத்து விட்டனர் என்றும் கூறி, காவல் துறை கடும் ஒடுக்கு முறையில் ஈடுபட்டுள்ளது.

அப்பகுதியின் மாவோய்ச்டு செயலாளர் கங்காதர் தம் இயக்கத்திற்கும் தீ வைப்புக்கும் தொடர்பில்லை என உறுதியாக அறிவித்திருந்தும் காவல்துறை தமது போக்கில் செயல் பட்டுள்ளது.

இதற்குமுன் மாநில உள்துறை அமைச்சகம் பல எழுத்தாளர்கள், அறிவுசீவிகள், கலைஞர்கள், பேராசிரியர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் ஆகியோரை நக்சல்பாரிகள் என்றும், ஆதரவாளர்கள் என்றும் பெரும் பிரச்னையை கிளப்பியுள்ளது.

அதன் பிறகு பல தரப்பிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பவே, இப்பட்டியல் திருப்பி பெற்றுக்கொண்டது அரசு. எனினும் மாநிலம் தழுவிய அளவில் தனது வேட்டையை காவல் துறை நடத்திக் கொண்டுதான் இருக்கிறது.

வேர் மனிதன்!

வேர் வைத்திருந்தேன்
வெற்றி!
வெத்தானாலும்
வெற்றி!

உழைப்பாவது,
தேதி குறித்தார்,
நேரம் குறித்தார்,
தொடர் வெற்றி!

பயிற்சி,
தொடர் முயற்சி,
விடா முயறசி,
வாசிப்பு,
ஆழ்ந்த ஓசிப்பு,
அவசியம் இல்லை!

"வேரும்,
வெண்ணீரும்,"
அவசியம்,
இந்தியாவிலும்,
ஆசியாவிலும்
வெற்றி!

பயிற்சியாளர்,
பக்கம் இருந்தால்,
போதும்,
பிடித்துக் கொள்வாள்,
உள்ளூரை விடவா
ஆசியா?

பார்த்து விடலாம்!
நேரம், காலம்,
வேருடன்,
வெற்றிப் பயணம்!

ஆருடம்,
நம் கையில்,
முடிவு இல்லா
பயணம்!
கூடவே வரும்,
சீர் செய்திடாது,

அடுத்து!
நன்றாக பாடம்
பண்ணவில்லை!

தோல்வியிலும்
வேள்வி!
மீண்டும்,
வேருக்கே பயணம்!

Friday, September 21, 2007

இராமனுக்கு பலியாகவா?

கருப்பசாமியும், கருகிய இன்னொரு தமிழனும், இந்துத்துவ வெறிக்கு பலி!கன்னட வெறி இன்னும் அடங்கவில்லை! கருத்துக்கு கருத்து பதிலாகுமே ஒழிய, வன்முறை பதிலாகுமா? அரசியல் தலைகளும், தத்து பித்து என உளறல்.

நிகழ்ந்த வன்முறைக்கு பதில் என்ன, தேசியம் கூறவில்லை! மாநிலமும் உருக்குலைந்த தமிழன் வாழ்க்கையை எண்ணவில்லை! வெறிகொண்டு ஓசூர் சாலையில் ஆயுதங்களுடன் விரட்டி, வழிமறித்து தமிழ் நாட்டு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்தை தடிகளால் அடித்து நொறுக்கி, கொளுத்தி, தமிழன் உயிரை எடுத்துள்ளது. இராமனுக்கு பலியாகவா?

படித்தவர்களும் பதில் இல்லை! வீடு தாக்கியது மட்டும்தான் வீதிக்கு வந்துள்ளது. நீதியின் கண்களுக்கு இறந்த தமிழர்களின் துயரம் தெரியவில்லை! சமதர்மம் பேசும் நாடு! மதச்சார்பின்மை பேசும் நாடு!

Wednesday, September 19, 2007

நெறியாகுமா?

புதுவை அரசு பொது மருத்துவமனையில் ஆகசுடு, 7ஆம் நாள், சிறு நீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக நாள் குறிக்கப்பட்டு அறுவை செய்யப்படாமல், மருத்துவரின் அலட்சியப் போக்கினால், 39 வயது மதிக்கத்தக்க தொழிலாளி அடுத்த நாளே இறந்தார். அவரது உறவினர் இது குறித்து போராட்டம் நடத்தினர். பிற அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து களம் இறங்கின. சிறுநீரகத் துறைக்கு பொறுப்பான மருத்துவர் முருகேசன்- சாவுக்கு காரணமானவர்-மீது மருத்துவ கவனக்குறைவு என இந்தியத் தண்டனச் சட்டப்பிரிவு 307ன் கீழ் பதிவு செய்யப்பட்டது.

இருப்பினும் மருத்துவர்களின் குழு, புதுவை ஆளுநர் அவர்களை சந்தித்தது. புதுவை முன்னேற்ற காங்கிரசும் சிறுநீரகத்துறைக்கு பொறுப்பான மருத்துவர் முருகேசன், சாவுக்கு காரணமானவர்,மீது மருத்துவ கவனக்குறைவு என இந்தியத் தண்டனச் சட்டப்பிரிவு 307ன் கீழ் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கு விலக்கிக் கொள்ளப்படது.

அவர் தொடக்கக் காலத்தில் சிநீரகப்பிரிவு தொடங்குவதற்கு காரணமானவர் என்பதற்காகவும் , தனக்கு வேண்டியவர் தன் குடும்பத்திற்கு மருத்துவம் பார்த்தவர் என்பதினாலும், ஒரு ஏழைத் தொழிலாளியின் சாவுக்கு காரணமான செய்கையிலிருந்து அவரை தனிப்பட்ட காரணங்களுக்காக காப்பாற்றுவது தார்மீக நெறியாகுமா?

Monday, September 17, 2007

புதுவையின் மருத்துவத்துறையில் பெருகிவரும் சீர் கேடுகள், அரசியல் மயமாக்கப்படும் மருத்துவம்- ஒரு பார்வை

34 வயது மதிக்கத்தக்க ரங்கநாயகி, மூர்த்திக் குப்பத்தைச் சேர்ந்தவர், மீனவப் பெண்மணி, 13, செப்டம்பர், 07ல் வயிற்று வலி, மற்றும் சிறுநீரகப் பாதையில் அடைப்பு ஆகிய காரணங்களுக்காக அறுபடைவீடு மருத்துவமனைக் கல்லூரி- தனியார் நிறுவனத்தில்- அனுமதிக்கப்பட்டார்.

நோயாளியின் தங்கைகள் மூவரிடம் ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று மருத்துவர் கூறி இரவு 10 மணி அளவில் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட ஏழை மீனவப் பெண்மணி, எந்த காரணத்தினால் மரணமடைந்தார் என்பதைக் கூறாமல், இறந்தவருக்கு நிவாரணமாக உருவாய் 3 இலட்சம் தருவதாக சமாதானம் கூறியது பலத்த சந்தேகத்தை உண்டாக்க, மருத்துவமனை நிர்வாகம் கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தின் துணையை நாட , உடலை மருத்துவ ஆய்விற்காக புதுவை பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அடுத்து என்ன செய்வது? அதிகாரம் இல்லாத மக்கள்? அக்கறையற்ற அரசியல்?

பல அமைப்புகள் புதுவையில் இருந்தாலும், உணர்ச்சிகரப் போராட்டங்களை செய்துவிட்டு பத்திரிக்கைச் செய்தியாக, அனைவரும் பேசும் பேச்சாக மட்டுமே நின்று விடுகிறது. அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தி, அதனை சீராக எடுதுச் செல்ல வேண்டிய பணிகளில் பாதித்த மக்களுக்கு பக்க பலமாக இருக்க வேண்டியது சமூக இயக்கங்களின் , அரசியல் கட்சிகளின் கடமை அல்லவா?

எதிரணியில் உள்ளவர் சரியாக இருக்கும் போது, நாம் சொல்லாளர்களாக மட்டுமே இருந்து கொண்டு, அரசிடம் சமரசம் செய்து கொள்வது உருப்படியாகுமா? உணர்வாகுமா?

உழைக்கும் மக்கள் கேட்கிறார்கள், உங்கள் பதில் என்ன?

Sunday, September 16, 2007

"சனதா"

யார் சொன்னது!
நாங்கள்,
இன்னும்
கடைச் சரக்கே!

மீன் குழம்பு!
நண்டு குழம்பு!
கறிக் குழம்பு!
சோர்வில்லாமல்,
12 உருவாய்க்கு.

தாங்குமா தரணி!!

குண்டுகளின் அம்மா!
எங்களிடம்!
அன்று!

குண்டுகளின் அப்பா!
எங்களிடம்!
இன்று!

உயிரியல் நேர்ச்சி!
நிகழ்வு!
உறவின் குறியீடு!

பேரழிவின்
குறியீடாக,

"அப்பா, அம்மா",

பாரம்பரிய
குண்டுகள்!!
"தாய், தகப்பன்".

முதுமக்கள்

அடுத்தடுத்து,
சாராயக் கடையில்,
சாக்கடையில்,
பூங்காவில்,
'கல் மேட்டில்',
இடுக்கில்.

சாலையைக் கடக்கும்
முயற்சியில்,
ஆயுள் கடக்கும்.


முதியவர்
அடுக்கடுக்காய்,
கோருபவர்
யாரும் இல்லை?


முதுமக்கள் அவலம்,
மூலை நெடுகிலும்.

அரப்புக்காரன் அல்லது வில்லி

புதன், சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்க்கும் வேலை. தமக்கென உள்ள வாடிக்கையாளர் இல்லங்களுக்குச் சென்று தலைக்கு தேய்த்து பிழைக்க வேண்டியது.

காசுக்கடைத் தெருக்களில், விடிந்ததும் விடியாததுமாக பெருக்கி, துகள்கள் தேடுவது. இரவு நேரங்களில் கூட நகைக் கடைகள் சாத்திய பிறகு, கணவன் , மனைவி, பிள்ளை, பெற்றோர் என, ஒரு குடும்பமே குண்டு மணியைத் தேடும்.

இவர்களின் ஆய்வுக்கு சாக்கடையும் தப்பாது. சாக்கடை ஓட்டத்தை தடுத்து, பாத்திக்கட்டி, கழிவு நீரையும் சலித்துப் பார்க்கும் உழைப்பு. பரம்பரை, பரம்பரையாக, சலிப்பில்லாத வாழ்க்கை! காலங் காலமாக இத்தொழிலில் ஈடுபட்டு வந்தவர்களை, எங்கள் பக்கத்தில் 'வில்லி' என்றும் அழைப்பதை சிறு வயதில் நான் பார்த்திருக்கிறேன்.

அவர்கள் குன்னையர் தோட்டப்பகுதியில் வாழ்ந்ததை பார்த்துள்ளேன். அவர்கள் வயல் எலிகள் பிடிப்பதையும் ஒரு பழக்கமாக , தொழிலாகவும் செய்து வந்தனர்.

அவர்களைப் பற்றி சிறிய குறிப்பில், இவர்கள் வேட்டையாடத் தெரிந்தவர்கள் என்றும் , வில் பயன்படுத்தியவர்கள் என்பதும் தெரிய வந்தது. மேலும் இருளர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் அறிய வருகிறது.

இவ்வளவு இருப்பினும், இவர்களை புதுவை அரசாங்கம் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவில்லை. அவர்களுக்கு அங்கீகாரமும் இதுவரை மத்திய அரசிடமிருந்து வரவில்லை. தற்போது, மிகவு பிறபடுத்தப்பட்டவர்கள் சாதிப்பட்டியலில் மட்டும் இடம் பெற்றுள்ளனர்.

Wednesday, September 12, 2007

"நிறுவனமாக்கப்படும் வதை மற்றும் மோதலுக்கு பிந்திய சூழ்நிலை- பஞ்சாப் படிப்பினைகள்"-2

பெரும்பாலும், சித்ரவதை என்பது பஞ்சாப்பில் குற்ற வழக்குகளை விரைவாக தீர்த்து வைக்கும் ஒரு வழியாக, புலன் ஆய்வு ஏதும் செய்யாமல், ஒப்புதல் வாக்கு மூலம் அல்லது வழக்கின் தகவல் பெற பயன்படுத்தப் பட்டு வருகிறது.

காவல் துறையின் வதை, தற்போது அதிகரித்து உள்ளது. காவல் துறைக்கு புலன் ஆய்வு செய்யக் கூடிய திறமை இல்லாததின் காரணமும், போதிய வளங்கள் இல்லாததின் காரணமும் ஆகும். குறிப்பாக போதிய நிதி ஒதுக்கீடு இன்மை, உட் கட்டமைப்புக்கு அதிக முதலீடு இல்லாதது, பயிற்சி அளிக்காமை, ஆராய்ச்சி இன்மை, நவீனமயப் படுத்தாமை, பொறுப்பற்ற போக்கு ஆகியவை இதர காரணங்கள் ஆகும்.

சட்டத்திற்கு புறம்பான கைது சமயங்களில், அதிக அளவில் வதை செய்வது நிகழ்கிறது. இச் சமயங்களில் காவலில் இருப்பதை துறை உறுதி செய்வதில்லை. நீதி மன்ற ஆய்வும் இச்சூழலில் மேற்கொள்ளப் படுவதில்லை. தனிப்பட்ட நலன்களுக்காக, தனிப்பட்ட எதிரிகளுக்கு பாடம் புகட்டவும், தொழில் சார்ந்த நண்பர்களுக்கு சகாயம் செய்திடவும், பணம் பறித்திடவும் பயன்படுகிறது.

போதைப் பொருட்கள் கையாள்வது தடுப்புச் சட்டம், ஆயுதங்கள் சட்டம், ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்படும் நிலைமைகளில், பெரும்பாலும் காவல் துறை, இச் சட்டங்களை மிகவும் தவறாக பயன்படுத்தி, சந்தேகப்படும் நபர்களை, மிக நெடிய காவலில் வைத்து, அடிக்கடி துன்புறுத்தி வருகிறது.

காவல் துறையில் பணி நியமனம், பணி மாற்றம் மற்றும் பதவி உயர்வுகள் பணம் அல்லது இதர பரிவர்த்தனைகள் மூலம் நிகழ்கிறது என்று செய்தி ஊடகங்கள், சமூக விமர்சகர்கள் கூறுகிறார்கள். எனவே, அதிகாரிகள் பெரும்பாலும், செல்வாக்கு செலுத்தக் கூடியவர்களுக்கு சலுகைகள் அல்லது தாம் செலுத்திய லஞ்சத்தை அதிக அளவில் திருப்பி அதிகமாக கேட்டு பெறுகிறார்கள். (சர்வதேச பொது மன்னிப்பு கழகத்தின் அறிக்கை சனவரி 2003)

வதையின் வகைகள்:
************************
* உதைப்பது, தடிகளால் அடிப்பது, தோல் பட்டைகளால் புடைப்பது போன்றவைகளை உள்ளடக்கியது . தலைகளை தொங்க வைத்து, கைகளை பின் பக்கம் வழக்கமாக கட்டி தொங்க விடுவதும் ஆகும்.

*மின்சார அதிர்வுகளை பிறப்பு உறுப்புகளில் செலுத்துவது. இதர மென்மையான உடல் உறுப்புகளில், குறிப்பாக காது பகுதிகள் மற்றும் விரல்களில் மின்சார அதிர்வு அளிப்பதும் ஆகும்.

*உருளைகளை, மர உருளைகள் அல்லது இரும்பு உருளைகளை, பல காவல் துறை அதிகாரிகள் தம் எடை முழுவதும் உருளைகள் மீது ஏற்படும் வண்ணம், காவலில் உள்ளவர்களின் கால்களின் மீது, தசை நார்கள் நசுங்கும் அளவிற்கு துன்புறுத்துவார்கள்.சிறு நீரகக் கோளாறுகள் உண்டாக்கும் விதமாகவும் வதை அமையும்.

* உள்ளங் கால்களில் அடிப்பது, பழுக்க காய்ச்சிய இரும்பால் சூடு போடுவது, அல்லது வெந்நீரை ஊற்றுவது, குதத்தில் மிளகாய்ப் பொடியைத் தூவுவது. கண்களில் மிளகாய் தேய்ப்பது போன்றவைகளும் ஆகும்.

*வதையின் விளைவாக, காவலில் உள்ளவர்களுக்கு, உடல் ரீதியாக பெரிய பாதிப்பும், ஆழ்ந்த மன அழுத்த நோய்களும், உறக்கமின்மை மற்றும் பயங்கர கனவு நோய்களும் ஏற்படுகிறது.

Thursday, September 6, 2007

"நிறுவனமாக்கப்படும் வதை மற்றும் மோதலுக்கு பிந்திய சூழ்நிலை- பஞ்சாப் படிப்பினைகள்"-1

இந்தியா, காவல்துறை, மக்கள்:
*****************************************
காலனியாதிக்க ஆங்கிலேய அரசு, இந்திய மக்களை ஒடுக்குவதற்கு வசதியாக, சட்டத்தின் வழி, எழுத்திலும் உணர்விலும் நியாயப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்திய காவல் துறை சட்டம் 1861 ஐ, இந்நாடு மரபுரிமையாக பெற்றுள்ளது.

60 ஆண்டு விடுதலைக்குப் பின்னும், இந்திய காவல்துறைச் சட்டம் ஊழல்மிக்க, திறமையற்ற, உணர்வற்ற, அதிகார பசி அடங்காத, அரசியல் வாதிகள், சட்டம் இயற்றுபவர்கள், அதிகாரிகள் ஆகியோர் செல்வாக்கின் கீழ், பெரும்பாலும் மாற்றம் இல்லாமல் இருந்து வருகிறது.

வெகுமக்கள், எதிர்ப்பாளர்கள் ஆகியோர் மீது, ஒடுக்குமுறை வடிவமான காவல்துறையை பயன்படுத்த வாய்ப்பு அளித்து வருகிறது. இதன் வழி, இந்திய சனநாயகத்தின் குறைபாடுகளை நன்கு வெளிப்படுத்தியுள்ளது. பொதுமக்கள், காவல்துறை ஆகியோருக்கிடையில் இடையில் ஓர் இணக்கமான, ஆரோக்கியமான உறவை ஏற்படுத்த முடியவில்லை.

காவல்துறையானது, தொடர்ச்சியாக தனது செயல்பாட்டில் பாகுபாடு காட்டுதல்; ஊழல் செய்தல்; அரசியல் ரீதியாக மற்றும் பொருளாதார ரீதியாக பலம் வாய்ந்தவர்களுக்கு ஆதரவாக செயல்படுவது; ஏதும் அறியாதவர்களை துன்புறுத்துவது; ஏழைகள், கல்வி அறிவில்லாதவர்கள் மற்றும் சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோரை துன்புறுத்தியும் வருகிறது.

காலனியாதிக்கத்திற்கு பிந்தைய இந்திய காவல் துறையானது; வளர்ந்துவரும் சனநாயகத்தின் தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையிலும்; பொதுமக்கள் விழிப்புணர்விற்கு; மனித உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் ஆகிய கேட்புகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய நிலையை இழந்துள்ளது.

காவல்துறையின் இரக்கமின்மை; முன் முயற்சியின்மை மற்றும் பொதுமக்கள் நல்வாழ்வு; பொதுமக்கள் கருத்து ஆகியவற்றிற்கு மதிப்பளிக்காத போக்கு; கொடுங்கொன்மை; சித்ரவதை; மேலதிகார போக்கு; மனித உரிமை மீறல்கள்; காவல் சாவுகள் ஆகியவை அரசாங்கத்திடமிருந்து எவ்வித துலக்க உணர்வையும் அளிக்கவில்லை.

பஞ்சாப் மாநிலத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களை மூன்று கால கட்டமாக பகுத்து விவாதிக்கலாம்:

*இந்திய விடுதலைக்கு பிந்தைய கால கட்டம்
*தீவிரவாதத்திற்கு முந்தைய நிலைமை
*தீவிரவாத கால கட்டம்
*தீவிரவாதத்திற்கு பிந்தைய கால கட்டம்

இந்திய விடுதலைக்குப் பிந்தைய கால கட்டத்தில், மனித உரிமை மீறல்கள், காவல்துறையின் சித்ரவதை, காவல் சாவுகள் குறைவாகவே இருந்தன. அந்த காலக் கட்டத்தில் நேர்மையான, அர்பணிப்பான, ஈடுபாடு உள்ள அரசியல் வாதிகள், அதிகாரிகள் இருந்தனர். மேலும் அவர்கள் பிரிட்டிசு ஆட்சியின் கீழ் கொடுமைகளை சந்தித்தவர்கள்.

தீவிரவாதத்திற்கு முந்தைய நிலைமையில், சித்ரவதை, காவல் சாவுகள் படிப்படியாக, நக்சல்பாரிகளை ஒடுக்கும் பெயரில் அதிகரித்தது. பஞ்சாப் மாநிலத்தில் தொடர்ந்து நடைபெறும் சம்பவமாக ஆகியது.

தீவிரவாத காலக்கட்டம் ஆன 1980 லிருந்து 90 வரை, மனித உரிமை மீறல்கள் அதிகரித்தன. காவல்துறையின் கொடூரமும், காவல் சாவுகள், போலி மோதல் அதிகரிப்பு நீதிமன்றத்திற்கு புறம்பான கொலைகள், குற்றம் சாற்றப்பட்டவர்கள் காணாமல் போவது, ஆகியவை மிகவும் அதிகரித்தன.

காரணம், இவ்வகையான மீறல்களுக்கு பொறுப்பான காவல் துறையினர் எவரும் நீதியின் ஆளுகைக்குள் கொண்டு வரப்படவில்லை. இதன் காரணமாக, காவல் துறை அதிகாரிகள், எவ்வித பாதிப்பும் அடையாமல் மனித உரிமை மீறல்களை தாங்கள் செய்ய முடியும் என நம்பினார்கள்.

அடுத்த முக்கியமான காரணம் குற்றவியல் நீதி அமைப்பு நொறுங்கிப் போனதும் ஆகும். காவல் சாவுகள் சம்பந்தமாக உடல் பரிசோதனை சுயேச்சையான விசாரணைக்குப் பின் செய்வதை விடுத்து, காவல் துறையே அதனை ஏற்பாடு செய்தது. தகனம் செய்வது உட்பட காவல் துறையே மேற்கொண்டது அடுத்த காரணங்கள் ஆகும். காணாமல் போவது என்பதும் அதிகரித்தது.

பத்தாண்டுகளில், வன்முறையில் 10000, பொது மக்கள் காணாமல் கொல்லப்பட்டனர். நூற்றுக் கணக்கானவர்கள் எவ்வித விசாரணையும் இல்லாமல் குற்றச்சாட்டு ஏதும் இல்லாமலும், விசாரணை நடத்தப்படாமலும் துன்புறுத்தப் பட்டனர். வதையானது எவ்வித தடையும் இல்லாமல், காவல் துறையால் மேற்கொள்ளப் பட்டது. அதன் காரணமாக, காவல் துறை உத்தியோக மற்றும் விசாரணை ஆற்றல் கரைந்து போனது.

தீவிரவாதத்திற்கு பிந்தைய காலக் கட்டத்தில், பஞ்சாப் மாநிலத்தில் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்தன. பஞ்சாப் காவல்துறை, தீவிரவாதத்தை எதிர்த்த காலக் கட்டத்தில் மீறல்கள் நிகழ்த்தியதைத் தொடர்ந்து, அந்த போக்கிலேயே, தனது காவல் அதிகாரங்களை தவறாக பயன்படுத்தியது.இதன் காரணமாக, தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஊழலுக்கு ஆட்பட்டு திளைத்து வந்துள்ளனர்.

2002, பிப்ரவரி மாநிலத் தேர்தலுக்கு பிறகு, நீதித்துறை பற்றிய உரையாடல், மனித உரிமைகள் மற்றும் காவல்துறை மீறல்கள், காவல் துறையின் பொறுப்பு, குறித்த விவாதங்கள் அரசியல் அரங்கில் இருந்து மெல்ல மெல்ல மறையத் தொடங்கின.

மார்ச்1, 2002ல், 'ட்ரிபியுன்' இதழில், மாநிலத்தின் முதல்வர், "கடந்த கால நிகழ்வை மறப்போம், எதிர் காலத்தை நினைப்போம்" என்றும், "அரசு, காவல்துறையினர் மீது போடப்பட்ட வழக்குகளை சந்திக்கும், தீவிரவாதத்தை எதிர்த்து போராடிய அவர்களை குற்றவியல் வழக்குகளில் இருந்து விடுவிக்கும்" என்றும் கூறினார்.

இத்தகைய அரசின் போக்குகள், "காவல் சக்தியின்" மீது, அரசாங்கத்திற்கு உள்ள செல்வாக்கை வலுவாக எண்பிக்கிறது. கட்சி அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும், எக்கட்சி ஆட்சியில் இருந்தாலும், அரசியல் எதிரிகளை இனங் கண்டு, ஒடுக்குவதற்கு உதவியாக செயல்படுகிறது. மட்டுமின்றி, காவல்துறையின் மூர்க்கத்தனத்தை ஒரு நிறுவனமாக்கி உள்ளது.

Sunday, September 2, 2007

குர்சார் இனப் போராட்டம் - 4

3. காவல் துறைக்கு முன்னரே தகவல் கிடைத்திருந்தும், மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ளப் படவில்லை. கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி பிரயோகம், படொலி-பிப்பல் கேரா பகுதியில், 28 மாலையில் இருந்து நிகழ்த்தப்பட்டு, போராட்டத்தை தடுப்பதை விட போராட்டத்தை தூண்டியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை கைது நடவடிக்கை எடுக்காதது.

4. 144 தடை உத்தரவை மீறியதற்காக, கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல், குறைந்த எண்ணிக்கையில் காவல்துறையினர் நிறுத்தம், பெரு எண்ணிக்கையிலான மக்கள் திரண்ட போது, மூர்க்கத்தனமாக பலப் பிரயோகத்தை காவல்துறை கையாண்டது.

5. மக்கள் கூட்டத்தை கலைப்பதை விட, காவல்துறையின் மெத்தன போக்கு, நீண்ட நேர சாலை மறியலுக்கு வழி வகுத்தது. மேலும், பெரிய அளவிலான உயிர் இழப்பிற்கும் காரணமாக அமைந்தது. மக்கள் பிரிவினருக்கிடையில், தீராத பகைமைக்கும், வழி வகுத்தது.

6. வெகுதிரள் மக்களின் எதிர்ப்புப் போராட்டம், வெறும் சட்டம், ஒழுங்கு பிரச்சனையாக மட்டும் பார்க்கப்பட்டது. அரசாங்கம், தனது பொறுப்பினை தட்டிக்கழித்து, மக்கள் பிரிவினரின் நியாயமான கோரிக்கைக்கு எதிராக செயல்பட்டது. இப்படிப்பட்ட அரசின் நடவடிகையானது, ஒரு திட்டமிட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட குற்றமாகவே, நீதிக்கு முரனாண செயல்பாடாகவே கொள்ள வேண்டியுள்ளது.

7. சமூகங்களுக்கு இடையில், தலைமுறை காலமாக பதட்டத்தையும் மோதல்களையும், அரசாங்கங்கள் தொடர்ந்து உருவாக்கி வந்துள்ளன. எடுத்துக் காட்டாக, படோலி-பிபால்கேரா பகுதியில், குர்சார் இன மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் செல்வதை, மூத்த அரசாங்க அதிகாரிகள் துணையுடன், மீனா சமூகத்தினர் முக்கிய நான்கு வழிகளில் மறித்து, தடுத்தனர். இத்தகைய சாலை மறியலில், 144 தடை உத்தரவு பயன்படுத்தப் படவில்லை, காவல் துறையினரின் கோபத்திற்கும் அவர்கள் ஆளாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

8. பமன்வாசு, சவாய் மதோபூர் பகுதியில், காவல் துறை மற்றும் உட்கோட்ட நீதிபதி ஆகியோர் அளித்த, பொய்யான புலனாய்வு தகவல் அடிப்படையில், குர்சார் சமூகத்தினரை தாக்க தூண்டிய செயலை ,உரிய நேரத்தில் மீனா சமூகத்தின் மூத்தவர்கள் தலையிட்டு, பெரும் மோதலை தவிர்த்தனர்.

9. கட்டா, லால்சோட் பகுதியில் ஏற்பட்ட சாலை மறியலில், காவல் துறையினர் மீனா சமூகத்தினருடன் உறவு வைத்துக்கொண்டு, குர்சார் இனத்தினரின் மீது தாக்குதல் நடத்த வகை செய்தனர். தொடக்கத்தில் 150 குர்சார் இனத்தினர் மட்டுமே அமைதியாக சாலைமறியலுக்கு மே 30ந் தேதியிலிருந்து ஏற்பாடு செய்து வந்தனர்.

10. மொளனியாக காவல்துறை, நான்கு பேர் இறப்பதற்கு காரணமாக இருந்தது மட்டுமில்லாமல், அருகில் இருந்த கிராமங்களில் உடமைகள் கொள்ளை போவதற்கும், அழிவதற்கும் காரணமாக இருந்தது. தாக்குதலுக்கு பின்னரும், காவல்துறை விசாரணை ஏதும் செய்யவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் எவரையும் குறிப்பிடவில்லை. குர்சார் வாழும் பகுதிகளில் அச்சம், பீதி இன்றும் நிலவி வருகிறது.

11. வசுந்தரா ராசே மற்றும் கர்னல் பயின்சால ஆகியோர், சூன் 4 ந்தேதி மாலையில், அளித்த அறிக்கையின் அடிப்படையில், சாலை மறியல் பல இடங்களில் விலக்கிக் கொள்ளப்பட்டது. பொது சொத்துக்கள் சேதம், அழிப்பு ஆகியவையும் தடுக்கப்பட்டன. இருப்பினும் மாநில அளவில் ஒரு வார காலம் நிகழ்ந்த அரசு வன்முறை மற்றும் குர்சார் போராட்டம், மீனா சமூகத்தினரின் எதிர் போராட்டம், இராசசுத்தான் கிராமங்களின் சூழலை வெகுவாக மாற்றியுள்ளது.

குர்சார் இனப் போராட்டம்- 3

பண்டி மற்றும் பொன்லி கிராமங்களிலும் நிலைமை இவ்வாறே இருந்தது. அரசாங்கமே இது போன்ற அரசியல் , நிர்வாக குழப்பங்களுக்கு காரணம்.


1. மாநிலத்தில் தேர்தல் நடைபெற்ற சமயத்தில், மலைவாழ் மக்களின் பிரிவில் குர்சார் சமூகத்தையும் சேர்த்துக் கொள்வதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது .28, மே மாதத்திற்கு முன்பே நான்கு தேசிய நெடுஞ்சாலைகளில் மறியல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. போதிய கால அவகாசம் இருந்தது. அரசாங்கம் பேச்சு நடத்தி ஒரு தீர்வுக்கு முன்னேறி இருக்கலாம். அவ்வாறு இன்றி போராட்ட வீச்சும், வடிவமும் அரசாங்கத்தின் விருப்பமற்ற சூழலை, நமக்கு நன்கு புலப்படுத்தியுள்ளது.

2. ஆகசுடு, 2006ல், நட்வர்சிங்குக்கு ஆதரவாக நீண்ட தொலைவு, நெடுஞ்சாலையில் மறியல் நடத்த, அனுமதி கொடுத்துள்ள அரசாங்கம், தலை நகரத்திலே இசைவு அளித்தவர்கள், குர்சார் இனப் போராட்டத்திற்கு 144 தடை உத்தரவு போட்டதும், எவ்விலை கொடுத்தேனும் சாலை மறியலை தடுத்திடுவது எனும் முரண்பட்ட அணுகு முறை வெளிப்பட்டது.

Friday, August 31, 2007

குர்சார் இன மக்கள் மீது காவல்துறை அத்துமீறல்- 2

31,மேல் பொலி கிராமத்தில், பிற்பகல் ஒரு மணி அளவில், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை செய்து வரும் தொழிலாளர்கள், இலவச மதிய உணவிற்காக சென்று கொன்டிருந்தபோது காவல் துறையினரால் அச்சுறுத்தப்பட்டனர். சூன் 2,ல் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், காவல் துறை 96 சுற்றுக்கள் துப்பாக்கியால் சுட்டனர் என்று மட்டும் உள்ளது, 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது குறிக்கப்படவில்லை. ஆனால், 31ந் தேதி இரவே, அவசர அவசரமாக மருத்துவ மனையில் உடல் பரிசோதனை நடத்தப்பட்டு, நள்ளிரவிலேயே உடல்கள் எரியூட்டப்பட்டுள்ளன.



கொல்லப்பட்ட அனைத்து உடல்களிலும், துப்பாக்கி குண்டு காயங்கள் 3 அடியிலிருந்து 4அடி ஆழத்திற்கு, வயிற்று பகுதியின் பக்க வாட்டில் இருந்தன. இந்த மூன்று சம்பவங்களிலும், குறைந்த அளவு பாதிப்புகள் ஏற்படும் வண்ணம் காவல் துறை முயற்சிகள் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காயம் அடைந்தவர்களை, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல எந்த வித ஏற்பாடும் செய்யப்படவில்லை. சாலை ஓரங்களில் படுகாயம் அடைந்தவர்கள் மற்றும் இதரர், தாங்களாகவே மருத்துவ உதவியை நாடிச்செல்ல வேண்டிய துயரம் ஏற்பட்டது. காயம் அடைந்தவர்கள் குறித்த விவரம் மாநில அரசு நிர்வாகத்தால், இன்றுவரையிலும் அளிக்கப்படவில்லை.



கிடைக்கக் கூடிய ஆவணங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, காவல் துறையினரின் தகவல் ஒத்திசைவாக இல்லை. பட்டோலி-பேப்பல் கேரா பகுதியில் எச்சரிக்கை அறிவிப்பு இல்லாமலே துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டது. தெற்குதிசை நோக்கி 200 கச நீளத்திற்கு இரத்த தொய்வை உண்மை அறியும் குழு காண முடிந்தது.

Thursday, August 30, 2007

"இசுலாமியன்"

"பாக்கி சட்டைகள்"
பதம் பார்த்து பஞ்சாக்க,
காக்கிச்சட்டையும்
களம் இறங்கியது
இரக்கமும் ஏங்கிட,

பகல் பொழுதில்,
பகல்பூரில்
விரட்டி விரட்டி,
புரட்டி புரட்டி,
போவோர், வருவோர்,
கடை வீதியில்.

வாகனத்தில் அமர்ந்து,
உருட்டியது தெருவெங்கும்,
"காவல் நாய்",
ஆவலுடன்,
"சனாதன சரக்குடன்",
"மிடுக்குடன்",

உடல் தேய்ந்து,
உருக்குலைந்து,
உயிருக்கு போராடும்,
"திருடன்"
-இந்தியன் அல்ல?

பதில் ஆமோ!

சிந்த வேண்டுமா!
இன்னும் இரத்தம்!
சிந்திக்க வேண்டாமா
மிச்சம்!

உ யிர் எடுப்பு!
உடல் சிதைப்பு!
உருப்படி வழியாமோ!

பழிக்கு பழி!
பதிலுக்கு பதில்!
பாதையாமோ! பயணப்படுமோ!

உணர்ச்சிக்குள் சிறையான
உணர்வுகள்,
உயர்வாமோ!

உன் பதம் உண்மை ஆமோ!
உன் வினை எதிர்வினை,
முடிவேது!

உலக நன்முறைக்கு,
வன்முறை
பதில் ஆமோ!

Wednesday, August 15, 2007

குர்சார் இன மக்கள் மீது மே மற்றும் சூன் மாதங்களில் காவல் துறை நடத்திய துப்பாக்கி சூடு-1

குர்சார் இன மக்கள் மீது மே மற்றும் சூன் மாதங்களில் காவல் துறை நடத்திய துப்பாக்கி சூடு---சிவில் உரிமைக் கழகங்கள் நடத்திய ஆய்வு.


மக்கள் சிவில் உரிமைக்கழகம், இராசசுத்தான், தில்லி மக்கள் சனநாயக உரிமைகள் கழகம், பஞ்சாப் சனநாயக உரிமைகளுக்கான சங்கங்கள் மற்றும் தேசிய சட்ட பல்கலைக் கழகங்களைச்சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இணைந்து, ஒரு வார காலமாக, இராசசுத்தான் மாநிலத்தைக் குலுக்கிய சாதிக்கலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

காவல் துறையினர் 5 இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். கலவரத்தில் 2 காவல் துறையினர் உட்பட 25 பேர் இறந்தனர்.

உண்மை அறியும் குழுவினர், கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட படொலி, பீப்பல் கேரா, பந்தி, கட்டா லால்சோட், பமன்வாச், போன்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களிடம் பேசினர். லால்சோட் காவல் நிலையங்கள், காவல் துறை கண்காணிப்பாளர், ஆட்சியர், பஞ்சாயத்து உறுப்பினர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், பத்திரிக்கையாளர்கள், சாதி அமைப்புகள் ஆகியோரையும் சந்தித்தனர்.

வன்முறை நிகழ்ந்த இடங்களையும், துப்பாக்கிசூடு நடந்த பகுதிகளையும் சூறையாடப்பட்ட பொதுச் சொத்துக்கள், தனியார் சொத்துக்கள், ஆகியவற்றையும் பார்வையிட்டனர். குறிப்பாக குர்சார் மற்றும் மீனா வகுப்பினர் இடையே மோதல் நடந்த பமன்வாச் பகுதியையும் பார்வையிட்டனர்.

உண்மை அறியும் குழுவினர் தமது ஆய்வின் முடிவில் கீழ்க்காணும் முக்கிய முடிவுகளை வெளியிட்டனர்.

1.காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிசூடு அவசியமற்றது, அதிகப் படியானது, மனிதத் தன்மையற்றது.

28 மே இரவில் காவல்துறையினர் படோலி-பீப்பல் கேரா கிராமத்தில் இரவு வேளையில் புகுந்து குழந்தைகள், மகளிர், மற்றும் ஆடவர்களை அடித்து துன்புறுத்தினர். கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். வீட்டிற்குள் நுழைந்து பெண்களை இழுத்து, அடித்து இழிவாகப்பேசி, மானபங்கம் செய்தனர்

Sunday, August 12, 2007

சரிக்கட்டு!

உமக்கு பரிசு!

சிறந்த அமைப்பு!

"இவ்வாண்டு

ரொக்கமும் பாராட்டும்"

அரசாங்கத்தை

எதிர்த்தவர், விமர்சித்தவர்,

அப்படி இருந்தும் பரிசு!

"தொகுதியில் உள்ளாய்!

தொகை பெறலாம்,

சிறப்பு அடையலாம்"

இனிமேல் விமர்சிக்க,

'விமரிசை தேவை இல்லை',

பரிசுதான் கிடைத்து விட்டதே

பரிதவிப்பு அவசியமா!

பக்குவமாக

நடந்து கொள்வாய்!

Thursday, August 9, 2007

'தியாகிகள் விழா'

இறந்த காலம்,
எங்கள் காலம்,
எவருக்கும் சொந்தமில்லை.

சூலை 30, 1936,
பிரஞ்சுஅதிகார
சுழல் பீரங்கிகளின்,
கொடும்பசிக்கு இரையானவர்,
பன்னிருவர்,
எம்மவர்!

எங்கள் குருதி!
'உயருகிறது சுருதி'!

கூலி உயர்வு,
வேலை நேரப் போராட்டம்!
விடுப்பு உரிமைப் போராட்டம்!

காப்புரிமை!
எமக்கு மடுமே!

இருக்கட்டும்,

இறந்த காலம்,
வெற்றி என்றால்,
நிகழ் காலம் ???

Saturday, August 4, 2007

பகல் கொள்ளையா!

கல்வியில் புதுசேரி வளர்ந்து விட்டது! பல தனியார் கல்விக் கூடங்கள் அரசு ஆதரவுடன் முளைத்து ஆல மரமாகி செம்மாந்து நிற்கிறது! பிற தொழில் செய்தவர் கல்விமான்களாக, செம்மல்களாக, புதிய பரிமாணம். இப்போட்டியில் பின் தங்கிவிடவில்லை அரசியல்வாதிகள். தங்களின் அதிகாரம், செல்வாக்கு, உத்திகளை சரியாக பயன்படுத்தி தொழில் போட்டியில் இறங்கினர்.


'வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்'. அண்டை மாநிலத்தவரும், அரசியல்வாதிகளின் ஆசியுடன் ஆதரவுடனும், கூட்டணி அமைத்து, களம் இறங்கினர். விளை நிலங்கள் உழைப்பவரிடம் இருந்து அந்நியமானது!


பொறியியல் கல்லூரிகள், மருத்துவக்கல்லூரிகள் 'இருசக்கர வாகனங்கள்' போல் பெருத்துவிட்டன. சில கல்லூரிகளுக்கு தனியார் இடத்தை, விளை நிலங்களை, அரசாங்கமே கையகப்படுத்தி விவசாயிகளை வஞ்சித்தது. (எ.டு.)பிம்சு மருத்துவமனை, கணபதி செட்டிக்குளம்.


அரசாங்கம் அளித்திடும் நீர், மின்சார வசதிகள். பொது நலம் கருதி அரசாங்கம் அனுமதி வழங்குகிறது. மக்களின் பேரால், கல்விக் கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதனை திருப்பி அளித்திடும் ஏற்பாட்டையும் அரசாங்கம் 'மாணவர்களின் நலம் கருதி 'செய்து வருகிறது. மக்கள் வரிப் பணத்தில் ஒவ்வொரு ஆண்டும், 'கல்வித் தொழிற்சாலைகள்' கலங்கி விடக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு!


இதையும் மீறி, பகல் கொள்ளையாக, அனைத்து மாணவர்களிடமும் கூடுதலாக இலட்சகணக்கில் பணம் பறித்திடும் கொடுஞ்செயல், அரசு அறியாதது அல்ல! புகார்கள் வந்தாலும் விசாரணை, ஆய்வு, மக்களுக்கு பதில் சொல்ல வேண்டுமே! கடமையாற்ற வேண்டுமே! என்பதப் பற்றி சிறிதும் கவலைப்படாத ஆட்சி! மக்கள் ஆட்சி!

Sunday, July 29, 2007

சந்திக்காப்பான்

"பொங்க வைக்கணும், பிள்ளைங்க தெருவிலே வெலையாடுதுங்க, வெளியே தெருவே போவுது. செத்தை ஒரு கத்தை வாங்கியாங்க, கண்ணாறு கழிக்கணும்"."நீங்க போங்க","அந்த மனுசன் எப்ப வந்தான், வாங்க ஆயாவை அழைத்துக்கொண்டு, சாயுங்காலம் இருட்டுறதுக்குள்ள, பொங்க வைக்கணும்".


குடும்பமே, நாலு மூலை சாலை சந்திப்பில் உள்ள அந்த திடலில், வீட்டுக்கு சில நூறு மீட்டர் தொலைவில், திரண்டது. ஆயாவின் தலைமையில், கழுவி, பொட்டு இட்டு, பூ வைத்து ஒரு அணி வேலை செய்ய, மறு அணி செத்தையை வைத்து கல் அடுப்பில் பொங்கல் தயாரிப்பு, குணிந்து ஊதாங்குழல் கூட இல்லாது, கண்ணைக் கசக்கிக் கொன்டு தயாராகும். வாழை இலையில் படையல் வைத்து, மணிஅடித்து, மகிமை சேர்த்து தெருவில் உள்ளவர், அந்த 'வண்டி மேட்டில்' உள்ளவர், அனைவரும் கும்பலாக, விசாலமானத் திடலில் ஞாயிற்றுக்கிழமைகளில், தவறாது நடைபெறும்.


கோட்டக்குப்பம் பாய்க்கடையின் எதிரில், கொண்டாட்டம். படையல் முடிந்ததும் அனைவருக்கும் பரிமாற்றம்," புதுப்பானையில் உள்ளது எல்லாருக்கும் குடுக்கணும், வூட்டுக்கு எடுத்துச்செல்லக்கூடாது" ஆயாவின் கண்டிப்பான உத்தரவு.


ஒவ்வொரு வாரத்திலும், ஞாயிற்றுக் கிழமைகளில் அலங்கரிக்கப்படும் "சந்திக்காப்பான்" பற்றிய பயம், பக்தி, வெகு நாளாக இருந்து வந்தது. மிகவும் பிற்காலத்தில் தான் அந்த 'சந்திக்காப்பான்', பிரெஞ்சுக்காரன் காலத்தில் வைக்கப்பட்ட மைல் கல் என்பது புரிய வந்தது.


காலச்சக்கரத்தின் ஓட்டத்தில், இப்போது 'சந்திக்காப்பானும்' இல்லை, பாய்க்கடையும் இல்லை , வண்டிமேடும் இல்லை, ரிக்க்ஷா வண்டிகளும் இல்லை, வண்டி மேட்டில் உரிமையுடன் திரிந்தவர்களின் வாரிசுகளில் ஒரு சிலர், தட்டு வண்டி ஓட்டுகின்றனர்.

Saturday, July 28, 2007

அமைதி

நெடுங்குன்றமென விண்ணுயர்ந்து செம்மாந்து நின்ற மரங்களை பதம் பார்த்து, முரித்து,விளைநிலங்களின் பச்சை மென் பயிர்கள் மீது வன்மம் காட்டி சென்றடங்கியது அமைதியாக, புயல்! வான் மின்னலின் எச்ச சிதறல்களாக வண்ணம் காட்டியது தாரகை விண்ணில்!

ஆனால், தற்போது இயற்கையின் சீற்றம் எப்போதும் நிகழாதது போல், இயல்பான அமைதி, அனைத்து இடங்களிலும் மேலோங்கி நிலவுகிறது!
வைகறைப்பொழுதில் தலைவனும், தலைவியும் நின்றனர் வயல்வெளியின் நடுவில்!!

சூறாவளியின் தாக்கத்தில், காயம்பட்ட இயற்கை எழிலின் நொடிப்பு குறித்து, மனதில் அசைபோட்டு நின்றார்! சில நொடிகள், ஆழ்ந்த இதம் அளிக்கும் அமைதியில்!

படை வீரன் கிழக்கு நோக்கினான்! தன் நெஞ்சிற்கினியாளிடம்," இருளைக்கிழித்து வெளிப்படும் ஞாயிற்றைப்பார்" என்று கூறினான்.

கலில் சிப்ரான்

தமிழ் வடிவம்-முத்துக்கண்ணு

Friday, July 27, 2007

தமிழ்மயமான பிரெஞ்சு சொற்கள்

புதுவை தமிழ் வழங்கும் பகுதியாகும்.சோழமண்டலத்தின் ஆட்சியின் கீழ் இருந்த பகுதி எனவும், தொண்டை மண்டலத்தில் ஆட்சிப் பகுதியாகவும் விளங்கியது என பல சான்றுகள் கூறுவர்.


உரோமானியப் பேரரசுடன் வணிகத்தொடர்பு கொண்டு விளங்கிய அரிக்கன்மேடு, வீராம்பட்டினம் பகுதிகள் தொல்பொருள் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை. பிற்காலத்தில் பிரெஞ்சு ஆதிக்கத்தில் 350 ஆண்டுகள் இருந்து வந்த புதுவையில், தமிழ், மக்கள் மொழியாக பேசப்பட்டு வந்தாலும், பல சொற்கள் தமிழ் வடிவத்தில் புதுவையின் பூர்வீகக் குடிகளால் பேசப்படு எழுதப்பட்டு வந்துள்ளன.


ஆனால், இன்றைய தலைமுறையினர்க்கு இது பற்றிய செய்தி அறிவதற்கு வாய்ப்பில்லை. இன்றும் 70 வயதைக்கடந்த உள்ளூர் பெரியவர்கள் பேசும் பேச்சில்,"பீரோவுக்கு போறேன்", "இவன் கிசுத்தியம் போட்டுக் கேட்கிறான்", "பாருங்க இவன் கொம்பா வைக்கிறான்", "நான் ரெழிக்கு போறேன்", "ஒப்பித்தாலுக்குப் போறேன்", "எக்கோலுக்கு போகலையா","திரைசோர் போறேன் என்பன போன்ற பல சொற்கள் இன்னும்நடைமுறையில்உள்ளன.


மேற்குறிப்பிட்ட சொற்கள் மட்டுமின்றி, இன்னும் பல சொற்கள் தமிழ் வடிவமாகி, உணர்த்தும் பொருள் பின் வருவனவாகும்.


கிசுத்தியம்-- கேள்வி
கொம்பா------- சண்டை
ரெழி-------- மின்சாரத்துறை
ஒப்பித்தால்-- மருத்துவமனை
எக்கோல்------ பள்ளி
திரைசோர்---கருவூலம்
பீரோ----- அலுவலகம்
காண்------குழாய்
தளவாய்-- துணை ஆய்வாளர்
முழ்வார்---கைக்குட்டை
முசே---- ஐயா
பிரிகாதி---ஏட்டு
சொல்தா---- இராணுவ வீரன்
சோல்து------ மாதச்சம்பளம்
செக்கூர் பணம்----உதவித்தொகை
ரூய்----------- வீதி
மேரி-------- நகராட்சி அலுவலகம்
திரிபுய்னால்----நீதிமன்றம்

Thursday, July 26, 2007

தனிமைக்கு அப்பால்

எனது தனிமைக்கு அப்பால்
மற்றொரு தனிமை
அங்கே உறைகின்றவனின்
தனிமையைவிட
எந்தன் தனிமை
நெரிசல் மிகுந்த சந்தைக்கடை
எந்தன் தனிமை என்பது
சப்தங்களின்
ஒரு குழப்பம்


அப்பால் உள்ள தனிமையைக் காண
தவிப்பு மிக அதிகம்,
ஆனாலும்,
மிக இளம் வயது எனக்கு,
மேல் பள்ளத்தாக்கின் குரல்கள்
இன்னமும்
என் செவிகளை ஈர்க்கிறது


அவற்றின் நிழல்கள்,
எந்தன் வழியை தடுத்தது,
என்னால் செல்ல முடியவில்லை!

இம்மலைகளுக்கு அப்பால்,

வசீகரிக்கும் தோப்பு உண்டு!

அங்கே குடிகொண்டுள்ள
எனது அமைதி
வேறொன்றம் இல்லை!
சுழல் காற்றாகும்!
என்னை ஈர்க்கக்கூடிய
மகிழ்ச்சி,
ஒரு இல்பொருள்
காட்சியாகும்!


மிக இளையவன் நான்,
மிக கிளர்ச்சியானவனும் கூட,
புனிதமான,
அத்தோப்பினை நாட,


இரத்தத்தின் சுவை
என் வாயில்,
இன்னும் ஒட்டிக்
கொண்டிருக்கிறது


எனது முன்னோர்களின்
வில்லும், அம்பும்,
இன்னமும் எனது கைகளில்,
என்னால்
செல்ல முடியவில்லை!


இந்த சுமையான மனத்தினைத்
தாண்டி,
எந்தன் சுயேச்சையான மனம்
இழுக்கிறது,

என்னுடைய கனவுகள்
சுயேச்சையான
அகத்திடம்!


அந்திபொழுதில் சமர் செய்கிறது,
அகம்,
அதற்கு எம் கனவுகள்
யாவும்,
அந்திப் பொழுதின் போர்க்களம்


எம் விருப்பங்கள் யாவும்,
எலும்புகளின் ஒலிப்பாகும்
யான் மிகவும் இளையவன்,
எனது சுயேச்சையான மனமாக
இருந்திட,
மிகவும் வன்மம் கொண்டுள்ளேன்


எவ்வாறு சுமையான
எனது சுயத்தை
யான் கொல்லாது,
அல்லது
அனைத்து மனிதர்களும்
விடுதலை பெறாமல்,


யான் எனது சுயேச்சையான
மனதாக
மாறுவது எவ்வாறு?


இருண்மையில் எனது வேர்கள்
அழிந்துவிடாமல்,
எமது இலைகள் காற்றில்
கீதம் இசைத்து
எவ்வாறு பறக்க முடியும்?


எனது சொந்த அலகினால்
கட்டப்பட்ட கூட்டைவிட்டு,
எமது குஞ்சுகள்
வெளியில் கிளம்பாமல்,


எவ்வாறு என்னுள் இருக்கும்
சூரிய கழுகு
வெளிச்சத்தில் பறக்க முடியும்?

(-கலில் சிப்ரான்-

தமிழ் வடிவம் முத்துக்கண்ணு)

Sunday, July 22, 2007

சென்னை கருத்தரங்கம்

'போலி மோதல் படுகொலை எதிர்ப்பு கருத்தரங்கம்', 21.07.07, சென்னையில் நடைபெற்றது. கொச்பெட் சுரேசு, உயர் நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) உட்பட, பலர் பேசினர்.


கூட்டத்தில் பேசியவர்களில் பெரும்பாலும், அரசை எதிர்த்து, காவல் துறையை எதிர்த்து 'போர் முரசம், அடிப்பது போல் முழங்கினர்.எவ்வித அரசியல் கருத்துக்களையும் பேசுவதற்கு, எழுதுவதற்கு இந்திய அரசியல் சட்டம் உரிமை அளித்துள்ளது. ஆயுதபாணி அரசியலை, சட்டங்கள் ஏற்கவில்லை.



என்றாலும், இவ்வகை அரசியலை ஏற்றுக்கொண்டு செயல்படுபவர்கள் மீது, அரசு எடுக்கும் நடவடிக்கை என்பது, இந்திய தண்டணைச் சட்டம் விதித்துள்ள முறைகளுக்கு முரணாக, மீறலாக அமைகிறது.


குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது, குறைந்த பட்ச பலத்தை பயன்படுத்துவது என்பது குறித்து, பல உயர் நீதி மன்றங்கள், உச்ச நீதி மன்றமும், பல வழக்குகளில் கண்டிப்புடன் காவல் துறை கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு குறித்து, தெளிவாக வழிகாட்டுதல்கள் அளித்துள்ளது.



காவல் துறையானாலும், இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளை காலில் போட்டு மிதிப்பது, குற்ற விசாரணை நடைமுறை சட்டத்தை மீறுவது, எப்படி சரியானது ஆகும். 'சட்டத்தின் ஆட்சியை' அப்பட்டமாக மீறுவது, எந்த வகையில், 'சீருடைக்கு' ஒழுங்காகும்.

சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ள அதிகாரம் எவர் கொடுத்தார்? சனநாயகத்தை மதிக்கும் மக்கள் கேட்கிறார்.

'தற்பாதுகாப்பு' உரிமை என்பது ஒரு குற்றஞ்சாட்டப்பட்டவரை 'முடித்துவிடுவது', என்கின்ற நோக்கத்தில், நடுநிலைமை இன்றி சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொள்வது, இந்திய தண்டனைச் சட்டப்பிரிவின் கீழ் கொலைக் குற்றம் ஆகும் என்பது வெளிப்படை. இருந்தாலும், நீதிமன்றத்திற்கு ஒவ்வொரு முறையும் செல்லும் வசதி பாதிக்கப்படும் மக்கள் பிரிவினரால் சாத்தியமா?

துப்பாக்கி, அல்லது ஆயுதம் ஏந்தாத, 'உடனடியாக ஆபத்து விளைவிக்கக்கூடிய திறன் இல்லாத', கருத்து ரீதியாக செயல்படும் அரசியல்காரர்கள் மீது, நவீன ஆயுதம் போன்ற கருவிகளை உபயோகிப்பது சமமற்ற அதிகார மீறலாகும்.

தற்போது, சமூக தணிக்கை போன்ற கருத்து ம்க்களிடையே வலுவூக்கம் பெற்று வரும் சூழலில், சீனா போன்ற நாடுகளில் 'சமூகத்திற்கான காவல்' எனும் மாற்றங்கள் நிகழ்ந்து வரும் சூழலில், ஆங்கிலேயர் உருவாக்கித் தந்த காவல் துறை சட்டம் இன்றும் அடிப்படை மாற்றங்கள் இல்லாமல் நடைமுறையில் உள்ளது சரியானது ஆகுமா?

Sunday, July 15, 2007

குட்டிச்சுவர்

அந்த நாட்களில் இருட்டியதும், கழிப்பு செய்திடும் இடம். விசாலமான மனை. இந்த தெருவிற்கும் அந்த தெருவிற்கும், பாதையுடன் கூடியது. இரண்டு பக்கங்களிலும் வீடுகள் அரணாக ,பூசணிக்கொடிகள் மனித உரங்களில் படர்ந்து இருக்க. பூசணி பூக்களின் வாசத்தில், பொழுது புலர்ந்தால், சாயுங்காலம் ஆனால், அந்த தெருவிலுள்ளவர்களின் இயற்கை அழைப்பிற்கு இடம் கொடுத்து வந்தது, வெகுகாலமாக. கூட்டம் கூட்டமாக 'வேதனையை தீர்த்த' வரலாறு. மறைந்த செய்தி.


அதற்கு அடுத்த தனுசுப் பிள்ளைத்தோட்டம், தென்னம் பிள்ளைகள் அடர்ந்த இடம். 'கழிப்பிடமாகவும்', 'பொழிப்பிடமாகவும்', பல தலை முறையினருக்கு பயன்பட்டு வந்தது. அதில் ஒரு பகுதியில், அனைத்து சாதியினரும், வேறுபாடு இல்லாமல் உதை பந்து, கிட்டிப் புல், 'லாக்', கைபந்து, சடுகுடு, பம்பரம், கோலிக்குண்டு விளையாட்டு, போன்ற பல விளயாட்டுகளில் நண்பர்களாக, சகோதரர்களாக பொழுது போக்கிய இடம், மாறியுள்ளது.


அந்தப் பகுதியில் காலங் காலமாக வாழ்ந்த மக்களுக்கு, பட்டா போட்டு கொடுத்த இடம், தற்பொழுது 'ஆனந்த இன்னாக', 'திருமண நிலையமாக', 'சற்குரு ஓட்டலாக' உருமாற்றம். எவ்வாறு?


பாலத்தின் கழிவு வாய்க்கால் மீது, கட்டிடம் கட்டும் அளவிற்கு, அரசு நிலத்தின் மீது மீறல், பட்டா செய்து கொடுத்த நிலத்தை கைப்பற்றி, வணிக நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இம்மாற்றங்கள், விளைந்த ஏமாற்றங்கள் எவருக்கு பலன் விளவித்தது?

Saturday, July 14, 2007

கவனம் எங்கே?

பூங்கா, பாரதியின் பெயர் இதற்கும். 'கா' என்றால் சோலை. அடர்த்தியான மரங்கள், செடிகள், தாவரங்கள், புல், பூண்டுகள் அமையப் பெற்ற நிழல் தரும், குளிர்ந்த சூழல். சீர் செய்கிறோம் என்று இடைவெளி அதிகப்படுத்தி, செயற்கைத் தரைகள் அமைத்து, கணக்குக்காக கவின் மிகு லபூர்தொனெ-பிரஞ்சு கவர்னர், அமைத்த பூங்கா.


' வளர்ச்சி', 'அழகுபடுத்துதல்' கோடிக்கணக்கில்.' இயற்கை சூறையில்' அத்தனை சூதும் அம்பலம். 'மக்கள் வரிப்பணம்'. 'திட்டமிட்டு ஏப்பம் விடும் அதிகாரம். அக்கறையற்ற சமூகம். இது ஒரு துளி. ஓராயிரம் நடக்கிறது நாள்தோறும். கேரளா போன்ற மாநிலத்தில், இது போன்ற முறைகேடுகள் நடக்க விடுவார்களா?


விழிப்புணர்வுக்கு கூட, வீதி இயக்கம் தேவையா? அரசியல் கட்சிகள் கவனம் எங்கே? மக்கள் கேட்கிறார்கள்!!

Thursday, July 12, 2007

விடைதருமா?

ஆற்றில் ''லாரிகள்''
அலை அலையாக
அள்ளும்,
'அல்லும் பகலும்'
ஆழப்படுத்தும்,
காயத்தை.


"குருதியென நீர் பிடிப்பும்''
படிப்படியாக வற்ற,
சோகை,
"எம்மிடம் தங்க''
''தொகை உம்மிடம் தேங்க''


"ஆற்றல் மறவர்"
தேறினார்,
அதிகாரத்தில்,
அலங்காரத்தில்,


" மேட்டுப்பகுதி மட்டும்
மட்டமா"
" வெட்டி வீழ்த்துகின்றனர்"
''செம்மண் உடல்"
"சிதைந்து பாதாளமாக"

கிளர்ச்சி

தகிப்பு, தவிப்பு
கொதிப்பு, குதிப்பு
சூடேற்ற உணர்வு,
சூழ்நிலை
மறப்பு

வாராது வந்த...

நேற்றும்,இன்றும் மழை. இடி,மின்னல். வழக்கத்திற்கு மாறான சுழல் காற்று. கனமழை. 'பணமழை பெய்யும்' மாநிலத்தில். தென்மேற்கு பருவ மழையா? இருப்பினும், ' கால் சேர்' மழை கூட இருக்காது. அம்மாவின் கணிப்பு.

'அங்குல அளவில்' வாழும் நம்க்கு, அந்த 'அளவை', மறைந்த வரலாறு. வெப்பம் தணிந்ததா? ஓரளவிற்கு. 'அச்சார உடன்படிக்கை'யாக கொள்ளலாமா. ஆசை அதிகம் மனிதனுக்கு. பெருமழை வேண்டுமாம்! பார்க்கலாம், அடுத்த வடகிழக்கு மழையின் போது.

உங்கள் 'வேள்வி' வினையாகுமா?

Monday, July 9, 2007

'பசியாருவோம்'

ஊரெல்லாம் பெய்யும் மழை உனக்கில்லை. உனக்குத் தொழிற்சாலை, தார்ச்சலை, 'கான்கிரீட்' கட்டிடங்கள், உயரமான கட்டிடங்கள், பெரிய, பெரிய திட்டங்கள். 'புல்வார் பெரிய மரங்கள் , அரிய மரங்கள்', போக்குவரத்துக்கு தடை, படிப்படியாக பக்குவமாக, 'களையெடுத்தோம்', விரிவுபடுத்தினோம்.

' செடி, கொடிகள்' நடலாம், அது போதாதா? சந்து, பொந்துகளில், நிகழ்ச்சி வைக்கலாம். விழா எடுக்கலாம். விளம்பரப்படுத்தலாம். ' தண்ணீர் தேவையை சமாளிக்க', கடல் நீரை குடி நீராக்கலாம். கோடி உருவாய்த்திட்டம், கவலை இல்லை. 'பகா, மெக' திட்டங்கள் கைவசம்.

'பசியாருவோம் பகிர்ந்து உண்ணுவோம்'.

Saturday, July 7, 2007

அணுகு முறை

ஊடக உலா ஊரெல்லாம் விசாரிப்பு. நாடகம் நம் பெருமை. வீதி நாடக

வீரியம். ஒப்புவமை இல்லா ஒப்பனை. ஒன்றிய ஓட்டம். அனைவரிடம் அசை.

நியதிகள் ஏதும், எனக்கு நிலை இல்லை. 'நீண்ட பயணத்தில்'. எதிரும் இல்லை,

புதிரும் இல்லை,' பனியும், போரும்', 'சனி சாம்ராச்சியமும்', சங்கடம் இல்லை,

'வடக்கும் இல்லை, தெற்கும் இல்லை, 'எண் திசைகள் இவ்வுலக ஆக்கம்',

அணுகு முறைகள் நூறு!!

அரிதாரம்

எவரும் இப்படியா?
இவரும்
இப்படியே!

அறியவில்லை அப்பொழுது,
அறிந்து கொண்டேன்
இப்பொழுது,

அறியாமை இதுகாறும்,
அதிகாரத்தில் இருந்தாலும்,
அனுபவம் இல்லை,

உமக்கு,
சமூக நடவடிக்கை யானாலும்,
சிறப்பு.

Friday, July 6, 2007

போகுமா?

உயர் சாதி
பெயர் தாங்க
எம்
மகிழ்ச்சி!

இப்படியாவது
போகுமா
நம் தாழ்ச்சி!

இரைச்சல்

கேட்டேன் அவரை
கேட்கிறதா?
எங்கே?
விழவில்லை எனக்கு.


விழுகின்ற விழிப்பு
விழைவு
இவருக்கு இல்லை!


ஏன் எவருக்கும்!
சந்தடி உலகில்
வந்தடி தெரியவில்லை,
விழவில்லை.


வாயிலும் புரியவில்லை!
இரைச்சல், புகைச்சல்,
'டர், புர்',
'உயிங்', 'குர், டர்',


பழகிய எனக்கு
மெல்லோசை,
பண்ணோசை,
தன்னோசை,
ஏதும் எட்டாது.


ஏமாற்றத்தை
தவிர,
பொறிகள் பொலிவு,
வலிவு,
இழப்பு,
புரியவில்லை.


மெல்ல சாகும்,
ஆற்றல் அடங்கும்,
அணு அணுவாய்.
'அலோபதி'யும் உதவா,
எந்த பதியும்.

Tuesday, July 3, 2007

மக்கள் கேட்கிறார்கள்?

தொழிற்சங்கத்தில் பொருளாதார கோரிக்கைகளுக்கு முண்டாசு கட்டி , முண்டி அடித்து போராட்டம் நடத்தும் தோழர்களில் எத்தனை பேர் சமூகப் பிரச்சனைகளுக்காக போராட முன்வருகிறார். 25 ஆன்டு கால எனது தொழிற்சங்க வாழ்க்கையில் அவர்களை மல்லு கட்டி அழைத்துச் சென்று நிறுத்தியதில் ஒன்றிரண்டு பேர்தான் தேறினார்கள் என்பது வெளிப்படை.


மத்திய தர வர்க்கம் புதுச்சேரியில் மிகவும் தன்னனலப் போக்கில் ஊறியுள்ளது, மக்கள் செயல்பாட்டாளர்களால் துல்லியமாக அறியப்பட்டுள்ள்து.


ஊழலற்ற நிர்வாகத்தை அளிப்பதில் தொழிற்சங்க உணர்வு உள்ள ஊழியர்களுக்கு பொறுப்பு இல்லையா? தாம் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே மக்களுக்கு அவர்கள் தேவையை பூர்த்தி செய்வதில் சமூக கடமை இல்லையா?. பெருகி வரும் 'விலைப்பட்டியல்', மின்சாரத்துறையில் குறைந்த பட்சம் உருவா500 கையூட்டு அளிப்பதாக உள்ள நடைமுறை, வருவாய்த்துறையில் திரட்டப்படும் இலஞ்சம், பத்திரப்பதிவாளர் அலுவலகத்தில் கையும் மெய்யுமாக பெறப்படும் 'மெய்யூட்டு', போக்குவரத்து துறையில் புரையோடிப்போய் இருக்கும் முறைகேடு, ஆரோக்கியமான ஒரு சமூகத்தின் வளர்ச்சி பாதையா?


மக்கள் கேட்கிறார்கள்? பதில் கிடைக்குமா?

Sunday, July 1, 2007

அரசியல்

கொடிப்பிச்சை
கொள்கை!
மடிப்பிச்சை
இழிவு!

Saturday, June 30, 2007

குருடர்கள்...

நேற்றிரவு மின்வெட்டு. இருள் கவிழ்ப்பு, வெளிச்சம் உன் தயவில். உன் இருத்தலும் எமக்கு நினைவு. ஆவென அனைவரும் அன்னாந்து பார்க்க ஆகாயம் வெளிச்சம். இயற்கையைக்கூட நோக்க நேரம் இல்லை, அக்கறை இல்லை. பரபரப்பான மனிதனுக்கு.

இப்படி சொல்லலாமா?


மின் வெட்டு காலங்களில்
உன் வெளிச்சம்,

நிலவுக் குருடர்கள்
நாங்கள்.

கடமை இல்லையா?

ஆரம்ப பள்ளி கல்வியில், ஐம்பது சதம் மாணவர் தொடரவில்லை கல்வியை, கூறுகிறார் புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநர். கல்வியில் முதலிடம், மருத்துவத் துறையில் முதலிடம் என அடுக்கடுக்காக சாதனை விளம்பரம் செய்து, 'மார் தட்டி' விழா எடுக்கும் 'மகான்கள்' என்ன கூறுவார்?,' சாதனைத்திலகம்', 'கடவுளின் அவதாரம்', என்ன பதில் தரப்போகிறது? அடித்தள மக்கள் கேட்கிறார்.


மாநிலத்தில், 2000 லிருந்து இதுவரை 2630 பேர் தற்கொலை மூலம் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இதில் 14 முதல் 44வரை வயதுள்ளவர்கள் அடக்கம், என்றும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதில் வளர்ச்சி, முன்னேற்றம், எந்தவகையில் அமைகிறது.


குற்ற நடவடிக்கையில் தண்டனை பெற்றவர்கள் 2003 வரை, 22 வயதுக்கு குறைவானவர்கள் 177 ஆகும். 23 வயதிலிருந்து 40 வயதுக்குள் 337 பேர் தண்டனை பெற்றவர்களாக உள்ள சூழலில், குற்ற செயலில் ஈடுபடும் இளைஞரை திருத்தும் பொறுப்பு, கடமை, புதுச்சேரி அரசுக்கு இல்லையா? மனித வளத்தை காக்கும், மேம்படுத்தும் கடமை, நிர்வாகத்திற்கு இல்லையா?

இனிப்பு!

நீளும் நாக்கு!
கசப்பு!

என்றாலும்,
எச்சில் ஊறும்
ஏமாறுவாரா என்று,

நலம் இருந்தபோது
தவிப்பு இல்லை!

நாள் எல்லாம்
சுவை ஊறும்,

'வாய் கட்டி
வயிற்றைக் கட்டி'
வாழ வேண்டும்,

பேறு கால
' தாயைப் போல்'

Friday, June 29, 2007

மனிதனாக...?

"நீங்க தெய்வம்"
"நான்
இன்னும்
"அதுவாக, இதுவாக"

Saturday, June 23, 2007

பிள்ளையார்குளம்?

கருவடிக்குப்பம் பிள்ளையார்குளம் காலம் காலமாக மழை நீர் தேக்கி வைத்த குளம். மேட்டுப்பகுதிகளில் வழிந்தோடி வரும் நீரைத் தேக்கி வைத்து நிலத்தடி நீரை ஊக்கி, உயர்த்திய குளம். கழித்துக் கட்டப்படுகிறது, கழிவுநீர் பிடிப்பிற்கு.

அவலம், அக்கறை அற்ற அரசு. இயற்கை மீது கிஞ்சிற்றும் நசையற்ற, பசையற்ற அரசு. புனரமைப்பு, ஏரிகள் முடிந்தன? தற்போது குளங்களில் இறங்கி உள்ளனர்!

Friday, June 22, 2007

சாவூப்பூ

சாவுக்கா பூத்தோம்!
'சாவூப்பூ'
என்று
ஏன் அழைத்தீர்?


'சாவூப்பூ' 'பட்டிப்பூ'
எட்டி வைத்தீர்!


எசமானுக்கு புரிகிறது,
எம்மிடம்
சாரம் இருக்கிறது,
இரத்தப் புற்றுக்கு

Sunday, June 17, 2007

சமூக நீதி?

தடுமாற்றமா?
இல்லை!
தனி மாற்றம்!
அனைவருக்கும்
பொதுவானவன்!
'பொதுவுடமையாளன்'

பெரும்பான்மைக்கு
எதிரானவன்!
சனநாயகவாதி!
சமதர்மவாதி!

உசுப்பி விட்டேன்!
இதுகாறும்,
உள்ளேயிருந்து!
உருப்படி
தேறவில்லை!

வரும்படி சேர்ந்தது!
வெளிப்படையாய்
ஒடுக்கப்படும் சமூகங்களை,
ஒருவருக் கொருவர்
எதிராக நிறுத்த,
முனைகிறேன்,
முனைவன் அல்லவா?

13 சமூகங்களின்
ஐக்கியம்
ஐக்கிய முன்னணி
ஆதரிக்கும்
எனக்குத் தேவையில்லை!


இவர்களின்
உரிமைக்கு
குரல் கொடுக்காத
நான்
இவர்களின் குரல் வளைக்கு
கொடுக்காக,
இராசசுத்தானை வாசிக்கிறேன்!


53 சமூகங்களின்
'சிறுபான்மை',
ஆதிக்க உணர்வுக்கு,
ஆக்கினை செய்திட,
இறக்கு மதியாளர்
ஊதுகுழல் ஆனேன்!


உரிமைக்குரல்
இழந்தேன்!
'சுய மரியாதை
சுக்கிராச்சாரியார்'
சூழ்ச்சியில்,


அறிந்தே
அணி மாறினேன்!
முன்னே!
அரசியல் யதார்த்தம்,
நடைமுறை வென்று!

எங்கெங்கு காணினும்......

செங்கல் சூளையில்
வெந்தணல் புழுவாக,
வெறுங்காலுடன்,


முகத்தில்,
கை கால்களில்,
சூடு போட்டனர்,
கொத்தடிமையாக,


கொடுமை,
செஞ்சீனத்தில்,
செங்கொடி நிழலில்.


தோழர்
செங்கல் சூளை,
சூளை வேலைக்கு
விலக்கு இல்லை.


இந்தியா ஆனாலும்,
'சமதர்ம'
பூமியானாலும்,


சந்தடி இல்லாமல்,
ஒடுக்கு முறை,
உரிமை
நசுக்கு முறை.

காவு கொடுப்போம்!

சொல்லாமல் வளர்த்தனர் அன்று!
சொல்லாமல் ஒழித்தனர் இன்று!
வீட்டிற்குள் இருக்கும் மரத்திற்கு
விடை கொடுப்போம்!


உத்தரத்தில் இருந்தாலும்,
சத்திரத்தில் இருந்தாலும்,
சாய்த்திடுவோம்.


சாவு கொடுப்போம்,
வளர்ச்சிக்கு
காவு கொடுப்போம்,
சடுதியில்.


கற் குவியல்களை கொட்டி,
கருங்கல் தளம் அமைப்போம்,
நெற் குவியல்களை
நெட்டித் தள்ளுவோம்.


கம்பிகளை நம்பி வெம்பி
வாழ்வோம்,
வெப்பம் மிகுதி ஆனால்,
மின் விசிறி, குளிரூட்டி,
குவிமையமாக
கூட்டிற்குள் அமர்ந்திடுவோம்.


குவலயம் சூடானால் என்ன?
கூட்டம் கூட்டமாக,
மனிதர்கள் இறந்தால் என்ன?


வணிகம் எனக்கு,
வசதி எனக்கு,
அசதி போய் விடும்,
ஆயுள் கூடிடும்.

Wednesday, June 13, 2007

கோகிலம் வாழ்க!

கூவி ஓய்கிறாய்
கூட்ட மனிதரிடை
அன்றாடம்
அரிதாய்
உன் குரல்
செவி மடுப்போர்
எவர் உள்ளார்


மாந்தோப்பு
மண்டியிருந்த சாவடி
மண்ணில்
பச்சை பரப்பியிருந்த
நிலம்
உம் புலம்


ஒண்டிக் குடியாய்
ஓயாத நெரிசலில்
ஒலி எழுப்பும்
வாகனங்களுக்கு
இடையில்
கிலியுடன்
வலம் வரும்
வாழ்க்கை


குயில்களின் கோட்டம்
குமிழி ஆன பின்னும்
நம்பிக்கை
உமக்கு அதிகம்


நாளெல்லாம்
உம் இருத்தலை
எம் செவிகளுக்கு
பண்பலையாக
ஓயாமல்
அளிக்கிறாய்


ஒன்றிரண்டு பேராவது
ஒப்பிடுவார்
உள மகிழ்வார்


உணர்வு பெற்ற
மண்ணின் கீதம்
மறந்து விடவில்லை
மறைந்தும் விடவில்லை

Sunday, June 10, 2007

பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு-- வரலாறு-1

படிக்கும் வரலாறு, படிப்பினை வரலாறா?
வரலாற்றில் மறைக்கப்பட்ட உள்ளதுகள் எவ்வளவோ!
ஒரு சான்று,

புதுவையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக இட ஒதுக்கீடு உரிமையை 1989 களிலேயே விளக்க இயக்கமாக, பாகூர் கொம்யூன், வில்லியனூர் கொம்யூன், மண்ணாடிப்பேட்டை கொம்யூன், அரியாங்குப்பம், முதலியார்பேட்டை, காலாப்பட்டு போன்ற பகுதிகளில் மிதிவண்டி பயணமாக மேற்கொண்டு பாடுபட்டு உழைத்தவர்கள் பெரும்பாலும் இம் மண்ணின் மைந்தர்கள்.


செந்தமிழர் இயக்கத் தோழர்கள் முத்துக்கண்ணு, அபிமன்னன், அரிமா வளவன், ஒடுக்கப்பட்டோர் விடுதலை முண்ணனித் தோழர். காலஞ்சென்ற தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு இளைஞர் பேரவைத் தோழர் கோ.சுகுமாரன், மார்க்சிய லெனினிய கட்சியின் தோழர் சோ.பாலசுப்ரமணியன், நட்பு குயில்கள் தோழர். சீனுதமிழ்மணி, புதுவை புத்தக நடுவத்தின் தோழர். காலஞ்சென்ற இராமமூர்த்தி, பாகூர்த் தோழர்கள் மஞ்சினி, வேலுமணி போன்றவர்கள்.


தொலைபேசித் துறையின் தோழர்கள் மகேந்திரன், மதியழகன், அன்பழகன், சின்னத்துரை ஆகியோரும் குறிப்பிடத் தக்கவர்கள். பேராசிரியர் இளங்கோ, தோழர் இலக்கியன், தோழர். இரவிக்குமார், தோழர். அழகிரி, தோழர். அருணன், தோழர். மாலதி மற்றும் வில்லியனூர் தோழர்கள்.

மிதிவண்டி பயண பிரச்சாரத்தின் முடிவில், துரை முனுசாமி திருமண நிலையத்தில் கருத்தரங்கம் நடை பெற்றது. பொதுக்கூட்டம் , கலை நிகழ்ச்சி ஆகியவை செஞ்சிசாலை திறந்த வெளி அரங்கில் நடைபெற்றது. மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தோழர். கண்ணபிரான், பேராசிரியர் கல்யாணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


தோழர் பழமலய் மற்றும் அவரது தோழர்கள் கலை நிகழ்ச்சி நடத்தினர். பின்னாளில் ஏம்பலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆக இருந்த திரு. நீலகங்காதரன் போன்றவர்கள் அப்போதைய முற்சிகளுக்கு ஆதரவாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இயலவில்லை!

படர்ந்து சென்றாய்,
பறந்து வென்றாய்.
தொடர்ந்த நான்
தோல்வியில்.


பின்னோக்கி பலனில்லை!
அந்த நாள்,
உன்
இந்த நாளோடு,
போட்டியிட......

Saturday, June 9, 2007

அதிர்வுகள்

எப்பொழுதும் உணர்தல் இல்லை!
ஆயினும் உண்மை!
அளவும் தன்மையும் கூடும் போது,
ஏதம்!
சேதம்!
எங்குமில்லா
சோகம்!

அடுத்தது....

உரசல் உணர்வில்
உல்லாசம்!

தொங்கிய பயணம்
தொடரவில்லை!

எதிர் வாகனம்
அதே உணர்வுடன்!

உருக்குலைந்தனர்!

பயணங்கள் முடியவில்லை!
உரசலை எதிர்நோக்கி!

அடுத்தது எப்போ?

கண்ணீர்த்திவளை!

தீவக நாடு அவர்களுக்கு!


கண்ணீர்த் திவளை எங்களுக்கா?


காலமெல்லாம்.


காலனி ஆதிக்கங்களைக் கடந்து,


மார்க்கங்களின் மாட்சியைக் குலைத்து,


திக்கற்று,


திவளையும் வறண்டு,


தீவிர வாதத்தின் கிடிக்கிப் பிடியில்


நொடி நொடியாய்,


அணு அணுவாய் அல்லல்,


அலைக்கழிப்பு,


சொந்த மண்ணில் சோகங்களாய்


புலம் இழந்து,


புலம்பித் திரிந்து ,


வளம் இழந்து,


வாழ்க்கை இழந்த



தொல்குடி!


தோற்கும் குடி!

ஒதுக்கீட்டில்...........

வாக்கிற்காக,
அரசியல் உறுதி,
ஒதுக்கீட்டில்,
'சாட் பிரிவினர்',
'குர்சார் பிரிவினர்',
பழங்குடி தகுதி
வாக்குறுதி அரசியல்,
தேர்தல் கால தேறுதல்,
உறுதியாய் நிற்கும்
மக்கள் முன்,
உறுதிவாக்கு அம்பலம்,
'மீனா' பிரிவினர்,
வீணாக கிண்டி விடுதல்
கிழக்கிந்திய கம்பெனி தோற்கும்
கீழை ஆரிய அரசியல்,
ஆதிக்க அரசியல்.

Sunday, June 3, 2007

அணு உலை!

உயிருக்கு வைக்கும்
உலை!
கழித்து கட்டும்
கலை!
காலனி ஆதிக்க
நிலை!

அடுத்தது மனிதனா?

புலிகளைக் காப்போம்!
பாதி எண்ணிக்கையை
அழிப்போம்!
மத்தியப் பிரதேசத்தில்!


அடுத்த ஐந்து ஆண்டுகளில்
மீதி
அழிப்போம்!


சிங்கங்களை மட்டும்
விட்டு வைப்போமா!
சிரியாவில், ஈராக்கில்,
ஈரானில், பாக்கிசுத்தானில்,
இந்தியாவில்,


கதை முடிப்போம்,
ஆசியாவின்
எழுத்தை மாற்றுவோம்,
விரைவாக,


மனித வளர்ச்சிக்கு,
வழி விட
வேண்டாமா!


ஐரோப்பா, ஆசுத்திரேலியா,
வட அமெரிக்கா,
விலங்கினங்களின்,
பெருந்திரள் அடர்த்தி,
வகை வகையாக ,
ஒரு காலம்.


குடியிருப்புகள்,
குத்தீட்டியாக,
அழித்தொழித்தன.


சிங்கமா? ஒட்டகமா?
லாசு வேகாசு
நகரத்திட்டா?
சிலிகான் பள்ளத்தாக்கா?


முன்னேற்றம், முன்னேற்றமாக
ஒரு கட்டத்தில்
விடை கொடுக்கும்
விலங்கினங்களின்
பட்டியல்,
வளர்ச்சி அடைந்த
மனிதனுக்கும்.


பின்தங்கியவன்,
முன்னேற்றம்
அடையாதவன்,
விலங்குகளின்
பாதையிலா?

தெரியாமல்!

எனக்குத் தெரியாமல்

நீ!

உனக்குத் தெரியாமல்

நான்!

எனக்கும் உனக்கும்

தெரியாமல்,

எவரெவர்!

Saturday, June 2, 2007

கேட்கிறார்!

வாய்ப்புக் குறைவு
வேளாண்மைக்கு!
வாய்ப்பு அதிகம்
தொழிற்சாலைக்கு!
'வளர்ச்சி மன்ற'
கூட்டத்தில்
முன் வைப்பு.


வாய்ப்பு அழித்தது
யார்?
ஊட்டம் ஒழித்து
வாட்டம் கூட்டியவர்
யார்?

கொண்டாட்டம்!

கொண்டாடுவோம்
குழந்தைகள் நாள்!
உலக நாள்!

'ஊர் குழந்தைக்கு
ஊட்டி வளர்ப்போம்'
தம் குழந்தை
தானாக
உயருவார்!

நம்மிடம்...

அனைத்தும்
உண்டு

நன்றி?

உம்மை?

'சன்மார்க்கம்',
'சமரச மார்க்கம்'
'சாகச சந்தையை'
மிஞ்சும்
சாதனைகள்!

நிந்தை நுட்பம்
அறிந்த யாம்,
சந்தை நுட்பம்,
விந்தை நுட்பம்,
அறிந்திலோம்!

நில்!

உள்ளூன்றி
பார்!
சொல்லூன்றி
சொல்!
செயலூன்றி
செய்!
பயனூன்றி
நில்!

சுயம் இழந்து!

சாலைகளில் அலகு
இரு மருங்குகளிலும்
வரிசையாய்
திடீர் முளைப்பு!

'வள்ளுவர்', 'வல்லவர்',
'தமிழகம்', 'தளபதி',
'உயிர்', 'மூச்சு',
'குறள்,' 'ஓவியம்'
'குணக் குன்று'.

இரு வண்ணம்
இவர் எண்ணம்!

'ஏற்றும் தமிழர்'
'ஏற்ற தமிழர்'
ஏறுமாறாய்,
தாறுமாறாய் தமிழகம்.


வெகு காலமாய்,
உயர்வு நவிற்சியில்,
சுயம் இழந்து.

Wednesday, May 30, 2007

வாட்டம்!

வடம் பிடிக்கவில்லை
வாடுகிறார்!
தேடுகிறார்!
'தேவரை',


'தருமபாலன்' பிடித்தான்,
'ஆண்டவரும்',
'மாண்டவரும்' பிடித்தார்!
இவர் ஏன்?


பிடிக்கவில்லை!

வளர்ச்சித்திட்டம்!

உணவுப் பயிருக்கு வழி மூடி,
பணப்பயிருக்கு வழி வகுத்தோம்,
நீர்த் தேவை அதிகரித்தோம்,
மேல் நீரை மாய்த்தோம்.


வேளாண்மைக்கு விடை கொடுத்தோம்,
சிறு தொழிலுக்கு வழி வகுத்தோம்,
சிறுக, சிறுக அழித்தோம்.


நிலத்தடி நீருக்கு உலை வைத்து,
பெருந் தொழிற்சாலைகளுக்கு
ஊரெங்கும் உற்சவம் வைத்தோம்,
உலா வைத்தோம்.


உழவுத் தொழிலை
இழவுப் பட்டியலில் சேர்த்தோம்.
வளர்ச்சி சாதித்தோம்.


சேவைத் துறை,
தேவைத் துறை ஆக்கினோம்
சேதராப் பட்டையும் சேர்த்து.


கேட்ட பயிர் வளர்த்த நாட்டில்
தோட்டப் பயிர் வைப்போம்
தொட்டிகளை உருவாக்குவோம்.


கஞ்சித் தொட்டிகளுக்கு
கனவான்கள் ஆக்குவோம்
மான்யம் வழங்குவோம்.


இஞ்சி குரங்குகளாக
செஞ்சிமலை உயர்த்துவோம்,
பஞ்சுத் தொழிலை பாழடித்து,


ஏரிகளை ஏப்பம் விட்டு
ஏரி சங்கம் அமைப்போம்,
நீர் பிடிப்புப் பகுதிகளை
பன்னாட்டு நிறுவனங்களுக்கு
அளித்து
பனாட்டு எடுப்போம்!

Monday, May 28, 2007

தமிழ்மயம்!

பொது வாழ்க்கை!
எமக்கு
நிதி வாழ்க்கை!
அறக் கட்டளையும்
சேர்த்து!
தமிழ் வாழ்க!!


வாழ வைக்கும்
எம்மை!
நான் வாழ்ந்தால்
நாடு வாழும்!
நம் மக்கள் வாழ்வர்!


சார்ந்திருத்தல் நிலைபாடு!
சோர்ந்திருத்தல் ஏது?
வட்டி வளருது
கொட்டி தருகிறது
கெட்டி தயிர் போல்!


பட்டி மக்கள்,
பலமாக, பாலமாக
தலைமை! தாளாண்மை!
நாட்டாண்மை!

சிவ ஞானம்!

கை கொடுக்க வேண்டியவன்
கொடுக்க வில்லை!
பெற்றான் இரண்டு
பெருமையாய்!
உதறினான்.


பின் சேர்க்கை ஒன்று
பிழைப்புக்கும் வழியில்லை!
பேதையாய்!
போதை மனிதன்,
விட்டு விலகி,
பாதை மாறாமல்.


சொந்தம் வாய்க்கவில்லை!
ஏமாந்தும் பிரியவில்லை!
ஏனோ,
உமக்கு புரியவில்லை!


எனக்கு நானே ஏமாளி!
ஏற்றிச் சென்றார்
எழுதினார்!
ஒப்பமிட்டேன்!


புண்ணியம்,
வாழ்கிறார் வளமனையில்!
வாய்த்த மனை,
வான் வீதியில்! நிலவொளியில்!
சூரிய கூரையில்!


இருண்டகம் உள்ளவர்,
அகம் கொடுப்பாரா?
அருகில் முகம்
கொடுப்பாரா?


முடிந்தது யாவும்,
இந்தியன், பகுத்தறிவாளன்.
உதவுகிறான்
பிரஞ்சுக்காரன்,
உதறியவனுக்கும் சேர்த்து!


உண்மை அறியாய்
உலகியல் இது!
உம்மை ஆளும் ஈசன்,
அவனையும் ஆளும்
நேசன்.


அனைவருக்கும்
இதுவே ஞானம்!

அப்படி!

உள்ளதைப்பேசி
உறவைத் தொலைத்தேன்!
நியாயத்தைப் பேசி
நண்பர்களை
தொலைத்தேன்!


எதையும் பேசாமல்
எப்படி?
என் கதை
அப்படி!

Saturday, May 26, 2007

இருளர்..

நாட்டு மீன் விற்றார்,
தேடியது காவல்
கருப்பங் கொல்லையில்.


வழிவரை,
பாதை நெடுகிலும்
'கவனிப்பு'.


காவல் நிலையத்தில்,
கைகட்டு, உரி ஏற்றம்,
'பிரப்பம் பழங்கள்',
ஒரு வாரம்.



இடை, இடையே
'கை வீசு, கை வீசு'
இரவெல்லாம், வேக நடை,
வீக்கம்
வத்த வேண்டாமா?
வீண் வம்பு!



வாத்தியார் வீட்டு,
பொருள் களவு,
உளவின் உக்கிரம்



கழனியில்,
பம்பு கொட்டகை,
ஐந்து குழந்தைகள்,
விடியாத வாழ்க்கை.



கரும்பு தோட்டத்தில்,
'காப்பிரி நாட்டில்'
மீறல், வதை
அன்று.


இன்று?

குழந்தைகள்

எருதுக்கு ஏற்றம் உண்டு
எங்கள் நாட்டில்
உருவா 15000


பீகாரில்
உருவா 500 ல்
இருந்து
2000 வரை


'பண்டங்கள்'
'பரிமாற்றம்'
விற்பனை
மாநிலம் தாண்டி
'உரிமை காப்போம்'

வன்முறை

வழிப்பாட்டு தலம்
வழிந்தது இரத்தம்
வீழ்ந்தது உடல்கள்.


இறைப் பற்று
உரிமை மீறல்
ஐய்தாராபாத்தில்,
இந்தியாவில்,
மீண்டும் அரங்கேற்றம்.


சுற்றுலா மக்களும்
சுருண்டனர்,
செய்வதறியாது,
அமைதியை குலைத்திட்ட
அருவருப்பு.


மனித மாண்பை
சீரழித்த சிந்தனை,
மார்க்கங்களை
மதித்திடா,
உரிமை மீறல்.


அன்றாடம் காய்ச்சியாய்
பிழைக்கும் மக்கள்,
கல்வி உரிமை
இல்லை,
கஞ்சிக்கும் உறுதி
இல்லை.


கவலை மறக்க
தொழுகை
அழுகை ஆக்கிய
மனசாட்சி,
சகிப்பு எங்கே?
உரிமை பேசும்
மக்கள் தகிப்பு,
இங்கே!

மேதா பட்கர்

எளிய தோற்றம்
ஏற்றமிகு பார்வை
கூர்ந்தறிதல்
குவலய உணர்வு


ஒரு வாசிப்பு
ஓராயிரம் ஓசிப்பு
ஊழல் உணர்வை
எதிர்த்திடும்
சூழல் உணர்வு
மக்கள் வாசிப்பு


போராடும் சமூகங்களை
ஒருங்கிணைத்திடும்
தேசிய முயற்சி
உலகப்பார்வை


மாற்றுகளை
முன் வைக்கும்
நடைமுறை
தலைமுறை
காத்திடும் தத்துவம்


மக்கள் நாயக
நக்கல்வாதிகளுக்கு
காந்தியத்தை
கவனப்படுத்தும்
போராட்ட களஞ்சியம்


வாழ்வாதாரம்,
நீராதாரம், மரபுரிமை
தொடர்ச்சியை
நிலைநிறுத்தும்
புதிய மக்கள் நாயகம்

Friday, May 25, 2007

வான் சிறப்பு...

திரளும் மேகம்
மிரளும் வெப்பம்
காற்று விரட்டும்
கவலை சேர்க்கும்


திவலைகள் இறங்கிட
கெஞ்சும்
தீவிரம் காட்டும்
காற்றின் விசை


வான் இசை
கெடுக்கும்
நசை மக்கள்
நலம் கெடுக்கும்
பலம் ஒடுக்கும்


பல நாள் திரட்சி
பாறையின் வறட்சி
சுற்று வட்டம்
சுறு சுறுப்பு

வாயில்

ஆட்டம் வைப்போம்!
ஆர்ப்பாட்டம்!
ஊர்ப்பாட்டம்!
உம்பாட்டம்.


கலைவிழா
காவிய விழா,
சிலை விழா!


நீர் ஆட்டம்,
நீள் ஆட்டம்,
மட்டி ஆட்டம்,
மரண ஆட்டம்.


கொட்டித் தீர்க்கும்
கோடி,
கேளிக்கை ஆட்டம்,
வேடிக்கை ஆட்டம்.


திரளாக நாள்தோறும்.
நிரலாக,
குப்பை வண்டிகள்,
குவியலாக
குளத்தை தூர்க்கும்,
மேட்டை நிரப்பும்,
கேட்டை பரப்பும்.


கேளிக்கை ஆட்டம்,
வாடிக்கை வாணம்,
சுற்றுலா தேசம்,
கற்றுலா தேசம்.


காரணம் கூறும் ,
ஏரணம் தோற்கும்,
தோரண வாயில்.

நீங்கள்

நாட்டுக்கு நாங்கள்!
ஓட்டுக்கு...

தம்பி....

தம்பி வா!
தாங்கிப் பிடி!
ஏங்கி வெடி!

இன்னுமா....

இன்னுமா
இவர்கள்
இருள் கவியும்
சுவர்கள்

சிலையாக...

தோள் கொடுப்பேன் துணையாக!
தொண்டு செய்வேன் இணையாக!
வாள் எடுப்போம்!
வாழையடி வாழையாக!
பகை முடிப்போம் தொகையாக!
பங்கேற்போம் நிலையாக!
பகைவர் மிரண்டு சிலையாக!

வேண்டாம்....

காலம் மாறிப்போச்சு!
கவலை கூடிப்போச்சு!
வேலை வெட்டி இல்லை!
வேணாம் உனக்குத் தொல்லை!


வேட்டி சேலை உண்டு!
கஞ்சிக் கலையம் வேண்டாம்!
தொலைக்காட்சி வேண்டும்!
விறகு அடுப்பு வேண்டாம்!
'கேசு' அடுப்பு வேண்டும்!


பத்து கிலோ அரிசி
மாதந்தோறும் வேண்டும்!
உழைப்பும் உனக்கு வேண்டாம்!

சங்கதி,,

தப்பித்துக்கொள்!தள்ளிவிட்டு!
பயத்தில்!
மென்மை இலக்கு,

தாயாயினும், தாரமாயினும்,
தலைமுறை பாடம்,
வழி முறை வாசகம்,


குண முறை குட்டல்,
முட்டல் முணகல்,
முடித்துக்கொள்!


பின் பெருமை பேசு,
முன் பருவ முகவரி,
முடிந்த சங்கதி!

உம்மிடமே...

எல்லாரும் எனக்கு!
வேண்டாமா?
கூடாதா?
கொள்கை, இயக்கம்
குறுக்கீடு ஆகா!


கோணாமை, பேணாமை,
கந்துவட்டி,
சுந்து முடிதல்,
காவல் அதிகாரி
கசடு இல்லை!


அடிபட்டாய்,
எதிர்க்கக் கட்டாயம்
இல்லை!
நிலைபாடு இதுவே!
பிழைபாடு உம்மிடமே!

மலர்ச்சி...

அயர்ச்சி போக்கு!
முயற்சி!
அடுத்தது
ஏது தளர்ச்சி!
ஆழ்ந்து செலுத்திடு
வளர்ச்சி!
ஆயிரம் உண்டு
மலர்ச்சி!

Sunday, May 20, 2007

மேதா பட்கர் வந்தார்!

மேதா பட்கர் வந்தார்,

மேன்மை நமக்கு தந்தார்,

நர்மதை அணை எதிர்ப்பு,

நாடு தழுவிய அளவில்

'பெருந் திட்டங்கள்',

மலைவாழ் மக்கள்,

தலித் மக்கள்,

விவசாய மக்கள்,

தொழிலாளர்கள்,

உழைக்கும் மக்கள்,

அனவரையும் அரவணைத்து,

ஆதரித்து,

சமூக இயக்கங்களின்

தேசிய கூட்டணி அமைத்து,

அமைப்பாளராய்

ஓடி, ஆடி உழைத்து

மக்கள் அரசியலை

முன் நிறுத்தி,

மாற்று திட்டங்களை

செயல்படுத்தி,

கிழக்கையும், மேற்கையும்,

தெற்கையும் ,

வடக்கையும் இணைத்து,

அற வழியிலே,

அறையும் மொழியிலே,

உணர்த்த ஒலித்து,

ஓயாத சங்காய்,

உழைக்கும் மக்கள்,

உள் ஒளியாய்,

அடி நாதமாய்,

அடிமை விலங்கு

உடைத்து,

ஆளும் ஆதிக்க வர்க்கத்திற்கு,

சிம்ம சொப்பனமாய்,

சூறைக் காற்றாய்.......

Thursday, May 17, 2007

அஞ்சல்.....

அக்னியின் சுட்டெரிப்பிலும்
அயராது,
அப்துல் கலாமிடம்
முறையீடு.


2000 அட்டை
ஊரைக் காக்க,
நீரைக் காக்க,
உழவைக் காக்க,
உறவைக் காக்க,


ஆற்றங்கரை மறவர்,
விரிவாக்க எதிர்ப்பு
உணர்வை,
விழியில்ஏந்தியவர்,


துறைமுகம் மறைமுகம்,
எம் முகத்தையும்
எளிதில் காணும்
எதிர் கொள்ளும்
நேர் முகம்,
இடர் விரட்டும்,
சுடர் முகம்.

மழை....

குவிந்த மேகங்களை,
குளிர்ந்த திவலைகளை,
விழுந்தடித்து விரட்டியது,
மிகுவிசையுடன்.


வெட்டிடும் மின்னல்,
விரட்டிடும் சூறை,
பெருந்துளிகள்
வாரி இறைத்து,
வாசனை கிளப்பி,
வாங்கலுடன் சென்றது,


ஏங்கிய இதயங்களை,
மேலும் காய்த்தது.

இறுமாப்பு...

'ரீட்டா'!' கத்ரீனா'! 'எல்நினோ'!
எல்லாம் உங்களுக்கு!
இயற்கை மீதான ஆதிக்கம்!
என்ன முடியாத பாதிப்பு!
என்ன இருக்கு உம் சாதிப்பு!
இன்னும் எதுக்கு இறுமாப்பு!

Wednesday, May 9, 2007

போராடு!

வேலிக் காத்தானை பிடிங்கிட்டோம்!
வேற பயிர் செய்திட்டோம்!
கரம்பா எதையும் வைக்க மாட்டோம்!
காலி மனையும் விடமாட்டோம்!


வீட்டுமனை வேணும்னா,
உம் வீட்டை அதிலே கட்டு!
மனை வியாபாரம் இங்கு வேண்டாம்!
மண் வாசனை போகவேண்டாம்!


உழவு ஓட்டுவோம்! எழவை விரட்டுவோம்!
எண்ணி எண்ணி நாள்தோறும்,
ஏங்கி, இனி வாழ மாட்டோம்!


ஏரிக்கரையில் உள்ளவரே!
குளத்தங்கரையில் உள்ளவரே!


ஆற்றங்கரை கிராமம்,
அடக்கு முறையிலும்,
ஒடுக்கு முறையிலும்,
அறிந்த பாடம்,
அறிவிக்கும் பாடம்,


புரிந்து கொண்டு போராடு!
பூமி உனது, போராடு!

முடியுமா!

உள்ளதைச்
சொல்லுங்க,
உதட்டைத் தாண்டி,
வருமா?


நல்லதைச்
செய்யுங்க,
நாளெல்லாம்
முடியுமா!

இடப்பெயர்ச்சி....

என்னங்க,
உங்களைக் காணலே?


அங்கே இல்லை!
இங்கே வந்துட்டேன்.


சதை பிடிச்சிருக்கே!
அடையாளம்,
தெரியலே!

அதெல்லாம் சரிங்க!
என் நிலத்துக்கு,
விலை
அதிகமாக்கிட்டாரு!


வளர்ச்சி இல்லையா?

உத்தி...

சிலை வைப்பு,
ஆண்டிற்கு ஒருமுறை
கொண்டாடும் இடம்,
அவ்வைத் திடல்.


திடல் பிழைத்தது,
நல்ல வேளை,
நம்மவர் சிலை நிரந்தரம்,
பூங்காவுடன்.


புல்லரிப்பு,
ஏங்கிய விழிகள்,
வீங்கின,
உள்ளடக்கம் ஒன்றுதான்.


வைப்பு அரசியல்,
இதுவும் அதுவும்,
இங்கேயும், அங்கேயும்
ஒன்றுதான்.


அங்கேயும் அலங்கரிப்பு,
இங்கேயும் அவ்வாறே,
எவர் வைத்தார்,
இப்படி.


இவர் காலத்து
சாதனை,
சிலை வைக்கும் காலம்
சரித்திரம்.


'தரித்திரம் போக்கும்'
குடமுழுக்கு,
கோயில் எழுப்பு
வாயில் தோறும்,
வளைவு அமைப்பு...

Monday, May 7, 2007

சிலை அரசியல்

எம்மவருக்கு,
முச்சந்தியில்,
பாலத்தில்.


குறுக்கு, நெடுக்கில்,
சந்திப்பில்.
ஆள் உயரம்,
வெண்கலம்.


எதிர்ப்பு,
பரபரப்பு,
காவல் குவிப்பு,
கடையர் தவிப்பு,


ஒற்றைக் காவல்,
இற்றை
நாள் வரை.


எதிர்த்தார்,
ஏக சொற்கள்,
உதிர்த்தார்.


இன்னொரு
சிலை
அணியம்,
எமக்கு வேண்டியவர்.


கோவில் சிலை,
மட்டும்
எதிர்ப்போம்
என்றில்லை!


உடைப்பு அரசியல்,
அடிப்பு அரசியல்
ஆரம்பம்,


'உரு'வாக்கும்,
வழிபா(ட்)டு அரசியல்,
வளர்ச்சி,
முன்னேற்றம்.

Tuesday, May 1, 2007

மலேசியாவில் வதை...

வீட்டு வேலை, காட்டு வேலை,
இழிந்த வேலை,
எங்களுக்கு இல்லை.


இருக்கின்றான் இந்தியன்,
அவனில் இளைச்சவன்,
இளிச்ச வாயன் தமிழன்.


அட்டை கடி,
தொற்று நோய்,
அடிதடிக்கு பணிவாய்,
எசமான விசுவாசம்,


ஆங்கிலேயரோ,
எவரோ,
கண்காணியாய்,
கண்ணியம் இழந்து,
மண் இழந்து,
கடந்த கால வரலாறாய்,


வீட்டிற்குள் பூட்டி வைத்து,
வதை,
கண் ஒளி இழந்து,
உடல் நலிவுற்று,
வெறும் கூடாய்,
ஆவி பிரிவதற்குள்,


பழி வராமல், காட்டிற்குள்,
வீசினார் தமிழரை,
குப்பையை வீசுவது போல்,
போனது,
தமிழன் உயிர் மட்டும்,
அல்ல,
தமிழ்நாட்டின் சுயமும்,
மரியாதையும்.

மகாராட்டிரம்-மாறவில்லை!

'கோமியம் தெளித்தேன்,
புண்ணியம் சேர,
அதில் என்ன குற்றம்,
இழிசனர் குழந்தைகள்,
நன்றாக படித்திட,
அவர் மீதும்,
பள்ளிக்கூடம் முழுவதும்,
'தோசம்' நீங்க',
ஆ(சி)ரியன் அல்லவா!

Saturday, April 28, 2007

உரைத்தவன்!

என்னிடம் பேசவில்லை!
அவன் கூற்று!
அவனிடம் பேசியது,
இவனிடம் கூறவில்லை.


அவன்!
என்னிடம், உன்னிடம்,
எவரிடம்,
பேசியது, ஏசியது,
உரைத்தவனுக்கும்,
உனக்கும் வெளிச்சம்.

'கீதை உபசாரம்'

தெருவிற்காக வீட்டை அழிக்கலாம், ஊருக்காக தெருக்களை அழிக்கலாம், நாட்டிற்காக நகரத்தை அழிக்கலாம், மாநிலத்தை அழிக்கலாம். இவ்வாறு கீதை உபதேசத்தில் கூறப்பட்டுள்ளதாக, புதுவை ஏம்பலம் சட்டமன்ற உறுப்பினர், திருவாளர்.ராசாராமன், சட்டமன்றத்தில் துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசுகையில் தெரிவித்துள்ளதாக, நேற்றும் இன்றும் பத்திரிக்கைகளில் செய்தி வந்துள்ளது.


அவர் மேலும் பேசுகையில், தாய் குழந்தையைப் பெற நிறைய இரத்தம் சிந்துகிறாள். அதுபோல, ஊரை இழந்து, நாட்டை இழந்து, மக்களை இழந்து துறைமுக விரிவாக்கம் வேண்டும் என வக்காலாத்து வாங்கும் சட்டமன்ற உறுப்பினர், திடீர் ஞானம் எப்போது, எங்கே பெற்றார். தேங்காய்த்திட்டு அழிந்தாலும் பரவாயில்லை, நிலத்தடி நீர் உப்பு நீரானாலும் கேள்வியில்லை ஏன், ஒட்டுமொத்த புதுவையே பாழானாலும் தமக்கு கவலையில்லை என்பவர், ஏம்பலம் தொகுதி மக்களுக்கு மட்டும் என்ன செய்தார்? செய்வார்?


தலித் மக்கள் பிரதிநிதியாக உள்ள இவருக்கு, தேங்காய்த்திட்டு கிராமத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் தலித் மக்கள் வாழ்க்கையைப் பற்றி அக்கறை இல்லையா? மிகவும் பிற்படுத்தப்பட்ட, உழைக்கும் மக்கள் மீது பற்று இல்லையா? இவர்கள் அனைவரையும் அழித்து துறைமுகத்தை அமையுங்கள் என ஒரு வட நாட்டுக்காரனுக்கு, மக்கள் விரோத திட்டத்திற்கு ஆதரவாக, ஆலோசனை அளிக்கிறாரா? புதுவை அழிந்த பிறகு எந்த ஊரில் பிழைப்பு நடத்துவார்? போராடும் மக்கள், பொது மக்கள், வெளிப்படையாக மக்கள் மன்றத்தில் கேட்கின்றனர்.

Friday, April 27, 2007

'ஆய்ந்தாய்ந்து'

'ஆய்ந்தாய்ந்து' கொண்டதா? பழக்கம், பெரும்பாலும் நட்பாகி விடுகிறது! அறிந்தவர், தெரிந்தவர், நண்பராகி, நடுவீடு வரை நீண்டுவிடுகிறது. உள்ளதை எல்லாம் கொட்டி, 'உண்மை நண்பர்' என்றாகி விடுகிறது. ஒருவழி போக்கு என்பதும் கூட, நெடுவழி சென்ற பின்பே வெளிச்சம். படித்தவர் என்பவர், பக்குவம் அடைந்தவர்! எதற்கு? யாருக்கு? ஊரில் நடப்பது, உனக்கு என்ன? எனக்கு என்ன கூலி? இலாபம்? நேரம் வீணாகுது, காலம் கடக்குது, இடத்தைப் பிடி! இருக்கும் காலத்தை இழந்தவர்! சுய முயற்சி உடைந்தவர், போனது போகட்டும். என்ன பலன்!

கடவுளா?

'சட்டை எடுப்பது போல்',
சட்டத்தை கையில் எடு!
ஏன்?
'காக்கிச் சட்டை' மட்டும்
கடவுளா?

Tuesday, April 24, 2007

...உனக்கே

ஒளி குன்றினாலும்,
ஒலி குன்றவில்லை,
கூன் இட்டாலும்,
திமில் பார்வை,


பொழுது புலர்வது,
உனக்குப் பின் தான்.
'கவிழ்த்து வைத்த கோழி',
'அவிழ்த்து விட்ட முடி'
உன் உவமை,
உனக்கே.

Monday, April 23, 2007

சமதர்மவாதி...

சமரசவாதி! சமதர்மவாதி!
'நம் கொள்கைதான்,
அவர்,அங்கேயிருக்கிறார்'
அனைவரையும்,
அரவணைத்துச் செல்கிறார்.


கேட்டதை,
ஏன்? பல சமயங்களில்,
கேட்காததைக் கூட,
நினைத்துப் பார்க்க
முடியாததைக்கூட,


ஆச்சரியத்துடன்,
அகல விழிகளில்,
அகலாத நினைவாக,
ரசிகர் மன்றம்,
தோற்கும் பாணியில்,


பாதையில்,
பதாகைகளில் நடிப்பு,
விஞ்சும்,
வீதிகளில் நாள்தோறும்.
தினசரிகளில்,
அரங்கேற்றம்.


சென்ற பணி,
ஆராதிக்கவா?
ஆமோதிக்கவா?
தன்னை இழந்து,
கொள்கை மறந்து,
மரத்து,


அமைப்பின் ஈர்ப்பில்,
கடைசி வாய்ப்பு,
வாய்ப் பூட்டு,
தாமாக,
பழம் பெருமை,
மக்கள் விளாசுகிறார்...