Wednesday, September 30, 2009

மாட்டாங்க!!

குண்டி கழுவ தண்ணி இல்ல!

குடும்பத்துடன் வாழ நாதி இல்ல!

பசி அடங்கி நாளாச்சு!

பாழும் உறக்கமும் போயாச்சு!

பொறந்த தாச்சும் பொழச்சிடாதா

பொங்கி திண்ண வாய்ச்சுடாதா

ஒரு வா அரிசி உள்ள தள்ள முடியல

கலர் டி.வி. குடிசையில

காட்சி பார்க்க முடியல

கரண்டுக்கு எங்கே போவேன்

மண்ணென்னய் அடுப்பு எரிக்க

மனசிருக்கு

சோத்துக்கடை பொட்டலம்

காத்து கிடக்கு பிள்ளைக

சோளி ஏதும் போனா

காலி இல்ல வயித்துல

குப்பை பொறுக்க கோணி பை

மழைக் காலம் வரும் முன்

வேல பாக்க போகனும்

கூவமும் சரியானா

எங்க வாழ்வு எங்கு போகும்

சருவுதான் அப்பவும்

வுட்டு வக்க மாட்டாங்க

காத்திடு

சிகப்புத் துண்டு தோழா!

அலுப்பு கண்ட தோழா!

சலிப்பு கொண்ட வாழ்க்கை

சரிதானா தோழா!

இளிப்பு கொண்ட அரசியல்

கணிப்பு மாற்று தோழா!

கடமையாற்று தோழா!

காலம் நமது தோழா!

கடினம் ஆயினும் தோழா!

கடிதே ஏகிடு தோழா!

காலம் வெல்லும்

கலகம் கருத்தினுள் கொண்டு

கலக்கம் போக்கிடு தோழா!

மாற்றம் என்பது தோழா!

மாறாத விதி என்பது

மீறாத வழி நில் தோழா!

சாயாத கோல்

சருக்காத பாதை

நேரான செயல்

நினைவில் நிறுத்து தோழா!

நேசம் போற்றி தோழா!

மக்கள் தேசம் காத்திடு

தோழா!

சாதனை

'நிலவில் தண்ணீர்',

அறிவியல் சாதனை

ஆம் பூமியில்...?

Monday, September 28, 2009

மரபு

இசுபானிய கவிதை -அல்போன்சினா இசுடோர்னி

(மொழி பெயர்ப்பு)

என்னிடம் கூறினாய்:" என் தந்தை அழவில்லை,

என் தாத்தாவும்"

"எம் இனத்தவன் எவனும் இதுவரை அழவில்லை"
"அவர் எ..கின் உறுதி உடையவர்"

நீ கூறியது கேட்டேன் யான்

நடுங்கும் எம் வாயில் உணர்ந்தேன்

நும் கசப்பான கண்ணீர்த் திவளை

நஞ்சின் வீழ்ச்சியை

எம் உதடுகள் இது நாள் வரை சுவைத்திடாத

மிக மோசமான அமிழ்தம்

சிறிய கோப்பையினுள் இருந்து

நலிவுடன் பிறப்பெடுத்தாள்

துயரங்கள் துய்த்திட

முடிவற்ற காலங்களின் வலி

உய்த்துணர்ந்தேன்

அட,

மகிழ்வற்ற என் ஆன்மா

அதன் நிறையை தாங்க இயலவில்லை

சதுரங்களும் கோணங்களும்

அல்போன்சினா இசுடோர்னி -இசுபானிய கவிஞர்

(மொழி பெயர்ப்பு)


வீடுகள் வரி வரியாய்,

ஒரு கோட்டில் அங்கே,

சதுரங்கள், சதுரங்கள், சதுரங்கள்,

மக்களும் இப்போது சதுர ஆன்மாக்களுடன்,

கருத்துக்கள் அடுக்காய்,அறிவிக்கிறேன்,

அவர் தோள்களில் கோணங்கள் சுமையாய்,

நேற்று தற்செயலாய் கண்ணீர் சிந்தினேன்

அட, கடவுளே, அதுவும் சதுரமாய்!

Saturday, September 26, 2009

கூவம்

நாறும் ஆறு தேறுமா!

நானிலப் புகழ் கூறுமா!

கங்கை நதி ஆகுமா!

கதி மோட்சம் சேர்க்குமா!

திரும்பும் வரலாறு!

திட்டத்தில்!

போனதா?

துரித கதியில் துடுப்பாக

பாயுந்தில்

பகல் வெயில் பயணம்

குறுக்கும் நெடுக்குமாக

குதறும் வாகனங்கள்

கதறும் நடை வாசிகள்

முந்திச் செல்லும் முடுக்கம்

மக்கள் நெருக்கம்


பகடு மேல் ஊர்வலம்

வெளிப்பட்ட வாசம்

வேதனையின் சுவாசம்

பழக்கப்பட்ட மணம்

பாதையின் கரி வளியை

மிஞ்சி

கதுறும் உடல்களுடன்

துடிக்கும்

துண்டு துண்டாக

கண்டு நோகும்

கவலையும் கூடும்

போவார் வருவார்

போதையில் பாதையில்

போகும் வண்டிகளில்

இதுவும் ஒன்று

என்று


இயல்பாய் பசையற்று

நசை வாழ்க்கையின்

நாகரீக சேர்க்கையில்

மாண்ட உயிர் அணிவகுப்பில்

திரளும் மனிதம்

மர உயிர் மாய்ப்பில்

மரை

கழன்று போனதா?

Tuesday, September 22, 2009

மூடிய அறைக்குள் மோதல் சாவு- பகுதி 2

பரிதாபகரமாக காவல்துறை பதிவுகளில், இவ்வாறு கொல்லப்பட்ட நபர்கள்'அடையாளம் தெரியாத திருடன்' என குறிக்கப்பட்டிருக்கும். கொல்வதற்கு முன் யார் என்று தெரியாதவர் கொல்லப்பட்ட பிறகு திருடர்கள் என்றும் ஆள் கடத்தல்காரர்கள் என்றும் அறிய வரும்.

சமீபத்திய கொலை நிகழ்வு, காவல்துறையினர் எவ்வளவு எளிதாக ஒருவரை கொல்ல முடியும் என்பதும், சீருடையில் இருந்து கொண்டு அரசை பிரதிநிதித்துவம் செய்து, எவ்வாறு அதில் இருந்து இலகுவாக தப்பிக்க இயலும் என்பதும் நிரூபணமாகிறது.


போலி மோதல் கொலை சம்பவங்களில், பாகுபாடற்ற, நம்பத்தகுந்த புலன் ஆய்வு ஏற்பாடு, முற்றிலும் இல்லை.முறையான விசாரணை இல்லாமல், இவ்விதம் இழைக்கபடுகின்ற குற்றங்களில், வழக்கு தொடுப்பது என்பதோ, தண்டனை அளிப்பதோ நம்பிக்கை அளிப்பதாக இல்லை.

தேசிய மனித உரிமை ஆணையம், குற்றம் இழைப்பவரை கண்காணித்து நடவடிக்கை எடுக்கக் கூடிய அமைப்பானது, செயலிழந்து கிடக்கிறது. இது, சட்ட அடிப்படையில் அமைக்கப்பட்ட, ஒரு முக்கியமான தேசிய அமைப்பின் சோகமான கதையாகும்.மிகவும் வருந்தத் தக்க, பெரும்பாலும் பெருந்தலைவர் இல்லாத அமைப்பாகவே தற்போது இருந்து வருகிறது.ஆணையம், குறிப்பாக காவல்துறை மற்றும் இராணுவம் இழைத்ததாக கூறப்படும் குற்றங்களில் மட்டுமாவது, தமது கவனத்தை குவித்து இருந்தால், தேசத்திற்கு மிகப்பெரிய சேவை செய்ததாக இருக்கும்.

குற்றவியல் விசாரணை நடைமுறை சட்டம் பிரிவு 132 மற்றும் 197 நிர்ணயம் செய்துள்ளவாறு, மத்திய மாநில அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்திட, அரசாங்கத்தின் முன் அனுமதி பெற வேண்டும் என்ற கட்டயம் உள்ளது.அரசின் அனுமதி பெறுவது அவ்வளவு எளிதல்ல.இதன் சூழலில், எழுதப்படாத சட்ட உரிமை என்னும் காவல்துறை கலாசாரம், மோதல் சாவுகள் நிகழ்த்திட 'நல்ல வாய்ப்பாக' அமைந்துள்ளது.

அரசாங்கத்தின் அனுமதி ஒரு வேளை கிடைத்தாலும், தண்டனை அளிப்பதற்குள், நீதி மன்றத்தின் நெடிய போராட்டம், பல ஆண்டுகளை விழுங்கிவிடும் பெருந்தடை கற்களும் உண்டு.நீதி மன்றத்தின் தீர்ப்பு வரும் சமயத்தில், தண்டனை பெரும் காவல் அதிகாரி அல்லது இதரர், பல கட்ட பதவி உயர்வு அடைந்திருப்பார் அல்லது பணி ஓய்வு பெற்றிருப்பார், ஒரு வேளை இறந்தும் போயிருக்கலாம்.

தேசிய காவல்துறை ஆணையம், தமது 8வது அறிக்கையில், 132 மற்றும் 197வது பிரிவுகளின் கீழ், குற்றவியல் விசாரணை நடைமுறை சட்டம் காவல்துறை அதிகாரிகளுக்கு அளித்துள்ள பாதுகாப்பு விலக்கிக் கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.

அண்மையில், ஆந்திர மாநில உயர் நீதி மன்றம், மோதல் கொலை சம்பந்தமான வழக்கு ஒன்றில் அளித்துள்ள தீர்ப்பில்,ஒவ்வொரு மோதல் சாவு சம்பவத்திற்கு பின், காவல்துறை முதல் தகவல் அறிக்கை போட வேண்டும் என தீர்ப்பளித்தது. இது தொடர்பாக வழக்கு ஒன்று, உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது, அதன் இறுதி தீர்ப்பில், உச்ச நீதி மன்றமானது தடை இல்லாமல், இந்நாட்டில் தொடர்ந்து நிகழ்த்தப்படும் மோதல் கொலைகள் நிகழ்விற்கு, முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புவோம்.

Sunday, September 20, 2009

மூடிய அறைக்குள் மோதல் சாவு பகுதி 1

புசுகர் ராசு, மக்கள் சிவில் உரிமைக் கழகம்

மொழி பெயர்ப்பு

அண்மையில் ஒரு செய்தி பத்திரிக்கையில் மனதை சிலிர்க்க வைக்கும் 12 நிழற்படங்கள் வெளியிடப்பட்டன.அதில், மக்கள் நெருக்கம் நிறைந்த அங்காடியின், குறுகிய தெருவில்,இளைஞர் ஒருவன் காவல் துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு, அரை மணி நேரத்திற்கு பின்,பிணமாக ஒப்படைக்கப்பட்டான் எனும் செய்தியும் இடம் பெற்றது.

முன்பெல்லாம் ஆள் அரவமற்ற இடங்களை தேர்வு செய்யும் காவல் துறை, தற்போது பட்டப் பகலில் ஒருவரை கொல்லும் அளவிற்கு துணிவு உடையவர்கள் ஆகிவிட்டனர்.இவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் சட்ட விலக்குரிமையே இதற்கு காரணமாக அமைகிறது.இவர்கள் இழைக்கும் கொடுங்குற்றத்திற்கு தண்டனை ஏதும் இல்லை.தண்டனை இருந்தால் மூடிய அறைக்குள் மோதல் சாவு நிகழ்த்த மாட்டார்.

மோதல் சாவு கொடுமைகள் அகில இந்திய அளவில் காவல்துறையின் விருப்ப ஆர்வ நடவடிக்கையாக மாறியுள்ளது.எதிரெழுச்சியினர் உள்ள பகுதிகளான, மத்திய பகுதி, வட-கிழக்குப் பகுதி மற்றும் காசுமீர் போன்ற இடங்களில்,பாதுகாப்பு படைக்கும், எதிரெழுச்சியினருக்கும் நடக்கும் சண்டையில், வழக்கமான இழப்புகளாக, மோதல் சாவுகள் உள்ளது.
மோதல் சாவுகள் என்று அறியப்படுகிற நிகழ்வுகள் இப்பகுதிகளில் அன்றாட செய்தியாக உள்ளது.

இதற்கு சட்டம் நிர்ணயித்துள்ள முறையான விசாரணை நடத்தப்படுவதில்லை.தேசிய மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்துள்ள நெறிமுறைகளும் பின் பற்றப்படுவதில்லை.ஒவ்வொரு முறையும் மோதல்சாவு சம்பவத்திற்கு பிறகு வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்படும்.மோதல் சாவு கொலை நிகழ்த்தும் காவலருக்கு மட்டும் பரிசுப்பணம் அளிக்கப்படும்.

ஒரு தகவல் அறிக்கையின் படி, ஆந்திர மாநிலத்தில் அதன் அரசாங்கம்,ஓராயிரம் எதிரெழுச்சியினரின் தலைகளுக்கு 16 கோடி உரூவாக்கள் பரிசுப் பணமாக, உரூவாய் 20000 த்திலிருந்து 12 இலட்சம் வரை,அறிவித்துள்ளது.


உத்தரப் பிரதேசம் வன்முறையாளர் செயல்பாடற்ற மாநிலம், 2006-07ல், 201 மோதல் கொலை சாதனை நிகழ்த்தியுள்ளது!உத்தரகண்ட் மாநிலம் தன் பங்கிற்கு 2006ல் 23 மோதல் கொலையும், 2007ல் 10 மோதல் கொலையும் நிகழ்த்தி சாதனை படைத்துள்ளது!

Saturday, September 19, 2009

ஒண்டி குடி!

மீனவர் துயர்!

மீளாத் துயர்!

மீண்டும்! மீண்டும்!

துப்பாக்கி துரத்த!

அதிகாரம் விரட்ட!

தண்ணீரில் தத்தளிப்பு!

கண்ணீர் எழுத்து

காதுகளை எட்டவில்லை!

பரிதவிக்கும் உன் வாழ்க்கை

பார்வையில் படவில்லை!

ஒதுக்கப்படும் மனிதன் நீ!

ஓரம் வாழ்ந்திடும் உருவம் நீ!

ஒண்டி குடி தமிழன் நீ!

உனக்கென்ன நான் உதவ,

உன் சிக்கல்

என் சிக்கல் அல்ல....

சிக்கன நடவடிக்கை!

பயணம் செய்யாதே!

சொகுசு வகுப்பில்!

நட்சத்திர விடுதி

வேண்டாமே!

வறட்சி தீரும் வரை!

மிரட்சி கொள்ளாதே!

நூறு நாள் சாதனை!

வெள்ளம் வரும்!

வேதனை தீரும்!

சாதனை மகுடம்!

சோதனை போக்கும்!

வாழ் நாள் நிகழ்வா?

அடையாள அணி வகுப்பே! !

Friday, September 18, 2009

சார்ந்து நிற்பேன்

உன் மொழியில் பேச

உரிமை இல்லை

உன் நாட்டில்

உனை தேர்ந்தெடுத்த

மக்கள் மொழியில் பேச

மக்கள் மன்றத்தில்அனுமதி இல்லை

மக்கள் நாயகமா?

நக்கல் நாயகமா?


காந்தியின் தேசம்

காந்தியைத்தான் மறந்தது

அவர் கருத்தையுமா?

தமிழ் மொழி பெருமைஅறிந்த காந்தி

தாய் மொழி அருமை உணர்ந்த காந்தி

பிதாவிற்கு துரோகம்

மீண்டும் மீண்டும்

எல்லாம் சரி

மாநாடு போட்டு

மரியாதை சேர்ப்பேன்

உள்ளூர் அல்ல

உலகத் தமிழ் மாநாடு

செந்தமிழ் தகுதி

செம்மொழி தகுதி

சாதனை செய்தேன்

சரித்திரம் படைத்து

பேசினால் தானே சிக்கல்

இனி பேசாது

பெருமை காத்து

செயல் ஒன்றே

சமணப் படையில்

சார்ந்து நிற்பேன்

Sunday, September 13, 2009

தகவல் தொழில் நுட்ப(திருத்த) சட்டம்,2008ம் சிவில் உரிமைகளும் பாகம் - 2 மொழி பெயர்ப்பு


முன்னர், இந்திய தொலைத் தொடர்பு சட்டம், 1885ன் கீழ், பொது பாதுகாப்பு நலன்கள் சம்பந்தமாக அரசாங்கம், முறையற்ற முறையில் தகவல்கள் பரிமாற்றம் மற்றும் அதனை இடை மறிப்பு செய்வது குறித்து, எச்சரிக்கை ஏற்பாடுகள் உருவாக்க வேண்டும் என விதிக்கப் பட்டுள்ளது.


ஆனால், இதுநாள் வரையில் எந்த அரசாங்கமும் எவ்வித நடைமுறையும் உருவாக்கிட அக்கறை காட்டவில்லை.காரணம், அனைத்து அரசும், எதிர்க் கட்சிகள் தகவல்களை ஒற்றாடுவது ,இயன்றால் குடிமக்களின் தகவல் பரிமாற்றங்களையும் வேவு செய்வது போன்ற செயல்களை தொடர்ந்து நிகழ்த்துகிறது.


1996ல் மக்கள் சிவில் உரிமைக் கழகம் உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அளித்த தீர்ப்பில், 1885ஆம் ஆண்டு தொலைத் தொடர்பு சட்டத்தை பயன்படுத்தும் போது அரசாங்கம் கடை பிடிக்க வேண்டிய சில நெறிமுறைகளை வகுத்தது.இவ்வாறு, முதன்முறையாக ஒரு ஒழுங்கை அரசாங்கம் தொலைபேசி ஒட்டு கேட்பதில் அமுல்படுத்த உச்ச நீதி மன்றம் வலியுறுத்தியது.


மேலும், நாட்டின் இறையாண்மை,பாதுகாப்பு, ஒருமைப்பாடு மற்றும் அந்நிய நாடுகளின் உறவு தொடர்பான பிரச்சினைகளில் மட்டும் அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என சுட்டியது.பொது ஒழுங்கு நிலை நாட்ட, ஒரு குற்றம் இழைக்க தூண்டுவது போன்ற நேர்வுகளிலும் ஒட்டு கேட்கும் அதிகாரம் செல்லுபடியாகும் என்றது.


எனினும்,ஒட்டு கேட்பது தொடர்பாக மத்திய அரசின் உள்துறை செயலர் அல்லது மாநில அரசின் உள்துறை செயலர் எழுத்து மூலம் ஒரு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் அதில் எவ்வகையான தகவல் ஒட்டு கேட்கப்படவேண்டும் என்பதும் தெளிவாக குறிக்கப்பட வேண்டும் எனவும் தெளிவாக்கப் பட்டுள்ளது.

இதற்கும் மேலாக, நீதி மன்றம் இவ் உத்தரவு சம்பந்தமாக மீள் பார்வை குழு ஒன்றும்,அமைச்சரவை அலுவலக செயலர்,சட்டத் துறை செயலர், மற்றும் தகவல் தொடர்பு செயலர் ஆகியோரை உள்ளடக்கி மத்திய அரசு மட்டத்திலும்,இணையாக மாநில அரசு மட்டத்திலும் அமைக்கப்பட்டு சட்டத்தை மீறிய செயல்பாட்டு உத்தரவை ரத்து செய்து, இடை மறித்து எடுக்கப்பட்ட தகவல்களை அழித்துவிடலாம் எனவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சட்டத்தில் இவ்வகையான பாதுகாப்பு அம்சங்கள் ஏதும் இல்லை.தகவல் தொழில் நுட்ப (திருத்த) சட்டத்தில் இவ்வகை நடைமுறை, பாதுகாப்பு அம்சங்கள் ஏற்படுத்துவது குறித்து இடம் பெற்றிருந்தாலும் தற்போது அரசாங்கம் இதற்கான ஒழுங்கு முறைகளை உருவாக்கும் என்று தோன்றவில்லை.

அவ்வாறு எண்ணம் இருந்திருப்பின், அசல் சட்டத்திலேயே அதற்கு உரிய அம்சங்களை சேர்த்து சட்டத்தை உருவாக்கி இருக்க முடியும்.ஆங்கிலேயர் இயற்றிய சட்டத்திலேயே இது போன்ற பாதுகாப்பு அம்சங்களை உருவாக்காத அரசாங்கம், 60 ஆன்டுகள் கழித்து உச்ச நீதி மன்றம் தலையிடும் வரை செயலற்றுக் கிடந்த அரசாங்கம் தற்போது மக்கள் பேச்சு உரிமை , கருத்து உரிமை காத்திட முனையும் என்பதில் நம்பிக்கை இல்லை.

பாதுகாப்பு அம்சங்கள் ஏதும் இல்லாத இச்சட்டம் மக்களின் தகவல் பரிமாற்றத்தை அவர்கள் அறியாமலே அவர்கள் எங்கு சென்றாலும் தொடர்ந்து கண்காணித்திடும்.சட்டம் இயற்றப் படுவதற்கு முன்பே ஓர் அறிக்கையில் 'மின்னணு காவல் அரசு' என்னும் தலைப்பில்,52 நாடுகளின் ஆய்வில் இந்தியா 20வது இடத்தை பிடித்துள்ளது.பிற நாடுகளில் சில,சீனா,வட கொரியா, உருசியா, சிங்கப்பூர் ஆகியன.

குறிப்பாக இச்சட்டம் என்பது குடி மக்களின் சிவில் உரிமைகளுக்கு நஞ்சு அளித்திடும் சட்டம்.பொறுப்பற்ற காவல்துறையின் கைககளில் இது இந்தியாவை,'1984ஆம் ஆண்டு ஆர்வெலியன் தேசமா'க மாற்றி விடும்.

Sunday, September 6, 2009

தொழில் நுட்ப(திருத்த) சட்டம், 2008ம், சிவில் உரிமைகளும்

(மக்கள் சிவில் உரிமைக் கழக வெளியீடு ஆகசுடு,2009)
மொழி பெயர்ப்பு பாகம்-1


அண்மையில் குடியரசுத் தலைவர் இச் சட்ட திருத்தத்திற்கு அனுமதி அளித்துள்ளார்.இது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள குடி மக்களின் தனி நபர் உரிமைக்கு உலை வைக்கும் சட்டம்.

திருத்தச் சட்டத்தின் 69(1) பிரிவு மற்றும் 69(2) பிரிவு மத்திய அரசு, மாநில அரசு அல்லது அதன் அதிகாரிகள் இதற்கென சிறப்பாக அதிகாரம் அளிக்கப்பட்டு அவர்களின் விருப்ப அதிகாரத்திற்கு உட்பட்டு, இந்திய அரசின் இறையாண்மை அல்லது ஒருமைப்பாடு, பாதுகாப்பு , நட்பு நாடுகளின் நலன்கள் அல்லது பொது ஒழுங்கு ஆகியவற்றை காத்திட,

மேற்குறித்தவைகள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளக் கூடிய குற்றம் ஏதேனும் இழைப்பதை தடுத்திட, அக்குற்றங்கள் குறித்து புலன் ஆய்வு ஏதேனும் மேற்கொள்ள, எழுத்து மூலம் காரணங்கள் பதிவு செய்து, எந்த ஒரு அரசாங்கத்தையோ அல்லது ஒரு முகவாண்மையையோ, கணினி வழியாக அனுப்பப்படும் எந்த ஒரு தகவலையோ,கணினியில் காத்து வைக்கப்படும் தகவலையோ, இடையீடு செய்து கண்காணிக்க, மறித்திட, உத்தரவு அளித்து செயல்பட முடியும்.

இவ்வகை செயல்பாட்டிற்கு உகந்த வழிமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, காவல்துறைக்கு எல்லைமீறிய அதிகாரத்தை இச்சட்டம் அளிக்கிறது.அரசாங்கங்கள் உங்களின் மின்னஞ்சல்,குறுந்தகவல்,தொலைபேசி உரையாடல் போன்ற, அனைத்து தகவல் தொடர்பு நடவடிக்கைகளையும், கண்காணித்திட முடியும்.நீதிமன்ற உத்தரவு ஏதும் இல்லமாலே, காவல்துறை இன்சுபெக்டர் ஒருவர், ஒரு இல்லத்தில் நுழைந்து தேடுதல் நடவடிக்கை செய்திட முடியும்;கணினியை கைப்பற்ற முடியும்;புலன் விசாரணை நடவடிக்கையில் ஈடுபடமுடியும்.

Saturday, September 5, 2009

"செகுவேரா"

மூடுவண்டி முன் செல்ல,
குண்டாந்தடி அணி வகுக்க,
கடற்கரை பயணம்
"மூஞ்சுறு வாகனர்"
வண்ண வண்ண கோலத்தில்.

கூட்டத்தில், ஆட்டத்தில்,
கும்மாள வழி நெடுகில்,
பாதை வகுத்து
"செகுவேரா பனியன் அணிந்த
படைத்தலைவன்"
ஒழங்கு செய்ய,

சுறு சுறுப்பாய்,
செயல் ஒன்றே செப்பமாக,
சீருடன் நடை.

உமக்கும் தேவை,
"செகுவேரா"

"சந்திராயன்"

சந்து பொந்துகளில்
சிந்து
நிலவுப் பயணம்
நீண்ட பயணம்
சாதனை

தீர்ந்தது
சாமானியன்
சாப்பாட்டுப் பிரச்னை
நீர்ப் பிரச்னை
யாவும்
மறைவு

பெருமை
மண்ணுலகில் சாதனை
விண்ணுலகில் வேலை

இறவாப் புகழ்
'இந்திர செயித்'
மறைந்தது
அமாவசையில்
செலவென்ன
சில ஆயிரம் கோடியே!