Monday, July 5, 2010

ஈசல்

நீடித்திருப்போம்
நெடு நேரம்
நிலைத்திருப்போம் நெடுங்காலம்
நினைப்பில்லாமல்

நீல நயனம் செல்லாமல்
குவிக்கும் வெளிச்சம்
நோக்கி
கும்பலாக, கூட்டமாக
படையெடுப்பு ரீங்காரத்துடன்
ஆங்காரம் இல்லாமல்
அடர்த்தியாக

வெளிச்சத்துடன்
வேகம்
ஆதரவாக வெளிப்பட்ட
பல்லிகள்
அவ்வளவும்
இங்கேயா,

ஆவேசத்துடன்
ஒளி வெள்ளம் காத்திட
தாவிப் பிடித்து,
பிடித்து
கதை முடித்து
தொய்வில்லாமல்
தொடர்ந்து
அரை மணி நேர
போராட்டம்

பின்
பல்லாயிரம் உயிர்கள்
வாசல் கீழே
குப்பை நோக்கி சென்றது
துப்புரவில்

மணித் தியானத்தில்
மகா மனிதர்
யாவரும்
தம் இல்ல விளக்குகள்
யாவும்,
'டப்,டப்'
என்றணைத்திட

இருள் கவிழ்ந்திடும்
இல்லங்களில்
இப்படியாவது

மின் சிக்கனம்
வெப்பம் தணிப்பு
அதற்கென அறிவிப்பில்
ஆதரவளிக்காதோர்

அனைவரும்
ஈசல் முயற்சியில்
ஆதரவளித்தார்

விளக்குகள் அணைத்து
வெளிச்சமானார்!

Monday, June 28, 2010

பிடியில்!

நொடிப் பொழுதும்
வீணாகாமல்
பேசியே தீர்க்கும்
பிடியில்

பேய்ப் பிடித்து
நோய்ப் பிடித்து
அமுக்கு அமுக்கி
விரல் வளைந்து
நெளிந்து

செவிப்பறைகள்
தவிப்பறைகளாக
மாற்றி மாற்றி
கழுத்து நெளித்து

வாடிக்கை
வாழ்க்கையில்
வேடிக்கை சேர்க்கும்
வினோதம்!

மூடிக்கை வைத்து
மூலதனம் குவிக்கும்
கோடிக்கை கோரிக்கை வைத்தும்
வேடிக்கை பார்க்கும்

கோடிக்கை கொள்கை என்றாலும்
விருப்பத் தேர்வு
விடியலைக் காணுமா?

அன்றாட அலைக் கழிப்பு
தின்றாட தினம் உழைப்பு
திண்டாட்ட வாழ்க்கையிலும்
கொண்டாட்டம்!

குறைகளை இரு பக்கம் சேர்த்து
ஒலி இல்லாது சூழல்
வலி தரும் நிலையில்
தொடர்பு பேச்சில் தொலைக்கும் காசு
சில்லரையானாலும்
சீராக சேர்த்து வெள்ளமாக
செல்லமாக

உள் நாட்டு வெள்ளையன்
பெட்டிகளை நிரப்புவான்
கோடிக்கணக்கில் நிமையங்களில்
பல சமயம் பங்கும் உயரும்
சந்தையும் வளரும்
மக்களைத் தவிர்த்து!

Wednesday, June 9, 2010

சோங்கிடாதே!

"காணி நிலம் வேண்டும்
காணி நிலம் வேண்டும்
பராசக்தி காணி நிலம் வேண்டும்....."

மாகாணியில் அரிசி இல்லை
மாகாளி தருவாளா?

அட்டை எடுத்து வா
ஒரு ரூபா அரிசி
ரேசன் கடையிலே
ரோசமுடன் வாங்கிப் போ!

உண்ண முடியாதே அய்யா!

விற்க முடியாதா,
அண்ணே!

விருப்பம் உமக்கில்லை
விற்பனையாளர் வீட்டிற்கே
வருவார்!

விலாவாரியாக சொல்வார்
கூடுதல் சில்லரை
குமட்டும் அரிசிக்கு!

சிமிட்டு வியாபாரி
சீராக சேகரித்து
அடுக்கும் தொழில்
எல்லைகளைக் கடந்து!

தீட்டி உம்மிடமே
மறு சுழற்சி
வண்ணப் பைகளில்
வலம் வரும்!

வாங்கி உண்பாய்
சோங்கிடாதே!

பேசாதே!

யாரைப் பற்றியும் பேசாதே!
ஊரைப் பற்றியும் பேசாதே!

உன்னைப் பற்றி பேசு!

கெஞ்சும் உன் நெஞ்சைத் தொட்டு
பேசு!

கொஞ்சும் மொழியில்
வஞ்சமின்றி!

Sunday, June 6, 2010

ரோசனா முர்ரே, நமது பரம்பரையின் அறிவுசான்ற கவிஞர்களில் ஒருவராக, உலகப் பகழ் பெற்ற இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர், பாலோ கொயெல்கொ நமக்கு அறிமுகம் செய்கிறார்.

''அன்பின் கையேடு" எனும் கவிதையை, நாம் இப்போது கீழ்க்காணும் வரிகளில் காண்போம்.

ஆன்மா புலப்படாது
தேவதையும்
சிந்தனைகள்
புலப்படா
ஆயினும்,
அன்பினால்
ஆன்மாவை
தேவதை உறைவிடத்தை
ஊகிக்கலாம்
உம் மனதை உணரலாம்
சில சிந்தனைகளால்
நீ
உலகை மாற்றலாம்

இழப்பு......?

சர்க்கார் மனிதன்
இழப்பு
சரித்திரம் ஆனால்
சாதா மனிதன்
இழப்பு......?

வேண்டும்!

கோவில்கள் வேண்டும்
குளத்திற்காக
வழிபாடு வேண்டும்
மரத்திற்காக
கழனிகள் வேண்டும்
உணவிற்காக
காடுகள் வேண்டும்
மழைக்காக
மழை வேண்டும்
உயிர்களுக்காக
உயிர்கள் வேண்டும்
உலகிற்காக
உலகம் வேண்டும்
வாழ்க்கைக்காக
வாழ்க்கை வேண்டும்
வாழ்வதற்காக

Saturday, June 5, 2010

தீருமா!

எவர் செய்தாலும் ஏற்கமாட்டோம்!
மக்கள் உயிர் எடுக்கும் செயல்
ஒப்பமாட்டோம்!

உடமை அழிப்பு
உயிர் அழிப்பு
கடமை என்றாகுமா!
கொள்கை என்றாகுமா!

மாற்று அரசியல் வைக்கும்
வழிமுறை
மனிதருக்கா!
மயானத்திற்கா!

அனைவரும் இழந்த வெற்றிடம்
வேதனை இடம்
சாதனை என்றாகுமா!
சரித்திர புகழாகுமா!

தரித்திரர் நிலை உயர்த்துமா!
சந்ததி இழப்பு
அனாதை குழவி
நிலை தேறுமா!

கவர்ச்சி அரசாங்கம்
முயற்சி அறிவிப்புகளத் தாண்டுமா!
அல்லல் தீருமா!
சன்னல் திறக்குமா!

புது வெளிச்சம் காற்றுடன்
புழுக்கம் தீர்க்குமா!
மக்கள் இறுக்கம் போக்குமா!

வருந்தும் மாந்தர் வாழ்க்கை
வாட்டி வதைத்திடும்
அவலம் தீருமா!

Monday, May 31, 2010

கருவாட்டு மனிதன்

வேகாத வெய்யிலில்
வேகும் மனிதர்
சாயாத பொழுதில்
சாலையில் விளிம்பில்
சாரியாக

தம் பசி போக்க
நுங்கு விற்கிறார்
வெள்ளரியும் சேர்த்து
தம் பிழைப்பு கூடையுடன்
விரையும் மனிதரை
கூவி அழைத்து

வேகாத பொழுதில்
எரியும் தணலில்
தம் உடலும் சேர்த்து
எரிய

கரிய மேனியும்
மேலும் கருத்திட
வியர்வை வழிந்தோட

குடை பிடித்து விற்கலாமே!
நிழலில் சென்று விற்கலாமே!

"பச்சு காரனே ஏத்த மாட்டறான்,
பொழப்புக்கு என்ன செய்ய"

Tuesday, May 25, 2010

சவாரி

அவன் பார்த்தான்
கடந்து
நான் பார்த்தேன்
தொடர்ந்து
நான் பார்த்ததை
அவன் பார்க்கவில்லை

அவள் பார்த்ததை
நான் பார்த்தேன்
அவனும் நானும்
பார்த்ததை
அவள் பார்த்தாள்

பரபரப்பு போக்கில்
சுற்றிலும் சுழலும்
விழிகள்
வாகனத்தில்
வலம்

உணர்ச்சி விசையில்
உந்துதல் முயற்சியில்
ஊர்வலம்

ஒருவரை ஒருவர்
முந்தி
உடன் இருப்பவர்
குந்தி

எறும்பும் ஏலனம் செய்யும்
சாரி
குறும்பு சவாரி

Monday, May 24, 2010

வழியில்லையா?

இருக்கும் மொழியே எட்டவில்லை
எங்களுக்கு
பேச்சிலே அதன் மூச்சிலே
வாழ்கிறோம்
பேதமை பெற்றியாக
போதனை ஏதுமின்றி

கல்விச் சாலைகள்
எம் புல காட்சியாக

காதில் விழுகிற சேதி
புரியவில்லை

எமக்கு சீர் திருத்தமாம்
ஊர் திருத்தும் மாந்தர்
உளறல்

புதுமையாம்
கணினி உலகுக்கு
கை கொடுக்குமாம்

படித்தவரே பதைக்கிறார்
"உள்ளதும் போகும்
நொள்ள கண்ணா"
என்கிறார்

உருப்படியாய்
எம் மக்கள் இருக்கும்
மொழி
கற்றிட

அதன் வழி நின்றிட
வழியில்லையா?

Sunday, May 16, 2010

வெறி!

கலப்படம்
எங்கும் எதிலும்!

புலப்படும்!
இறந்தவர்,இழந்தவர்
புலம்பலில்!

மருந்தில் தொடங்கி
விருந்தில் முடியும்
நீண்ட பயணம்!


சில காலம்
பெட்டிச் செய்தியாக!
பரபரக்கும்!

பட்டியல் மருந்துகள்
பட்டை பட்டையாக
சலை ஓரங்களில்!

குவியல் குவியலாக!
குப்பையுடன்,குப்பையாக

தொப்பைகளை நிரப்பிய
வெ(ற்)றியில்!

நவீன குடு,குடுப்பக்காரன்!

"உச்ச நீதி மன்றம் வரை தமிழ் ஒலிக்க
வேண்டும்"

குடு, குடு, குடு,.................

உமது வாக்கு பலிக்க வேண்டும்
குடு.குடு.குடு.....................

வரும் தேர்தலிலும் செயிக்க வேண்டும்
குடு,குடு,குடு...........................

மாற்றங்கள்!

எண்ணிறந்த ஏமாற்றங்கள்
என்னுள் விளைந்த
தடுமாற்றங்கள்!

கைப் பொருள் கரைந்த
காரணங்கள்!

கவனமற்ற காரியங்கள்!

Thursday, May 6, 2010

கோபால்ட் 60

காயலாங் கடையின்னாலும்
காயலா வரலாம்
கதி மோட்சம் பெறலாம்
விதி ஏற்கும்
வீதி மாந்தர்

'குசில் கடை'
'மாயாபுரி மகிமை'

Saturday, April 24, 2010

சிறார்:?

திரைமறைவில் இருந்து
தினந்தோறும்
செவிகளைத் தந்து
சேதிகள் பெறுவார்!

மன்னிப்பு அளித்திடும் மனு
பரிந்துரை செய்வார்!

தம்மிடம் புகலிடம்
தேடிய
ஆண்டவனின் குழந்தைகள்
உள்ளத்தைக் காட்டியபோது
அவர் உடலையும்
பார்த்தவர்!

கால் நூற்றாண்டு கடமையுடன்
நெறி நின்று
வெறி வென்றவர்!


'வாடிகன்' புகார் பெட்டியும்
திறக்கவில்லை!
பெண் துறவியரை
கண்காணிக்கும் எந்திரம்!
கடல் கடந்து
செர்மனிக்குள் செல்லவில்லை!
குழந்தைகள் மீதான வன்மத்தில்!


பெண்கள்:
விலா எலும்பின் பிறப்பு
சிறார்:?

Monday, April 19, 2010

'இவ் வெள்ளி'யாவது!

'இவ் வெள்ளி'யாவது
விடிவெள்ளி யாகுமா!

பாதிரியின் பாவம்
செர்மனியில்,
அமெரிக்காவில்,

சிறார் மீது பால் வன்மம்
கால் நூற்றாண்டு,
கரை தீருமா!

'வாடிகனும்',
வாடிக்கையாக
வேடிக்கை காட்டும்!

கன்னித் துறவியர்
வாழ்க்கை ஓட்டை
காண,

கண்காணிப்பு,
மட்டும்
தீவிரம்

Monday, March 29, 2010

பி.டி. கத்தரி!

ஏதோ செய்கிறார் ஓரமாக
எங்கேயோ செய்கிறார் பாரமாக
பாமரர் அறிந்திலார்
பாழும் கத்தரியின்
வாழ்நாள் குறை!

வேளாண்மை மக்களுக்கு
விவரம் சேர்க்க
விரிவான, செறிவான இயக்கம்
தேவை!

பேருக்கு செய்வது!
பெருமைக்கு சேர்வது!
செய்திக்கு முனைவது!
செறிவானதன்றோ!

வருமானம் ஆகும்
உன் பாடு!
செரிமானம் ஆகாத
செயல்பாடு!

சலிப்பு

கிறீச்சிடும் ஒலிகள்
ஓயாது இரைந்திடும் ஒலிப்பான்கள்
உண்டாக்கும் சலிப்புகள்

சப்தத்தின் உள் கரைந்திடும்
குழந்தைகள் விளையாட்டு ஒலிகள்

இரைச்சல்,கரைச்சல்,கும்மாளம்.குதூகலம்
யாவும்,

சலிப்புகளுக்கு
காகங்களும் விலக்கல்ல-

எஞ்சிய மரங்களில்
துஞ்சிய உயிர்கள்-

வாடகைக் காரனின் குடியிருப்பு போல்
எப்போது காலியாகுமோ

பதட்டத்தில்
காலங்கள் கழியும்
நிம்மதியின்றி

Friday, March 19, 2010

முறிக்கும்!

இதிகாசங்கள் காட்டும் வெளிச்சமும்
இங்கே!
பரிகாசங்கள்

உணர்த்திய முடிவும்
உணர்ச்சியின் வடிவாய்
இங்கே!

வில்லின் மேன்மை
விழாக் கோலம்
ஆண்டும்!

சொல்லின் கேண்மை
சோதனையாய்
சோம்பல் முறிக்கும்!

Tuesday, February 2, 2010

இஞ்ஞான்றும்!!

வளம் உள்ள இடங்கள்
யாவும் வளர்ச்சி!

வங்கியின் முதல்
வட்டியுடன்!

தங்கி வளர்ந்திடும்!

தமிழரைப் பிரித்திடும்!
தன்னுணர்வைக் கெடுத்திடும்!
தற்சார்பை ஒழித்திடும்!

மாசிலா உலகம் மலர்க எஞ்ஞான்றும்!!
காசிலா உலகம் கழலும் இஞ்ஞான்றும்!!

ரத்த வங்கியார்?

வருகிறார்
புது ரத்தம் பாய்ச்ச!

திராவிட சோகை போக்க!
தேசிய மதன் மித்ரா!

முகாமிட்டு
சலாமிட்டு!
சர்க்கரை கலந்து
அக்கரையாக!

சிட்டுக் குருவி
லேகியமும்!
சீசாக்கலில்
தயார்!
சீர் திருத்தம் நோக்கம்!

கோலியாக தருவார்
கேலியாக எண்ணாதே!

தமிழன் பலகீனம் போக்க!
ஆயூர் வேதமும்
ஆயுள் நீடிக்க!

உயர்ந்த நிலைக்கு
உம்மை ஏற்றி
இருக்க!

வருகிறார்!
இளமை ஊஞ்சலில்!!

Sunday, January 31, 2010

அடுக்களைப் பின்

"கா கா கா
கா கா கா
கா கா கா......"

கேவி அழைத்தார்
பண்ணிய பலகாரத்துடன்
புண்ணியம் தேடி

எதிர் வீட்டுக்காரர்
புதிராக
வீதியில் இறங்கி


எந்தன் வீட்டில்
காகா
அழையாத விருந்தாளி

அன்றாடம் குடும்பத்துடன்
குட்டி அணில்களுடன்
எதிர் எதிராக
வழி விட்டு கொரிக்கும்

பின் வீட்டு புறாக்களும்
தம் கூட்டைவிட்டு
எம் வீட்டில்
சுற்றி வந்து விரட்டும்

அணிலும் காகமும்
அலுத்துப் போய்

ஆகாரம் பகிர்வு
அன்றாட நிகழ்வு

அடுக்களைப் பின்

எயித்தியில் நில நடுக்கம்.

இலத்தின் அமெரிக்க தீவு நாடான எயித்தியில், நில நடுக்கம்.இரண்டு இலட்சம் உயிர்களைப் பறித்தது.பல இலட்சம் மக்களின் வாழ்க்கை ஆதாரமே சிதைந்து, சின்னா பின்னமானது.

குடிக்க நீர், உண்ண உணவு, உடுத்த உடை, வசிக்க வீடு, யாவும் இன்று அந்நியமாகியுள்ள அவலம். சில ஆண்டுகளுக்கு முன் சூறைக் காற்றில், சுழன்ற அவர்கள் வாழ்க்கை, இன்று மீண்டும், இயற்கையின் சீற்றத்தில் சீரழிந்துள்ளது.

அண்டை நாடுகளின் உதவிக் கரங்கள், விரைவாக சேர முடியாத அவலம்.இயற்கையின் அடிக்கு இரையான உயிர்கள், சிதைந்து கட்டிடங்களுக்கிடையில், அப்புறப் படுத்திட, கெளவரமாக அடக்கம் செய்திட வாய்ப்பில்லை.

அமெரிக்காவில் வசிக்கும் எயித்தியின் பெண்மணி கூறுகிறார்,"என் உறவினர் உடலாவது கிடைத்தது, ஆனால் உடல்கள் கிடைத்திடாத என் இன மக்கள் துயரம் பெரியது".

போர் என்றால் அதி விரைவாக, மின்னலை விஞ்சும் தாக்குதல் மூர்க்கம்,உடனடி அழிவுக்கு ஏங்கும் போர் வியூகம், தொழில்நுட்பம், அணி சேர்க்கை, இராணுவ நடவடிக்கை, இயற்கை பேரழின் போது தாமதம் ஆவது ஏன்? எப்படி?

அழிவாற்றலில் முனைப்போடு,பிணைப்போடு செயல்படும் அறிவாற்றல், உயிர்காக்கும் செயல்களில் சுறு, சுறுப்பு எங்கே?

உலக சமுதாயம், நாகரிக சமூகம் பதில் கூறுமா?

பாதித்த மக்கள் மறு வாழ்வு விரைந்து நடக்குமா?

Friday, January 15, 2010

அகத்தில்!

முடங்கி விட்டேன் என்கிறாய்!
ஆம்!
உம் செயல் பாட்டு வளையத்தில்
நான் இல்லை!

அடங்கி விட்டேன் என்கிறாய்!
ஆம்!
எம் செயல்பாட்டுக்குள்
வளையம் இல்லை!

ஒடுங்கி விட்டேன் என்கிறாய்!
ஆம்!
உன் ஒடுக்கு முறைக்கு பயந்து
உம் அமைப்பின் வெளியே
சுயமாக!

குன்றி விட்டாய் என்றாய்!
ஆம்!
நயத்தக்க நாகரிகம் வேண்டி
அகத்தில்!

வணிகத் திருவிழா- 2010

வணிகத் திருவிழா- 2010

புதுவையில் கோலாகலம்.உருவா70 இலட்சம் அரசாங்கம் ஒதுக்கீடு. பரிசுப் பொருள்கள் ஏராளம், புதுவை மக்கள் பரவசம்.புதுவை, சித்தன் குடி பகுதியில் அமைந்துள்ள, செயராம் திருமண நிலையத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் நுகர்வுப் பொருள்கள் கண்காட்சி.மக்கள் கூட்டம் அலைமோதும் கேளிக்கை. இந்த ஆண்டும் சாதனை சரித்திரம்! மக்களை மனச் சலவை செய்திடும் தந்திரம்! மாநில அதிகாரத்தின் எந்திரம்!

சிறிய மாநிலம்! சிறப்பான மக்கள்! எதையும் ஏற்றுக் கொள்பவர்கள்! தங்கள் வாழ்க்கை பிரச்னைகளைக்கூட மறந்து,இழுத்த இழுப்புக்கு இழப்புகளை ஏற்கும் இளியர்! புதிது, புதிதாக தொலைக் காட்சிப் பெட்டிகளை வாங்கி பெரு வாழ்வு வாழ வேண்டும்! வீட்டு உபயோகப் பொருட்களை அடிக்கடி மாற்ற வேண்டும்! சாதா தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்து, எல்சிடிக்கு மாற வேண்டும்!கடன் பட்டாலும் கவலையில்லை! பரிசுப்பொருள் கிடைக்க வேண்டும்!

நாளைப்பொழுதுக்கு உலையில் வைக்க அரிசி இல்லை! அதன் விலையும் அருகில் இல்லை! கிலோ அரிசிஉருவா 34! அது பரவாயில்லை! கிலோ அரிசி உருவா 1, பெயர் பதிந்து கொள்ளலாம்!வீட்டில் ஒருவருக்கு வேலை இல்லை! அரசாங்க வேலையும் காலி இல்லை!3000 பதவிகளுக்கு மேல் காலி செய்திட்டோம்! சிக்கன நடவடிக்கை! சீற வேண்டாம்!

தமக்கு என்ன நேர்கிறது. தம் வாழ்க்கையின் நிலைப் பாட்டை, உறுதி செய்யும் கடமை உணர்ச்சி வேண்டியுள்ள அரசாங்கம் எவ்வாறு மக்களின் வாழ்க்கையை திசை திருப்புகிறது.

காலத்தின் சரியான போக்கை அறிந்து கொள்ள வேண்டிய மக்கள், தம் இல்லங்களில் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளின் முன்பு, நாள்தோறும் சீரழிந்த கலாச்சார சரக்குகளை, சில்லரையாக சீராக கொள்முதல் செய்து செரித்திடும் போக்கு,

தம் மீது தொடர்ந்து நப்பாசையாக திணிக்கப்படும் நுகர்வுக் கலாச்சாரத்தை எவ்வித விமர்சனமின்றி ஏற்றுக் கொள்ளும் போக்கு ஒரு தரமான , அறிவார்ந்த மக்கள் சனநாயகத்தை வளர்த்திடுமா?

Sunday, January 10, 2010

இல்லை!

இருந்த போதும்
இறந்த போதும்
துடித்த
உணர்வு
ஏங்கிய
உயிர்

நாடிய கண்கள்
நலம் குறைந்த போதும்
படுக்கையாய்
கிடந்த வேளையும்

உள்ளம்
உடுக்கையாய்
ஒலி எழுப்பி
உறவைத் தேடிய
சொந்தம்

உந்தன் தொடர்ச்சி
ஒப்புக்கும் இல்லை!
உப்புக்கும் இல்லை!

இதற்குத்தான் எழுதினாரோ!

கனவு கண்டேன்
உனைக் காண
ஆவல் கண்டேன்!

நனவு வாழ்க்கையில்
உன் ஞாபகம்
இல்லை! ஆதலால்!

கண்டேன் கனவில்
ஆபத்தில் உள்ளதாக!

கனவுகள் பெரும்பாலும்
அச்சம் அளிப்பதாக
விரைந்தேன்! விரைவாக!
கைபேசியில்!

கனவுகள் காணுங்கள்
என்றவர் இதற்குத்தான்
இன்னுரை எழுதினாரோ!

Saturday, January 2, 2010

ஏட்டில்!

கட்டிடத் தொழிலாளி
மாநிலங்களைக் கடந்து
உழைப்பை விற்கிறார்
ஒப்பந்தக் கூலியாக

ஓங்கி உயரும் வளாகம்
வணிகம்
ஒடுங்கிப் போகும் உடலும்
உழைப்பும்

குடும்பத்தைப் பிரிந்து
குழந்தைகளை மறந்து
வறுமை விரட்டிட
வயிற்றுப் பிழைப்பு நடத்திட
கட்டிட வேலை

காலை மாலை இல்லை
இரவில் பொங்கி
இடிபாடுகளில்
தங்கி

ஈட்டும் நோட்டும்
கைக்கு கிடைக்க வில்லை
வேலை இல்லை

தங்கிட இடமும் இல்லை
பாக்கி பணமும்
இலட்சம் வாரக் கணக்கில்
இல்லை

காவல்துறைக்கு புகாரும்
கடிதேகவில்லை
கழட்டி விட்டார்
விரட்டி விட்டார்

தொழிலாளர் துறை ஆணையரும்
இது எம் வரம்பில் இல்லை
மாநில எல்லையில் மனு செய்யுங்கள்
என்றார்

மனுநீதி நாட்டில்!
மனித நீதி ஏட்டில்!