Thursday, November 29, 2018

பனியும் நெருப்பும்



கவிஞர்.ராபர்ட் ப்ரோஸ்ட்

சிலர் கூறுகிறார்
இவ்வுலகம்  நெருப்பில் அழியும் என்று,
சிலர் கூறுகிறார்
பனியில் என்று.

என் விருப்ப அனுபவிப்பில்
நெருப்பு என்பவர்களுக்குஆதரவாய்
நிற்கிறேன்.

ஆயினும், இருமுறை அழியுமாயின்,
நான் எண்ணுகிறேன்
வெறுப்பின் போதிய புரிதல்
எனக்குண்டு,

அழிவிற்கு பனியும்
மிகப்பெரிய ஆற்றலே,
போதுமானதாகும்.

(மொழியாக்கம்)

Wednesday, November 28, 2018

ஊஞ்சலாட்டம்





கவிஞர்.கோ சுவான் குவாங்

யார் எழுப்பியிருப்பினும்
கம்புகள் நட்டவரை போற்றுவோம்
சிலர் ஊஞ்சல் ஆடவும்,
பிறர் அதைக் காணவும்.

சிறுவன் ஒருவன் மேலெழும் விசையில்,
முதுகை வில்லாக வலைத்து.
வடிவமுடை பெண்
தன் இடுப்பை உந்தி,
மேலெழுப்பி.

இளஞ்சிவப்பு  முழுக்கால் சட்டைகள்
நான்கும் காற்றில்
படபடக்க,
இரு இணை கால்கள் நீட்டி
பக்கவாட்டில்/அருகருகில்.

வசந்த விளையாட்டுகள்,
யார் அறியார்?
ஊஞ்சல் கால்கள் அகற்றம்,
குழிகள் காலியாக.

(மொழியாக்கம்)

Sunday, November 25, 2018

புதிதல்ல





கணக்கெடுப்பார்
கணம் முடிப்பார்
கணக்கே அறிவியல் என்றறியார்.

அப்படி ஒன்று, இப்படி ஒன்று
எப்படியோ,
கதை முடிப்பார்.

இன்றல்ல, நேற்றல்ல
இதுவரை ,
இதுதான் வரையறை
என்றறைவார்.

தரவுகள் வரவுக்காக,
புள்ளிக்கும் விவரத்திற்கும்.

புதிதல்ல,
நிவாரணம்!

நினைவில் நிற்கும் புன்னகை



கவிஞர்.சார்லஸ் புகோவஸ்கி

எங்கள் வசம் தங்க மீன் இருந்தது,
சுற்றி, சுற்றி வந்தது.
மேசை மீது ,
மீன் கலயத்தில் பலகணி அருகில்,
திடமான திரைச் சீலை,
தாயின் படம் மறைத்து,
எப்போதும் புன்னகை பூத்து,
அனைவரையும் மகிழ்ச்சியாக
இருங்கள் என்று கூறினார்,
'என்ரி மகிழ்ச்சியாக இரு!'
 என்றார்.

அவள் சரியே: உம்மால் இயன்றால்
மகிழ்ச்சியாக இருப்பது
மிக நன்று,
எனது தந்தை தொடர்ந்து
அவளை துன்புறுத்தி வந்தார்
என்னையும் சேர்த்து,
வாரத்தில் பலமுறை.

6.2 அடியில் நெடிய தோற்றம்
உள்ளார்ந்த சினத்துடன்,
அவருள்
என்ன தாக்கிக் கொண்டிருந்ததோ.

என் தாய், பரிதாபத்திற்குரிய மீன்,
மகிழ்ச்சியாக வாழ்ந்திட விழைந்து,
வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறைகள்
அடிபட்டு,
என்னிடம் 'மகிழ்ச்சியாய் இரு என்ரி!
ஏன் புன்னகைக்கவில்லை?' என்பார்.

பின்  புன் முறுவல் இடுவார்,
எப்படி என்று,
நான் அதுவரை
கண்டிராத மிகவும் துக்கமான புன்னகை
அதுவாக,

ஒரு நாள் தங்கமீன் இறந்தது,
ஐந்து மீன்களும் இறந்து மிதந்தன.
அதன் கண்கள் திறந்தபடியே,
ஒருக்கலித்து மிதந்தன.

 தந்தை இல்லம் வந்தபின்,
அவைகளை வீசி எறிந்தார்
பூனையிடம்,
சமையலறை தரை மீது.

நாங்கள் பார்த்திட,
எங்கள் தாய்
புன்னகைத்தார்.

(மொழியாக்கத்தில்)

ஏற்கவில்லை




உதிரியானேன்  என்றாய்,
ஆயினும் சிதறவில்லை!
ஒட்டாததால் உடைந்தேன்
என்றாய்,
உடைந்தாலும்,
உருவம் குலையவில்லை!
உருப்படியில்
தேய்வில்லை!

உள்ளது மாறினும்,
உண்மையில் மாற்றமில்லை!
உயர்வில் குறைவில்லை!
ஓட்டம் நிற்கவில்லை!

தேங்கிய அணி,
ஓங்கிய வளர்ச்சியில்லை!
ஒத்தடம் போதவில்லை!
ஒளடதம் ஏற்கவில்லை!

Friday, November 23, 2018

நெகிழ் பிணை



கவிஞர்.நவோமி சிகாப் நை

என் உடன் பிறப்பு தனது சிறிய வெண் படுக்கையில்,
உறவு இழையின் ஒரு முனையில்.
இன்னும் விழித்திருந்தேன் சமிக்ஞையில் நான்,
பிணைந்திட மறு முனையில்.
நாங்கள் பேசியிருக்கலாம்,
ஒருவருக்கொருவர் பாடியிருக்கலாம்,
ஒரே அறையில் ஐந்தாண்டுகள் நாங்கள்,
நாள் முழுவதும் நாங்கள் சண்டைபிடித்து இருந்தாலும்,
தேய்ந்த சிறு முனையுடை மெல்லிணை
ஆறுதல் அளித்து, எம்மை இணைத்தது இருளில்.

முதலில், ஆழ்ந்து உறங்கியபோதில்
இழை முனை தரையில் வீழ்ந்து துக்ககரமாக,
அவனைக் காணவில்லை,
எனினும்
அவனின் சீரான மூச்சை கேட்க இயலும்,
முன் நின்றது
பிரிந்து தொடர்
எம் வாழ்க்கைப் பயணம்.

(மொழியாக்கத்தில்)



Thursday, November 22, 2018

இந்த முறை பேருமா?








எண்ணெய் கசிவிற்கே
கசியவில்லை!
'வர்தா'(சிவப்பு) வுக்கே
வாய்க்கவில்லை!
'தானே'வுக்கு
 தயவில்லை!
'ஒகி'க்கு
ஓட்டமில்லை!
 சென்னை வெள்ளம்
செல்லுபடியாகவில்லை!

'காஜா'வுக்கு.........?

Wednesday, November 21, 2018

மரண தேவன்


கவிஞர். நசீர் அக்பராபடி

பேராசை , தூண்டுதல் விட்டொழி,
உமது அண்மை, தொலைவு சுற்றுச் செலவு
மறந்துவிடு;
மரண கொள்ளையன் தமது எக்காள இசை நிகழ்த்துகிறான்
பகல் இரவை கொள்ளையிட்டு;
இடம் விட்டு இடம்,  உமது பரிவாரங்களுடன் ஏன் சுற்றித்திரிகிறாய்;
சுள்ளியும் கூட இறுதியாக உம்முடன் சேரா மரணம் நேர்கையில்;
உமது வளங்கள், பெருமைமிகு வாழ்க்கை  யாவும்
உமக்கு பின்னால் நின்று போகும்;

உமது போர்வாள், கேடயங்கள் கண்டு தற்பெருமை அடையாதே;
மரணத்தின் ஈட்டியை கண்ணுற்று
அவை உம்மை விட்டு அகன்று விடும்;
தனியாக, பாலைவனத்தில் புதைகுழியின் தூசு
உமக்கு உணவாகும்;
அந்த பாலையில், மெய்யாக, நசீர்,
ஓர் ஊருயிரியும் உம்மிடம் வருகை தராது;
உமது செல்வங்களும், செழிப்பான  வாழ்க்கை முறையும்
அகன்று போகும்;
 மரண தேவதை தனது முதுகில் உம்மைச் சுமக்கும்
 தருணம்.

(மொழியாக்கத்தில்)



கஜா புயல்










எட்டிய தூரம் கொட்டிய மழை,
சுற்றிய வளி, சூறாவளி
 சுருண்டது வேதாரண்யம்
 சுழல் விசையில்.

முற்றிய துயரம், வற்றிய கண்ணீர்!

தலை சாய்ந்த தென்னை,
குலை சாய்ந்த வாழை,
சரிந்த கருப்பம் கொல்லை,
பிஞ்சு பிளாகாய்,
பஞ்சு பஞ்சாய்ப் பறந்து ,

மாவடை, மரவடை யாவும் மல்லாந்து,
மடிந்தது வாழ்வாதாரம்,
சேர்ந்தது
உயிர்ச்சேதம் .

கால்நடைகள் கதறின,
கடுஞ்சீற்றத்தில் சிதறின
ஆயுள் முடிந்து.

குடிக்க நீரில்லை!
கொடுப்பார் யாரும் இல்லை!
உண்ண உணவில்லை!
உருப்படியும் தேறவில்லை!

ஓலைக் குடியும் இருந்த இடம்
தெரியவில்லை!
மின் கம்பங்கள் வில் கம்பாய்
வீழ்ச்சியில்!

நிமிர்ந்து நிற்க இயலவில்லை!
காவிரிப் படுகை மக்கள்
அல்லலுக்கு, அளவில்லை!

 வேனிற்காலத்தில்
 வெளிச்சம் இல்லை!
கொடி பிடித்தும், குரல் உயர்த்தியும்
கொடுப்பினை இல்லை!

வாழ்வாதார நீர்,
 வாய்தாவும் தீர்வில்லை!
கை கொடுக்கும் தை,
கனவும் வசமில்லை!

இருண்ட காலம் எதிரில்,
இம்மியும் இளிப்பில்லை!

நகரத்தின் துயரில் நாட்டம் கொள்வார்!
கிராமங்கள் என்றதும்
விலகிச் செல்வார்!


உழுவார் உடைந்தார்!
 உலகத்தார் மறப்பில்!

கதறுகிறார்!
கண்ணீரும் கம்பலையுமாக,
பதறுகிறார்!
பட்டினி, பசியில்.

குழந்தைக் குட்டிகள்
குளிரில், கொசுக்கடியில்,
மருத்துவமும்
எட்டிப்போக.

மறைக்க மாற்றாடை இன்றி,
மண் மாணிக்கமாய்
உறக்கம் தொலைத்து,
உறவை இழந்து.

எப்போதும் போல்,
நிவாரணம்
அடையாளமாய்!

நிரந்தர தீர்வு,
நித்திய தரித்திரராய்!

பல புயல்கள் கொடுத்த அடி,
தீரா வடுவாய்!
இடிமேல் இடி வாழ்க்கை ,
இயல்பாய்!

விதியை நம்பும் வேதனையாய்!
அடிப்படை அகன்று
அந்நியமாய்!

விளிம்பு நிலை விசாலமாகி,
மீளாக் கடனில்,
மிரட்டும் அதிகாரம்!
யதார்த்தமாய்!

நொடிந்து, நொந்து
கூலி உழைப்பாய்
பெயர்ந்திடுவான்,
விவசாயி-மீனவ உழைப்பாளி!










Monday, November 19, 2018

சூறாவளி


கவிஞர்.அப்டாப் அலம்

வேய்கூரை வீடுகள், பெருமழையில்
வாய்ப்பிளந்து,
கொடுஞ் சூறாவளி
அழிவு-அழிவு எங்கெங்கு காணினும்,
ஆக்கம்  இல்லை.
வேரோடு சாய்ந்த மரங்கள்,
கவிழ்ந்த துயரத்துடன்.
கதறினர் அனைவரும்
நம்பிக்கை இழந்து
இயற்கையுடன் எவர் போரிடுவார்?
எவர்,
நமது கனவை வீழ்த்துவார்?


தொலைவில் ஒலி,
கேட்கிறது.
நாமே, நாம் மட்டுமே,
வேறேதும் இல்லை.

(மொழியாக்கத்தில்)

ஒரு பெண்






எஸ்ரா பவுண்ட்.

எம் கைகளில்  நுழைந்தது
மேற் கரங்களில் படர்ந்த  கன்று
மார்பில் கீழ்நோக்கி வளர்ந்தது
என்னுள் இருந்து கிளைத்தது

நீயே மரம்,
நீயே பாசி,
அசைந்தாடும் காற்றின் ஊதாவும் நீயே
உயரிய குழந்தையும் நீயே,
இவை யாவும்   மதியீனம் உலகிற்கு.

(மொழியாக்க முயற்சி)

அவன் படகு

 கவிஞர்.கெலஸ் வெலெரியஸ் கெட்டுல்லஸ்

நீங்கள் காணும் இப் படகு, நண்பர்களே!
 மிக விரைவான கலம் என்று கூறிடும்,
பாய்மரமோ அன்றி துடுப்பு உழைப்பில் செலுத்தப்படுவதோ,
வேகத்தில் எதுவும்  அறைகூவல் விடுக்க இயலாது,

அச்சுறுத்தம் அட்ரியாட்டிக் கடற்கரை,
சைக்கிளடாசு தீவுகளோ, பெருமை மிகு ரோட்ஸ்,
அன்றி அச்சம் தரும்
போசுபரஸ் தீவுகளோ, கருங்கடற்கரையின் சோகமான விரிகுடாவோ,
அதனை மறுக்க இயலா,

படகாவதற்கு முன், இலைகள் அடர்ந்த காட்டு மரமாக:
சைடோரஸ் சிகரங்களில், அடிக்கடி இலைகளின் இரகசியங்களுக்கு
ஓசை கூட்டி,
இவைகள் உமக்கு நன்கு புரியும்,
அமஸ்டிரிஸ், மற்றும் அடர் மரங்கள் போர்த்திய சைடோரஸ்
அறிந்திடும்:

ஆரம்பத்திலிருந்து உமது மலைச் சரிவில் நின்று,
அதன் தழும்புகள் உமது நீரில் தோய்ந்து,
உரிமையாளரைக் கடந்து, பல தலைகனம் உடைய தடைகளையும் தாண்டி,

வீசும் காற்று படகின் வலப்புறம் அன்றி இடப்புறம் கூவியதோ,
அல்லது பெருஞ்சுழற்காற்று  அடுக்கிடையீட்டுத் தகடுகளை,
 பதம் பார்த்ததோ
 ஒரு பக்கத்தில், மறு பக்கத்தில், முழுவதுமாக:

கடற்கரை வதியும் தெய்வங்களுக்கு படையல்
 செய்திடவில்லை,,
அயல் தேசக் கடலிலிருந்து,
தெளிவான ஏரிக்கு வருகை தந்தபோது.

இவையாவும் கடந்த காலம்:இங்கு
மறைவிற்குள்,
அமைதியாக வயதாகிக் கொண்டிருக்கும்,
தன்னையே, காஸ்டர் மற்றும் சகோதரருக்கு- சுவர்க்க இரட்டையருக்கு- அளிக்கிறது.

(எமது மொழியாக்கத்தில்)

Friday, November 16, 2018

ஏரிடஸ்








கவிஞர்.எஸ்ரா பவுண்ட்

நாணம் கொண்ட ஏரிடஸ்
அழகற்ற ஒருத்தியை மணந்தான்,
வாழ்க்கை குறித்து எரிச்சல்,
ஊக்கம் கெட்டு, ஆர்வமிழந்து
தன் நெஞ்சுக்குள், 'எனக்கு நான் பயனில்லை,
'அவளுக்கு தேவையாயின், எடுத்துக் கொள்ளட்டும்'.
பேரழிவுக்குள் தன்னை  அணைத்துக் கொண்டான்.

(மொழியாக்கத்தில்)

Thursday, November 15, 2018

ஒரு ஒப்பந்தம்







 கவிஞர். எஸ்ரா பவுண்ட்

உம்முடன் ஒரு ஒப்பந்தம் செய்கிறேன், வால்ட் விட்மன்_
நீண்ட காலம் உம்மை வெறுத்துள்ளேன்.
பிடிவாத தந்தையின்,
வளர்ந்த குழந்தையாக நான் உம்மிடம் வருகிறேன்

நட்பு நாடும் அகவை இப்பொழுது.
புதிய தடம் உடைத்தவன் நீ,
செதுக்கும் காலம் இது.
நம் வசம் இளங்கன்று ஒரு வேர்.
இடையே கொடுக்கல் வாங்கல் நடக்கட்டும்.

(எமது மொழியாக்கத்தில்)

Wednesday, November 14, 2018

நாட்களில் முழுமை இல்லை











இரவுகளில் முழுமை இல்லை
வாழ்க்கை நழுவுகிறது ஒரு வயல் எலியாக
புல்லை அசைக்காது

எஸ்ரா பவுண்ட்

(எமது மொழியாக்கத்தில்)

டோரா டில்லர்










கவிஞர்.ஜேக் பிரிலட்ஸ்கி

'என் வயிற்றில் நிறைய பட்டாம் பூச்சிகள்!'
புலம்பினாள் டோரா டில்லர்,
அவள் தாய் பெருமூச்சிட்டாள். ' அதில் வியப்பேதுமில்லை
நீ கம்பளிப்பூச்சு உண்டாய்!'

(எமது மொழியாக்கத்தில்)

Tuesday, November 13, 2018

சுவர்க்கத்தின் இருள்

 கவிஞர்.மாட ஜோ சாய் ஸ்கொய்ர்

தனித்து, வெறிச்சோடிய தெருக்களில்,
நான் நடந்தேன்.
குளம் போல் தேங்கிய,
இரத்தத்தின் ஊடாக,
விரிந்த  வளமான, விளைச்சல் மிக்க நிலத்தில்.
கிளர்ச்சியாளர் பெற்ற சமாதானம்
இதுவா ?


எமது தாய், தமக்கைகள்
 நம்பிக்கை இழந்து
அவர்கள் விருப்பத்திற்கு எதிராக,
அறியாமையை சீர்குலைத்து, அத்துமீறி,
கற்பழிப்பவராக, கொள்ளையராக,
குருதி வெறி, குற்ற மூர்க்கராக
அமைதியான நிலத்தில் தடம் பதித்தனர்.

காற்று இனிமை இழந்து
வலியுடன், வலிமை இழந்து.
சொந்த நாட்டிலேயே பிணைக் கைதிகளாக,
முட்கள் அடர்ந்திட,
 மந்தமான எதிர்காலத்துடன்.


இது ஒரு அச்சமான தருணம் அன்றி
 வேறல்ல.
வல்லூறுகள் கொண்டாடும் தினமாக.
 மெச்சத்தக்க நினைவு உடல்கள்,
 குப்பை கூளமாக,
எமது இதயங்கள், ஆன்மா இரத்தம் சொரிய.

ஓ! சிதலமடைந்த,
பிளவுபட்ட, தாய் நாடே! 
உமது ஆறுதலுக்காக, 
அமைதியை தக்க வைத்திடு.
உமது பெண்கள், பிள்ளைகளின்
விருப்ப ஆசை து:
உம்மிடம் வேண்டுகிறோம்,
இனிமையான தாயே,
எம்மீது இரக்கம் காட்டு!

(எமது மொழியாக்க முயற்சியில்)

Monday, November 12, 2018

வேனிற்காலம்





காத்திருக்கிறோம் நாங்கள்.
நீங்கள் இங்கே,
எம்மை உயிர்ப்புடன் வைத்திட,
கொடுங் குளிர்கால கொடுமையிலிருந்து.
பறவைகள் மீண்டன.
நடவடிக்கைகள் உயிர்ப்புடன்.
அவரவர் ஆர்வக் கிளர்ச்சியில் விளையாட்டு.
ஆம்! கோடை மீண்டும் வருகை.
ஆயினும், எமது சிந்தனைகள் அலைகளாக.
மழை ஏன்?
எமது வகுப்பறை தவிர்த்திட.
நடவடிக்கைகள் விலக்கி.

உம்மை புரிந்து கொள்ள எம்மால் இயலவில்லை.
நீ கோடைக் காலமா?
கோடை மழை என்று விளிக்கலாமா?
தயை செய்! தயை செய்!  விடை சொல் .

*சொந்த நாடான சியோரா லியோனிலிருந்து, போட்ஸ்வானாவிற்கு புலம் பெயர்ந்து, கவிஞர்.மாட ஜோ சாய் ஸ்கொய்ர், வேனிற்கால அனுபவத்தை, தனது நாட்டு பருவ நிலையோடு, ஒப்பிட்டு எழுதியது.

(எமது மொழியாக்க முயற்சியில்)

Sunday, November 11, 2018

நாட்டுப்பற்று




நாட்டை விரும்பு, விசுவாசமுடன் இரு;
சக நாட்டினர் மெச்ச, விருப்பத்தை வெல்,
ஆக்க விமர்சனத்தை மதிக்க கற்க.
தவறாக வழிநடத்தக் கூடும் வசீகரிப்புகள் தடுத்திடு.
உமக்குரியதை ஏற்றுக்கொள்,
பிறரிடம் காண் நற்பண்புகளை.
உமது நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்து,
நல் மாற்றம் கொண்டு வா.
பலவிதங்களில் உம்மால் இயலும்.
விசுவாசமிக்க போர்வீரனாக,
சுயநலமற்ற அரசியல்வாதியாக
சமூக தரத்தின் மேம்பாட்டில்.
புவியில் நீ உதித்ததின் நோக்கம் அறிந்து,
நாட்டுப் பற்றே ஒரே வழி
உம் நற்பணிகளால் நின்றிலங்கிடும் என்றென்றும்.
நாட்டுப்பற்று!  நாட்டுப்பற்று! நாட்டுப்பற்று!

கவிஞர். மாடா ஜோ ஜாய் ஸ்கொயர்

*எமது மொழியாக்கத்தில்.

மே 25


ஒளிரும் அழகிய நாள் அது,
அதன் குளிர்ச்சியும் மென் தென்றலும்.
தெருவெங்கும் வண்ணகோலங்கள் மின்னும்.
ஞாயிறு காலை என்றொருவர் கூறிவிடலாம்.

அனைவர் முகங்களிலும் மகிழ்ச்சி ஒளியாக,
இறை வழிபாடு உற்சாகம் அளித்திடும்.
விரைவில்,விரைவில், அனைத்தும் அமைதியாக.
துப்பாக்கிகள் ஓசை காற்றில் கலந்தது.

ஒவ்வொரு ஆன்மாவும்  அடைக்கலம் சென்றது.
வண்ணங்கள் புலப்படா தடுமாற்றம்.
சண்டையிடும் பையன்கள் அணிவகுப்பில்.
இருப்பினும் இது, முதல் இராணுவப் புரட்சி.

வாழ்க்கையே சலனமற்று அமைதியாக.
வீரர்களின் குரல் செவிகளை துலைத்தது,
அதிகாரிகள் குன்றுகளை நோக்கி ஓட்டம்,
ஆட்சிக் குலைவுக்கு இட்டுச் செல்ல.

நாம் யாவரும் தடகள வீரர்கள்,
வாழ்க்கையைக் காத்திட ஓட்டம்,
இரக்கமற்ற கொள்ளையர் பிடிகளில்,
கெட்ட நினைவாக அது.

செவிகளில் ரீங்காரம் எழுப்பிக் கொண்டிருக்கிறது,
கடப்பது சிரமம் ஆயினும்.
அதன் கொடூரம் வலி,
வேண்டாம் இவை யாவும் யாம் வேண்டுகிறோம்.

*சியேரா லியோன் நாட்டில், சனநாயக ஆட்சி 1996ல் மீட்டெடுக்கப்பட பிறகு, நிகழ்ந்த இராணுவப் புரட்சி ஒட்டி, நிகழ்ந்த நடவடிக்கைகள் பற்றி, கவிஞர். மாடா ஜோ ஜாய் ஸ்கொயர், எதிரொலிப்புகள்.

*எமது மொழியாக்கத்தில்.

Saturday, November 10, 2018

ஒரு கன்னியின் அறிவுரை


எச்சரிக்கை, ஓ ஏந்திழையே
தேசத்தின் பெருமை நீ
குதறும் ஓநாய்கள் குதூகல உணர்ச்சியில்
உம்மை மலிவாக எண்ணும்
அவர் பசப்பு வார்த்தைகளை செவி மடுக்காதே
பொய்யுறுதிகளை ஏற்காதே
வழுக்கு விலாங்கு அவை
நல்லுணர்வில் தேர்வு செய்
உள்ள வெளிப்பாட்டில் அவரை ஆய்ந்து கொள்
உள்ளடக்கத்தை முகத்தில் வாசிக்க இயலாது
ஒளிந்திருக்கும் ஏமாற்று, எச்சரிக்கையாய் ஓ,
இம் மண்ணின் மகளே
பணி அனைத்தையும் பரிசீலனை செய்திடு
வார்த்தைகளை அல்ல
வீழும் உடல் ஒவ்வொன்றையும் தேடிடு
நீண்ட கூரிய பற்களின் பதிவுகளைத் தேடி
அவை கண்டபின் உண்மையாயிரு
மிதக்கும் காற்று கனவுகளை நீக்கிடு
காற்றாடியாய் பறந்திடு, உண்மையில்
அன்பு காலப் போக்கில் வளர்ந்திடும்.

(கவிஞர்.மாடா ஜோ ஜாய் ஸ்கொயர். 8, மார்ச், 2003ல் உலக மகளிர் நாளையொட்டி, சியாரா லியோன் பல்கலைக் கழக மாணவிகளுக்காக அளிக்கப்பட்ட கவிதை.மொழி பெயர்ப்பில்.)

கனவுகள்



நான்காண்டுகளுக்கு பதிலாக ஆறாண்டுகள் கழிந்தன
பேரச்ச அனுபவங்களில்
பேரச்சம் தவிர்த்து ஏதும் இல்லை எம் நிலத்தில்
நான் வாழ்ந்தேன்
குடும்பத்தை விட்டு நீங்கி
தியாகங்கள் சேர்த்தேன்
இன்றைய வெளிச்ச, ஒளிர் நாட்கள்
வசப்பட: கனவுகள்
மீப்பெருமை முந்தியிருக்க காண்கிறேன்
நெடிய பாதையாயினும்
அங்கு சேர்வேன் என்பதறிவேன், மனிதர் பேராழியைக்
கடந்துள்ளார்
சிலர் கலத்தில்
வேறு சிலர் உள்ளத்தில்
வெகு சிலரே முட்படுகைப் பாதையில் நீந்திக் கடந்தார்;
நான் அறிவேன்
புன் சிரிப்புடன் இறுதியில்
பேராழி பெரும் பரப்பாயினும்
எம்மால் கடந்திட இயலும் என்றறிவேன்.

(சைரா லியோன் நாட்டின்," மாடா ஜோ சாய் ஸ்கொய்ர்", போட்ஸ்வனா நாட்டு பல்கலைக் கழக, இலக்கியக் கல்வித் துறை மாணவர்)

(எமது மொழியாக்க முயற்சி)

தனிமையில்


நிரம்பி, நிகரற்று விளங்கிய
எமது கல்லூரி.
கைம்பெண் கோலத்தில்
தனிமையில் வெறுமையாக
சமம் இழந்து.

இளவரசியாக விளங்கியவள் பண்ணை அடிமையாக,
கண்ணீர் கசப்பு கன்னங்களில் வழிந்தோட.
விருப்பாளி எவரும் நிறைவளிக்கவில்லை.
பகைவராக அனைவரும்.

பொலிவிழந்த முகத்துடன்.
செவித்திறன் இழந்து.
வெளுப்பு கண்களை விழுங்கிட
குன்றிய வலிமை தொடைகளில் படர.

ஓ! எம்மை உருவாக்கிய இனிமை நிறை
ஊற்றே
தனிமை, சோர்வு கொள்ளாதே,
மகிழ்நிறை நாட்கள் உம்முன்னே நான் காண்கிறேன்
வலியும் கண்ணீரும் முடிவுறும்.

(சைரா லியோன் நாட்டின்," மாடா ஜோ சாய் ஸ்கொய்ர்", போட்ஸ்வனா நாட்டு பல்கலைக் கழக, இலக்கியக் கல்வித் துறை மாணவர்)

(எமது மொழியாக்க முயற்சி)

Thursday, November 8, 2018

42 வயதினிலே



காலங்கள் கரைந்தன விரைவாக
விடுதலைக் குளத்தில் எம் அகவை நாற்பத்திரெண்டு
உடானாளிகளுக்கு காண்பிக்க என்ன இயலும், எம்மால்?
வலியாகினும், உறுதியான, வளமான பெற்றோரில் ஒருவனாக குரல் எழுப்புவேன்
பசி வாட்டிட, ஆசை அலைக் கழிக்க, ஏழ்மை முகத்திரையில்
எம் குழந்தைகள்
தற்கணம்! அகன்று விட்டனர் அனைவரும் எங்கோ.

தொலை வெளியில் வாழ்க்கை தொங்கலாட
நன் மருத்துவராக சிலர்,  நொடிதொறும் நோய் நொடியில்
தொலைந்து கொண்டிருக்கின்றனர், நோயுற்றோர் இங்கே
நல்லாசிரியனாக அங்கே, பலமிழந்த பள்ளிகள் இங்கே,
தொலை தேசங்களில் அடுக்களை சுத்தம், கார் கழுவி உழைப்பை விற்று ஊழியம்,
எமது நிலங்கள் தரிசாக கேட்பாரற்று,
மீண்டும் தொடர்வேன் கட்டாயம், சார்பு வாழ்க்கை தெரிவு செய்வேன்.

(சைரா லியோன் நாட்டின்," மாடா ஜோ சாய் ஸ்கொய்ர்", போட்ஸ்வனா நாட்டு பல்கலைக் கழக, இலக்கியக் கல்வித் துறை மாணவர்)

(எமது மொழியாக்க முயற்சியில், மற்றுமொரு படி)

Tuesday, November 6, 2018

புதையல்







வீட்டிற்கு கீழே, விடிவெள்ளியென்று!
எவர்க்கும் ஆசை உண்டு.
ஏக்கம்  மொண்டு,

கட்டிய வீட்டடியில் கதிமோட்சம் என்று
கொட்டிய சேதி,
கோடி சேர்க்கும் என்று,
உப்பிய வயிறு ஒட்டவில்லை.

ஓயாத ஆசை உறக்கம் கலைக்க,
சொப்பன வாழ்க்கை,
நடப்பியல் கடந்து,
மறப்பியலில் மல்லாந்து.

தும்புக்கு







தும்புக்கு ஆளவில்லை!
தூசுக்கு குறைவில்லை!
குப்பைக்கு பஞ்சமில்லை!
குண்டும் குழியும் ஏமாற்றவில்லை!

வெட்டவும் கட்டவும்,
தோண்டவும் மூடவும்
ஒப்பந்தம் தொய்வில்லை!

நெடுஞ்சாலை, நீள்சாலை,
குறுக்கு வெட்டில் கோணல் இல்லை!
விழுந்தால் என்ன? உடைந்தால் என்ன?

மூடும்போது பார்க்கலாம்!
முக்காட்டில் பணிமுடிப்பு!

Monday, November 5, 2018

திரை







ஒரு நூறு தடவைக்கு மேல் கண்டேன்,
சிலர் உரிமை கோரிய இசைக் காட்சி
நெடிய திரை முடிவுக்கு வந்தது,

 தொலைக்காட்சி செய்தியில்,
அதன் இறுதி திரை இறக்கம் அறிந்தேன்.

பூக்கள் சொரிய, குதூகல குரல்கள் ஒலிக்க,
அழுகை சேர, இடி முழக்க இறுதி காட்சி.

குறிப்பிட்ட இக்காட்சியை நான் காணவில்லை
ஆனால் நான் அறிவேன்,
நான் கண்டிருந்தால் என்னால் பொறுத்திருக்க முடியாது,
 என்னை நோயில் தள்ளியிருக்கும்.

என்னை நம்புவீர்,
உலகம் அதன் மக்களும்,  கலாபூர்வ பொழுதுபோக்கு
எனக்கு எதையும் அளிக்கவில்லை.

ஆனாலும், அவர்கள் மகிழட்டும்,
அவர் என்னை விட்டு அகன்றிருப்பர்,
என்னுடைய இடிமுழக்க பாராட்டுகள்,
அவர்களுக்கு.

('கர்டைன்' தலைப்பில் ஆங்கிலத்தில்" சார்லஸ் புகோவ்ஸ்கி" இயற்றியது. தமிழில்)

Sunday, November 4, 2018

லிங்கன் நினைவுச் சின்னம்: வாசிங்டன்.






நாம் சென்று காண்போம் பண்டைய போர்த் தலைவனை
நிலவொளியில் பளிங்கில் வீற்றிருப்பானை,
தனிமையில் பளிங்கில் நிலவொளியில்,
பத்தாயிரம் நூற்றாண்டுகள் அமைதியில்,போர் மறவன்,
இலட்சம்,பல இலட்சம் ஆண்டுகள் அமைதியில்.

அமைதியாக--

ஆயினும் ஓர் அழியாக் குரல்
காலத்தின் காலமற்ற சுவர்களை எதிர்த்து-
பண்டைய போர்த் தலைவன், இராசாளி பறவையாக.

(லாங்ஸ்டன் அக்ஸ் ஆங்கிலத்தில்" Lincoln Monument: Washington")

தமிழ் மொழியாக்கத்தில்.

" மவுண்ட் செயின்ட் மிசல்"

07.08.18, காலை 7 மணிக்கு தொடங்கிய பயணம், " மவுண்ட் செயின்ட் மிசல்", நோக்கி.130 கி.மீ. வேகத்தில், பயணக் கட்டண தேசிய நெடுஞ்சாலையில்,விரைவாக. பல ஊர்களைக் கடந்து பக்கவாட்டில்; மர அடர்த்திகள்; சோலைகள்; கோதுமை வயல்கள்; சூர்யகாந்தி விளைச்சல்கள்; சோளப் பயிர்கள்; இவைகளை துரிதமாக கடந்திட, செங்குத்தான சாலைகள்.

ஏற்ற இறக்கங்கள், சில நேர்வுகளில் வளைவுகள்.ஊர்களின் ஊடாக, கிராமங்களைத் தொட்டு, வேகம் குறைத்து, எண்ண வேகத்திற்கு ஈடளிக்க இயலாத விரைவு வாகனங்கள், முறையாக முந்திச் செல்ல, ஒருவாறு சமதளப் பகுதியை தொட்டது எங்கள் வாகனம்.

தொடுவானத்தில், உயர்ந்து நிற்கும் நெடுங்குன்றத்தில், "செயின்ட் மிசல் கோட்டை", கோவில் தென்பட, அனைவருக்கும் உற்சாகம், மகிழ்ச்சி எல்லை கடந்து."யுனஸ்கோ", அங்கீகரிப்பில் வரும், 'மரபுரிமைச் சின்னம்',அது.

வாகன நிறுத்தத்திற்கு அகர வரிசை ஏற்பாட்டில், அடுத்தடுத்து நிறுத்தம்.ஊழியர் ஒழுங்குபடுத்த, எமது வாகனத்தை நிறுத்தி, பார்வையைச் சுழல விட்டோம்.சுள்ளென்ற வெயில், சற்று சுணங்கியது.

அண்மையில், மக்கள் கூட்டம் வண்ண,வண்ண ஆடைகளில். பல நாடுகளிலிருந்து வரிசையாக, ஒழுங்கமைவிற்குள்.இலவயப் பேருந்து நோக்கி, ஒவ்வொன்றாக ஊர்ந்து கொண்டிருந்தது.அவ் வரிசை ஒழுங்கில் எங்களையும் இணைத்துக் கொண்டோம்.

காலை சிற்றுண்டி விடுத்து, ஒன்றிரண்டு பிசுகட் எடுத்துக் கொண்டது போதவில்லை.பசி எடுத்திட, மீண்டும் சில சில்லுகள் கொரித்துக் கொண்டே, மெல்ல,மெல்ல கடந்து வண்டியில் ஏறினோம்.

சொகுசு வாகனம், துப்புரவுடன். இரைச்சல் இல்லாத இனிய ஓட்டம்.செல்லும்பாதை இரு மருங்கிலும், உணவுக் கூடங்கள்,விடுதிகள், 'கேம்ப் ஏற்பாடுகள்', அலங்கரித்திட, சில நூறு மீட்டர் சொகுசு வாகன அனுபவம்.

நெளிந்து செல்லும் பாலத்தை தொட்டு, இருபது நிமிட பயணத்தில், பாலத்தின் கீழே, ஆற்றுப்படுகை. பின்னோட்ட நீர்ப் பகுதி; பின் வாங்கி இருக்க; இரு புறமும் விழிகளைச் சுற்றி; விரிவானம், விசாலக் கோணம் கண்டு; வியந்து , பல மொழி பேசும் மக்கள் உணர்வுகளோடு கரைந்து, என்னை மறந்தேன்!

நிறுத்தம் வந்த போது, தானியக்க கதவுகள் திறந்திட, வரிசையாக இறங்கி,பாலத்தின் நடைபாதையில் பயணப் பட்டோம்.செல்போன்கள் சொடுக்குப் போட, கேமராக்கள் சுழன்று பல காட்சிகளை படத்திற்குள் கவர்ந்திழுத்திட, ஆற்றுப்பகுதியில் இறங்கினோம்.

இடையிடையே சிற்சில பாறைகள், பச்சை படர்ந்து, உலர்ந்தும், உலராமல்,நாங்கள் உட்கார்ந்து, அன்னாந்து பார்த்திடும் கோட்டை!களிப்பு மண் வரி கோடுகள் காய்ந்தும், காயாமல், கவுச்சி வாசம்.

சில் நீர்த்திட்டுகள் எம்மை அழைத்திட, ஆடை சுருட்டி, மூடணி அவிழ்த்து, முட்டி கால் உயர்த்தி நடை பயின்றோம்.சில்லென்ற காற்று, தூய்மையாக, உடலைத் தழுவ, உன்னத உற்சாகம்.மகிழ்ச்சி தாலாட்ட, கடற் காக்கைகள் வியக்கும் ஒலி எழுப்பி, எம்மை நோக்கி தாழப் பறந்து, தளர்நடை பயின்றது.

இரை தேடி, பாறை இடுக்குகளில் இறங்கிய பறவை அச்சம் தவிர்த்து, தாழ்நிலை பறந்திடும் வானூர்தி போல் ஒலி எழுப்பாது ஒய்யாரமாக ஒப்பிலா காட்சி! நண்பகல் கடந்ததும், நினவின்றி.உணவுப் பொட்டலங்கள் வாகனத்தில்.அழைப்பதும், கேட்காமல், ஒருவாறு நிலை உணர்ந்து, மீண்டும் சொகுசுப் பேருந்தில் வரிசை காத்து ஏறினோம்.இலக்கு சென்றதும், இறங்கி, காரில் அமர்ந்து, சாப்பிட முனைந்தபோது, மழைத்துளிகள் நனைத்திட, உள்ளிழுத்து அமர்ந்து, எலுமிச்சை சோறு, உருளை கலந்து, பிசைந்து, உடன் வந்த விருந்து அளித்திட்ட உணவும் சேர்த்து, மதிய உணவு முடிந்தது.

அடுத்த கட்ட பயணத்திற்கு அணியமானோம்! இலவச சொகுசு வாகனம் மீண்டும் ஈர்த்திட, ஏக்கத்துடன் பின் நின்ற வளமான கறுப்பு நிறக் குதிரைகள் பூட்டிய பழமை வாகனத்திற்கு கட்டணம் செலுத்த இயலாது, பயணம் நீண்டது.

மலைப்பாக செம்மாந்து நின்ற மலை நுழைவாயிலில் காலடி எடுத்து வைத்திட தயாரானோம். அதற்கு முன், பின் வாங்கியிருந்த ஆற்று நீர் ஓட்டம், சீராக தன் பாதையில் முன்னேறிக் கொண்டிருந்தது.இயற்கை நீர் ஊட்ட சூழல் கண்டு களித்தோம்.மலைக்கோட்டை வலப்பக்கத்தில், வளைந்து, நெளிந்து செல்லும் படிக்கட்டுகளில் ஏறுவது எவ்வாறு என்ற திகைப்பும்; எப்படியாவது ஏறிட வேண்டும் என்கின்ற உந்தமும் போட்டியிட; கால்கள் முன்னேற சாய்தள பாதையில் சறுக்கு மரம் ஏறுவதுபோல்.இரு பக்கங்களிலும் எண்ணற்ற கடைகள்; அங்காடிகள்;உணவகங்கள்; வணிகம் செய்திட திருவிழாக் கூட்டம் போல் ஏறுவதும், இறங்குவதுமாக.சில தொலைவு கடந்து, ஆசுவாசப்படுத்தி, மகளுடன், ஊன்றுகோல்போல் குடை துணை நிற்க.

எனக்கு முன்னே, மனைவி உற்சாகமாக படிக்கட்டுகளில் முன்னேறி, திரும்பி என்னைத் தேட. படப்பிடிப்பில், கவனத்துடன் எம்மையும் கண்காணித்து பாலா, அப்படியும் இப்படியுமாக சுழல, மச்சியின் உச்சியை அடைவதுபோல்.இடையிடையே உள்ள கோட்டை சந்துகளை, பொந்துகளை கண்டு, அவற்றிடையே காப்பாக பராமரிக்கப்படும் மரங்களை, செடிகளைக் கண்டு, உள்வாங்கிட முடியாத திணறல் காட்சிகள் பதிவேற்றத்துடன்.

மலைக்கோட்டை இடது பக்கமும் நீர் சூழ்ந்து கொண்டிருந்தது.காலையில், ஓடியாடி உட்கார்ந்து களித்து பகுதி, ஆற்று நீர் படர்ந்து சூழ்ந்திருந்தது.நேரம் சென்றிட, மலையை வளைத்திடும் நீர்ச் சூழல். ஒரு நாளைக்கு இருமுறை உள் வாங்குவதும், வெளிப்படுவதும், இயற்கைச் சூழல் கண்டிட, ஆர்வத்துடன் மக்கள் கூட்டம், நாங்கள் நற்பேறு பெற்றோம்."யுனஸ்கோ" மரபு பட்டியலில் இடம் பெற்ற சிறப்புக் காட்சியை கண்டு உற்சாகம்.சலிக்க கண்டு களித்த பெருமை வருட இறங்கினோம்.

எம்மை வரவேற்கும் உற்சாக உணர்வோ! அறியேன்! காற்று சுழன்றது, உடன் மணல் பறந்தது.சுழற்சியில் முகத்தில் அப்பிட, கோட்டை மதில் பக்கமாக, கண்ணாடி அணிந்து, திரும்பி நின்ற கூட்டம் அதிகரித்திட,வானம் கருத்தது.

வண்டின நிறம் சேர்த்து, கும்மிருட்டு மழை மேகம், குளிர்ந்த காற்று, சூறைக்காற்று சுழன்றடிக்க, விசை வேகம் சுருதிசேர்த்திட எம்மை நெட்டித் தள்ள, கைகள் கோர்த்து, ஒருவருகொருவர் ஒத்தாசை சேர்த்து, பாலத்தைவிட்டு தூக்கி எறியப்படுவோமோ, பயம் சேர்த்து, பெரும்பாலான மக்கள் கூட்டம் நடைகூட்டியது.

 விரைந்து முண்டியடித்து, பேருந்தில் ஏறி இடம் சார்ந்திட முண்டியடுத்தும், ஒழுங்கிழக்காமல், வெளிறிய முகத்துடன்.மழைத்துளிகள், ஆலங்கட்டித் துளிகளுடன் கொட்டிட, எம்மீது அங்கி போர்த்தி, குடை பிடுத்து காத்திட்டனர் பிள்ளைகள்.

பனி மழைத்துளிகள் பஞ்சு நிறத்தில், சில்லென்று உடைந்த கண்ணாடித் திவளைகளாக, சில மணித்துளிகள் நீடித்தது. செய்வதறியாது, திகைத்து வண்டியில் ஏறிட, ஒன்றிரண்டு வண்டிகள் விரைந்திட, காவல்துறை, இராணுவம் வண்டிகளில் விரைந்திட, மேலும் இலவசப் பேருந்துகள் பணியில்.

நெருக்கி வண்டியில் ஒழுங்காக உள் ஏறி நின்றோம். ஒரு வழியாக.
அலறிய பத்மினியும், வெளிறிய முகம் இயல் நிலைக்குத் திரும்ப முயன்று கொண்டிருந்தது.

அச்சம் எமக்கில்லை என்று சொல்ல முடியாது.இருப்பினும், நம்பிக்கை மேலோங்கிட, பயணம் தொடர்ந்தது.தருணங்கள் கரைந்திட, புயல் திசை மாறியது.வானம் மேற்றிசையில் வெளுக்கத் தொடங்கியது. வண்டி நிறுத்தம் நோக்கி, மனதில் அசை போட்டு,

 'அச்சமில்லை! அச்சமில்லை!

Friday, November 2, 2018

ஒருக்கலி






வந்த பொழுது, வாழ்ந்த பொழுது
திறந்த பொழுது, நிறைந்த பொழுது
எண்ண ஓட்டம், இயல் நிலைக் கூட்டும்
சூழல் மாற்றம், சூழ்ந்திடும் ஊட்டம்.

ஒத்தாசை உணர்வு, ஒன்றிணை உறவு
பகல், இரவு பகடை, மகிழ்வுடன் உருட்டி,
பள்ளாங்குழி விழும், புன்னகை கூட்டி,
பொழுது சாயினும், சாயாத உள்ளுணர்வு
ஊன்றி,

ஒருக்கலித்து உறங்கி, கனா தொலைத்து
வினா களைந்து, விடியல் வெளியில்
விழா உணர்ச்சியில்.

பூர்வீக புல்லாங் குழல்

அயலகச் செலவில் ஒரு நாள், செவ்விந்தியர்- பூர்வீகக் குடியினரின், புல்லாங் குழல் இசைக் கேட்டேன்.படக் காட்சிகள்/ஓவியக் கோலங்கள் பின்புலத்தில் அடுத்தடுத்து  வரிசையாக, மனங் கவர்ந்திட.

அமெரிக்காவின் மண்ணின் மைந்தர் வாழ்விடம்! 

விலங்குகள், பறவைகள், சூழல் அமைதி, எழில் கொஞ்சும் இயற்கை, மண், மரங்கள்,  அருவிகள், நீர்வீழ்ச்சி, கழுகுகள், குதிரைகள், கூடாரங்கள், புல்வெளிகள்,  மாடுகள்/எருதுகள் மேய்ச்சல் நிலங்களில்.

காட்சிப் படுத்திய விதம், முறை, கண்ணுக்கும், மனதுக்கும் விருந்து.பனிமூட்டம்; உயர்ந்த மரங்கள்; மலை முகடுகள்; குன்றுகள்; ஓநாய்கள்; மகளிர்; நிலவு; இரவு; ஒநாய் உலா. குன்றின் மீது.

பறவைச் சிறகுகள் அலங்கரிக்கும் தலைமுடி அணியுடன்; பின்னப்பட்ட இருக்கை; விறகு மூட்டிய நெருப்பு முன் அமர்ந்து; தியானிக்கும் பெண், குதிரை மீது அமர்ந்த வீரன்.

 மிக மெல்லிய குழல் ஓலி. இதுவரை நான் கேட்டறியா நிலை.அகக் கரணங்களில் சிற்றோடை சிலிர்ப்பு; ஆழ்ந்த அமைதி; தாயின் தாலாட்டு இசையாக; இன்னியல் இன்ப ராகம். எவரையும் வயப் படுத்தும்/ வசப்படுத்தும் இதய கீதம்!

'எதிரித்தா குன்று'

பிரான்சின் நார்மண்டி பகுதி- 'எதிரித்தா குன்று', வடக்கு பகுதியில்; ஆங்கில கால்வாய் அருகில், அழகிய கடற்கரை பள்ளத்தாக்கு.
எழில் கொஞ்சிடும் இயற்கை; சில்லென்ற காற்று தாலாட்ட; சிந்தை குளிர்ந்திட; கால்ப் மைதானம்; படகுகள் அணிவகுத்திட; கடைகள் அணி செய்ய; நடைபாதைகளிலும் உணவகங்கள்; கடல் உணவு வகைகள்;மீன், ஆளி, ஒயின், பல்வகை மதுப் புட்டில்களுடன், மக்கள் மகிழ்ச்சியுடன் தன்னை மறந்து.

குழந்தை,குட்டிகள், முதியவர்,இளைஞர் என பல நாடுகளைச் சேர்ந்த பயணிகள் கைகளில் கேமராக்கள், செல்போன்கள்,ஐ-போன்கள் சகிதமாக அடுத்தடுத்து கிளிக் செய்யும் அற்புதம், வெள்ளைக் குன்றுகள் உச்சியில்.மாதாக் கோவில் அடுத்த குன்றுத் தொடரில்.

கூழாங்கற்கள் கொட்டி நிரப்பிய இறங்கும் பகுதி, சிலர் படகில் சவாரி, சிறு கப்பல் பயணத்தில் குடும்பமாக சிலர் செல்லப் பிராணிகளை, படிக்கட்டுகளில். சரிவுப் பாதையில், வளைந்து, நெளிந்து,படிப்படியாக உயர்ந்து, சரளைக் கற்கள் பரப்பி, பாதை ஒழுங்கு செய்து, பக்குவப்படுத்திய, தடுப்பு ஏற்பாடுகள்.பிடித்துச் செல்ல, உட்கார்ந்து, இயற்கை எழில் ரசிக்க, முறையான முன்னேற்பாடுகள்.

 தொடக்க நிலையில் கழிவகங்கள், கார் நிறுத்தம், கட்டணச் சீட்டு/தானியங்கி என ஓர் ஒழுங்கிற்குள், ஒப்பற்ற சூழல். எண்ண ஓட்டத்தை சீர்படுத்திய, வண்ண ஓட்டம், வகை, வகையான காட்சிகள். கடல் பறவை, தாழப் பறந்து நம்மிடம் பேசுவது போன்று, உணவு அளித்த/உண்ட பழக்கத்தில் அச்சம் கொள்ளாது, அணுகி வரும் காட்சி அற்புதம்.அனைத்தும், இதுவரை கண்டிராத காட்சி, இதயத்திற்கு ஏற்ற மீட்சி.

போகும் பாதையெங்கும், குன்றுகளும், சரிவுகளும், வயல்வெளிகளும், கோதுமை நிலங்களும், சூர்ய காந்தி பயிர்களும், மந்தை, மந்தையாக மாடுகள் மகிழ்ச்சியாக மேய்ச்சலில்.

 உழுபடை எந்திரங்கள் ஊர்வலமும், இடையிடையே கடந்து செல்லும் கிராமங்கள், தொகுப்பாக வீடுகள், தனித்தனியாகவும், தோப்புகள், பைன் மரங்கள் என கண் கவரும், குளுமையான சூழல். சாரல் மழை11 டிகிரி செல்சியசுக்கும் குறைவான சூழல்.நெடுந்தொலைவு பயணக் களிப்பு நீக்கும்.

இடை நிறுத்தங்கள் பூங்காக்களாக, கழிவகங்கள் துப்புரவாக, நேர்த்தியான ஒழுங்கமைவு,சாரி,சாரியாக வாகனங்கள் அணி வகுப்பில், அக்கறை ஒழுங்கு.முந்தும், முட்டும் நிலை தொலைந்து, விதி முறைகள் அனுசரிக்கும் போக்குவரத்து. திசைவழி காட்டும் விளம்பரங்கள் தெளிவாக, தானியங்கி கட்டண நிறுத்தங்கள் அடுத்தடுத்து. தனிவழியாக முறையான ஏற்பாடு, முண்டியடித்துச் செல்லும் முணகல் இல்லை!

அயலகச் செலவில் ஒரு பொழுது


காகம் கரைவது போல் காலம் கடக்கிறது. அமைதி தேடி அலைக் கழிந்த மனம், அல்லல் ஏற்றது தினம், அயலகச் செலவில் அமைவுற்றது குணம்.கூட்டுப் பறவைக்கு, தனிமை துயரம் ஆயினும், மாறிய சூழல் உயரம், தோழமை கூட்டியது. தோகை விரி மயிலாக மகிழ்வூட்டியது!

வேலையில்லா வேளை விடிந்திடும் காலை, விரைவுறும் பயண சாலை, விடை தேடும் வினாப் போல் விரிந்திடும், விளங்கிடும் விளக்கொளி குறிப்பில்.

இன்னியங்கிகள் வரிசையாக அணி வகுத்திடும், அரவம் குறைத்து. ஆள் கடக்கும் குறிப்பில், நின்று நிதானித்து தொடர்ந்திடும். கனிவுடன், 'மன்னிக்கவும்' என திடீரென நடைபாதை வளைவில் எதிர்ப்பட்ட பெண்மணியின் வாயில் உதிர்த்த முத்து, வணிக வளாகங்களிலும்.

 எங்கெங்கு எதிர்ப்படும் நேர்விலும், கனிவான சொற்கள். மொழிக்கும், நாட்டுக்கும், மனிதத்திற்கும் அணி சேர்க்கும் ஒழுகலாறுகள். ஒழுங்கியக்க கண்ணியமான போக்குகள்.

நடைபாதையினர் உரிமை;மிதி வண்டியின் உரிமை; மதிக்கப்படுகிறது மகிழ்வுடன், தளர்வின்றி.