Wednesday, February 11, 2015

முறிந்த நட்பு
முளைத்த செடி

கிளைத்தது

நாள் தோறும்
பராமரிப்பில்

தண்ணீர் வார்க்கும்
தவிக்கும் நினைப்புகள்

காலங்களில் கரையும்
கவின்  கோலங்கள்

ஆவல் கூட்டும்
நாவல் மரங்கள்
ஆவுடையார் மரம்
அன்னாந்து பார்க்க
வைக்கும்,

அப்படியும் இப்படியும்
செல்லும் காலம்,
ஓரமாக இருந்தாலும்
ஈர்க்கும் மண(ன)ம்.

சிந்தும் பூக்கள்
சேகரிக்கும்
மக்கள்,

தேனீக்கள்
கெஞ்சும்

சிவ தலங்களின்
சீரிய விருட்சம்
காய்ந்தது ஏனோ
என பதறிய
உள்ளம்

கதறிய எம்மிடம்
சூழல் வினைஞர்
பகிர்ந்த துயரம்

"சாராயக் கடை உரிமையாளன்
மனையில் இருந்த
சங்கடம்
சடுதியில் அமிலம்
வேரில்
விட்டழித்த
வீணன்
கட்டிடம் காப்பாற்ற
சாய்த்தனன்"

Tuesday, February 3, 2015

ஆன்மீக வழியும், ஒழுக்க ஒழுகலாறு உள்ளிட்ட, நெறிமுறை அடிப்படையிலானதே ஆகும்.எம் மார்க்கமும் மனித வாழ்வை செப்பனிட,  பண்படுத்த அதற்குரிய கால,சமூக சூழலில் கால் பதித்து, ஊன்றி நின்றது.

அதற்காக பல்வேறு இடர்களை சந்தித்து, ஓங்கியது, ஓய்ந்தது, ஒருங்கிணைந்தது என அறியப்படுகிறது.சில இடப் பெயர்ச்சிக்கு ஆளாகி பிற தேச சமூகங்களில் செறிவான வரவேற்பை பெற்றது.

ஓரு புறம் ஆன்மீகம் பேசுவதும், மறுபுறம் ஒழுக்க சிதைவான பாதையில் பயணிப்பதும், பயன் அடைவதும்.இது வேறு, அது வேறு என சுய நிறைவு, தற்காப்பு பாணியில் விளக்கம் அளிப்பது, நியாயம் கற்பிப்பது எவ்வகையிலும் முறையன்று!
ஒரு நிலையில் பார்த்தால் தம் மனம் அடகு வைக்கப்படுதலுக்கு இணையாகும்.

பிறந்தது முதல் அணிவிக்கப்பட்ட முகமூடியை முற்றிலும் வசப்படுத்தி
வாழ்க்கையை ஓட்டுவது, அறிந்தே இவ்வாறு முனைந்து செல்வது ஒழுங்கு
ஆகாது.
தெரிந்த மொழி
தெரியாத பாதை!

அறிந்த மனிதன்
அறியாத மனம்!
விரிவாக்கம்

காவல் பூமி!
காலியான சாமி!
முகம்!

ஒப்பனை மனிதா!
பொழுதும்
வாய் பேசி,
வக்கனையாக,
வேடம் தரி!
மூடி
அணி!
முக்காலும்,
முழுசுமாக

Wednesday, January 28, 2015

        பாதசாரி!

பாதை உமக்கில்லை
வழியும் உமக்கில்லை
ஒதுங்கவும் ஓரமில்லை
கடக்கவும் தடம் இல்லை

எதுவும் உமக்கில்லை
உரிமை இழந்து

 நடக்கிறாய்
ஓடுகிறாய்
ஒதுங்குகிறாய்
கடக்கிறாய்
மிதக்கிறாய்


பல்வேறு வாகனங்களின்
வலத்தில்

வைராக்கியத்துடன்
கை கோர்த்து
அணி அணியாய்
அடுத்த பக்கம்............


 குறும்பு!

இழுத்து மூடி உறங்கினாலும்
கழுத்து மூடி
முகம் உள்ளிழுத்து 
முக்காடிட்டாலும்,
ரீங்காரம்
மின் விசிறி மிகை சுழற்சியும் தாண்டி,
ஓயாமல் வட்டமடிக்கும்
திருகிறக்கை போல்,
உறக்கமின்றி மிகை பணி
சேர்த்து,
முணகலுடன் எம்மை
புரட்டிப் போடும்,
இடமும் வலமுமாக......
உன்னைச் சொன்னேன்,

உண்மையைச் சொன்னாய்,

நானும்!   நீயே!

Monday, January 26, 2015

கலைந்த கனவு

சுரந்த சிந்தனை,

கரைந்த செல்வம்

கலைந்த மேகம்,

பரந்த உலகம்

விளைந்த இன்பம்,

கிளர்ந்த மருள்

உணர்ந்த பொருள்,

தொலைந்த நட்பு

விளைந்த சிறப்பு.
அப்பாவுக்கு உதவி அம்மா,
அம்மாவுக்கு உதவி அப்பா,

இருவருக்கும்....

அம்மம்மா !
அப்பப்பா !
பானைப் பிடித்தவள்
பாக்கியசாலி

பானை உடைத்தவள்
தைரியசாலி

Sunday, January 25, 2015

கேஜரிவால்

அளித்த வாய்ப்பை
நழுவவிட்டாய்!

அடுத்த வாய்ப்பை
தேடி நின்றாய்!

(புது தில்லி தேர்தல் 2015)
தெரிவதில்லை!

தொப்பை விழுவதும்
குப்பை விழுவதும்
காசுமீர துயரம் !

காசு கொடுத்து வாங்கிய துயரம்,
இயற்கைக்கு இடைஞ்சல் ஏற்றி,
ஆற்றின் போக்கை மாற்றி,
சாலை அமைத்து
வேலை முடித்தது,
வெளிப்படுகிறது
வெள்ளமாக...

மிதக்கிறது வாழ்க்கை,
மிதிபடுகிறது உடல்கள்
ஓடும் வெள்ளத்துடன்,
பிரிந்த உயிர்கள்
முறிந்த மரங்கள்,

கவிழ்ந்த இல்லங்கள்
கலைந்த மேகங்கள்,
வாழ்க்கை சேமிப்பும்
கை நழுவி போக,

வெந்த புண்ணும்
நொந்து போக,
நடை இழந்த பிணமாக,

நா வறண்டு
ஒளி அடங்கி,
உடல் சுருங்கி

நிர்வாணமே
நிவாரணமாக,

ஆதாரம் யாவும் சேதாரமாகி,
சோதரர் யாவரும்
சோகமயமாகி,

சொல்லிடாத்துயர்
சொந்தமாகி,
நிர்க்கதியாய்
நீளும்
அவர் உலகம்
வெளிச்சத்தை தேடி

(காசுமீர இழப்புகள் செய்தி கேட்டவுடன் எழுத்தில் வடித்தது, இன்று இடுகை செய்தது)
எங்கும் மழை சுற்றி சுற்றி,
நிலத்திலும் திணையிலும்,
குடைகளை நனைத்து,
நீலத்திரை நீள் பயண,
கலங்களை நிறைத்து.

(ஆர்.எல்.சிடீவன்சன் மழை குறித்த கவிதையின் மொழியாக்கம்)

Sunday, May 25, 2014

வீட்டிற்குள் வீடு!
விடியாத பொழுது!

சூரியன் குஞ்சும்
கெஞ்சிடும்
கூட்டின் கூடு!

கோணல் மேடு!
கோமாளி பாடு!

Saturday, May 25, 2013


என்ன இது? எதற்கு இந்த பீடிகை என்று ஒரு சிலர் கேட்கலாம்.

நகரமயமாக்கல்,  சாலைவிரிவாக்கம்,  வளர்ச்சி,  வாகனங்கள் பெருக்கம்
யாவும் நம் முன்னேற்றத்தின் குறியீடாக கருதப்படும் நிலையில்,  வாகன வசதியற்றவர் அல்லது நடைமறந்து போகாமல் உடல் நலம் கருதி, அன்றாட வாழ்க்கை நிரலில் நடைபோட வேண்டுமெனில், அது அவ்வளவு எளிதான செயல் அன்று.


இரு சக்கர வாகனங்கள்,  நான்கு சக்கர வாகனங்கள்,  கனரக வாகனங்கள் என எண்ணிறந்த வகை பயணப்பட, அதன் ஓட்டிகள் அவற்றை செலுத்திட தடையேதும் இல்லாத பாதை வசதிகள், பாத சாரிகளுக்கு உண்டா?

பாதசாரிகள், வாகனங்கள் செல்லும் பாதைகள் ஊடே அச்சத்துடன் பயணிக்க வேண்டியுள்ளது.போக்குவரத்து சமிக்ஞை ஏற்பாடு உள்ள இடங்களில் "வரிக்குதிரை கடத்தம்", போன்ற பகுதிகளில் கூட, கடுமையான நெரிசல், பய உணர்வுடன், வித்தை கூட்டம்போல் கடக்க வேண்டியுள்ளது.


நடைபாதையினருக்கு உடற்பயிற்சி சார்ந்த இடங்கள்,  கடற்கரை,  பூங்கா போன்றவகைள் மட்டுமே புகலிடம் அளிக்கின்றன. வளர்ச்சி, ,நடைபாதையினரை மறந்து,  பாதசாரிகளை புறக்கணித்து வருகிறது  எனில் அது மிகையன்று!

Monday, May 6, 2013


கோலோச்சிட விழையும்
குடிசையில்

தம் பிடி இறுக்கி
விசையுடன் செலுத்திடும்

சுர நிரல்

மல்லாட்டில் வீழ்ந்திடும்
உடல்கள்

மலேரியாவின் நாடிகள்
உயர்ந்திடும்

'கொசுவின் நிரல்'

 குறித்த

 இக் கவிதை ஆங்கிலத்தில்.

 படைப்பாளி நைசீரியா நாட்டின் கவிஞர். உச்சேசுக்குவா (Uchechukwu)

(மொழியாக்கம்)

உடல் மீதான வன்மம்
எங்கேயும் எப்போதும்

நொடிகளில் நேரிடும்
மனங்களின் பிறழ்ச்சி
நோயின் சாட்சி

மனதின் வன்மம் 
வதை தேடி
வரம்பு மீறி
விளைக்கும் செயல் கோடி

Wednesday, May 1, 2013


குறுவையும் போச்சு
சம்பாவும் போச்சு

கடைமடையும் காய்ந்து
போச்சு

கவலையும் துயரமும்
கை மீறி போச்சு

உழவும் தொழிலும்
உட்கார்ந்து போச்சு

வட்டியும் முதலும்
கூடிப் போச்சு

காப்பீடும் இழப்பீடும்
கானல் நீராச்சு

Sunday, April 21, 2013




 ஒத்திகை ஓகம்



ஒத்த கைகளின் ஒத்திகை

ஓகம் தரும் குத்தகை

Saturday, April 20, 2013



வெள்ளை அடி!


கறுப்பென்ன, வெள்ளையென்ன
ஏன் இந்த வேறுபாடு?

ஏக்கம் தீரும் வரை
கூறுபோடு!

கொள்ளை அடி!
கொழி!

கொழித்த பின்
வெள்ளை அடி!

Saturday, January 5, 2013

"சகாயம்" வெளுத்திட்ட சாயம்




 "சகாயம்"
வெளுத்திட்ட
சாயம்



ரெட்டை மலை
ஒத்த மலையாச்சு
ஒத்த மலை
சுத்தமாச்சு

வித்த மலை
மத்த மலை
மொத்த மலை
வத்தலாச்சு

கனி வளம்
தனி வளமாச்சு
துளியும் நிலமும்
தூரப் போச்சு

வலியும் கிலியும்
வாழ்க்கையாச்சு
வயலும் மேடும்
மறைந்து போச்சு

கண்மாயும் களமும்
காணாமல் போச்சு

கஞ்சிக்கு  கெஞ்சியவர்
விஞ்சிவிட்டார்
எஞ்சியவையாவும்
ஏப்பமிட்டார்

எடுபிடி அரசியல்
 கூட்டுச் சேர்த்து
எல்லையைக் கடந்து
 குடைந்து சென்றார்

ஏனென்னும் அதிகாரம்
வளைந்து கை குலுக்க
நிறைந்த பெட்டிகள்
மறைந்த உடல்கள்

மரத்த உணர்வுகள்
மனிதக் கழிவுகள்

சுரங்கம் சேர்த்தார்

பளிங்கு ஆடி
பல்லிளித்தார்

பல்லாயிரம் கோடி
நிலம் பிதுக்கி
வளம் புதுக்கினார்

வக்கற்ற அதிகார
வர்க்கம்
கை கட்டி
சேவை செய்திட



















































Sunday, September 2, 2012

இப்போ புரியுது
எமக்கு
ஏனென்று தெரியும்
உமக்கு

அப்போ புரியலை
கணக்கு
இப்போ புரியுது
பிணக்கு
என்னை உயர்த்தும்
உம்(ள்) வார்த்தை
உன்னை உயர்த்தும்
உண்மை(உள் மை) அறிந்தால்

Thursday, January 19, 2012

'தானே' ஆயிரம்

வீடற்றோர் ஆயிரம்
வீடுற்றவர் ஆயிரம்
வீதியில் நின்றவர் ஆயிரம்
விடுதியில் நின்றவர் ஆயிரம்

கூரை கவிழ்ந்தவர் ஆயிரம்
கூடத்தில் அமிழ்ந்தவர் ஆயிரம்
ஓடம் இழந்தவர் ஆயிரம்
ஓரம் அமர்ந்தவர் ஆயிரம்

அலுவல் இழந்தவர் ஆயிரம்
அலுவல் அமர்ந்தவர் ஆயிரம்
மரம் இழந்தவர் ஆயிரம்
மறைவில் நின்றவர் ஆயிரம்

கழனி அழிந்தவர் ஆயிரம்
கனவில் மிதந்தவர் ஆயிரம்

அனைவருக்கும் ஆயிரம்
யாருக்கும் ஆயிரம்
ஊருக்கும் உனக்கும்
எனக்கும்

வானம் தந்த ஆயிரம்
'தானே'
ஆயிரம்

Friday, January 13, 2012

உணவுப் பாதுகாப்பு சட்ட வரைவு: வாழ்வுரிமை நோக்கிய ஒரு படி புசுகர் ராசு, மக்கள் சிவில் உரிமைக் கழகம்( மொழியாக்கம்)

நமது நாட்டு மக்களில் பெரும்பகுதியினர், தமது வாழ்நாளில் உணவின்மை, உறையுளின்மை,மருத்துவ வசதியின்மை காரணங்களால்,கடின உடல் மற்றும் மனப்போராட்டத்தின் பிடியில் சிக்கி, முதுமை அடையாமலே இறக்கின்றனர்.

நாட்டில் வறுமையில் உழல்பவர், உயிர்வாழ்ந்திட, உழைப்பிற்கும், உணவிற்கும் ஓயாத தேடலில், தொடர் மன அழுத்தத்தில் வாழ்க்கைப் பயணம் சுருங்குகிறது. புதிய உணவுப் பாதுகாப்பு சட்ட வரைவு இப்பிரிவு மக்களுக்கு,சில நிவாரணம் அளிக்கிறது. இதன் காரணமாக சில காலம் வாழ்க்கை ஒப்பீட்டளவில் இலகுவாக அமையும்.

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டம் வேலைக்காக அளித்திடும் பண உதவி, மற்றும் மான்ய விலையில் கிடைத்திடும் உணவுப் பண்டங்கள், பொருளாதார அடுக்கதிகாரத்தில் கடை நிலையில் நிற்கும் கணிசமான மக்கள் திரளுக்கு பெரிய நிவாரணமாகும்.


இரண்டாவதாக, ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் மக்கள் வாழ்க்கை தரம், அரசாங்க சமூக பாதுகாப்பு அனுகூலங்கள் வெட்டின் காரணமாக, வாழக்கூடியதாக இல்லை.

உணவுப் பாதுகாப்பு சட்ட வரைவு, நிறைய குறைபாடுகள் உடையதாயினும், ஒரு குறிப்பிடத்தக்க சட்டமாகும். உணவுக்கான உரிமை வழக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் 2003ல் தொடர்ந்தததின் காரணமாக, தற்போது நலத்திட்டங்கள் நீதி மன்றம் மற்றும் நாகரிக சமூகக் குழுக்கள் கண்காணிப்பு அளவிற்கு கிளைவிட்டு வளர்ச்சி அடைந்துள்ளது .இம்மனுவில் பிற நலத்திட்டங்களான ,நகர வீடற்றோர் உரிமை பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவுத்திட்டம் ஆகியவையும் அடங்கும்.

இவ்வேளையில், இந்தியாவில் உணவுப் பாதுகாப்பு ஏழை மக்களுக்கு நீட்டிப்பு செய்வது அரிதான, ஆர்வமான நிகழ்வாகும். கிரேக்கமும்,இத்தாலியும் மிகுந்த பொருளாதார நெருக்கடியிலும், பிற ஐரோப்பிய நாடுகள் வளர்ச்சி குறைவால் சமாளிக்க இயலாமல் திணறுகிறது.

இப்போக்கு, பின் காலனிய உலக சமூகத்தின் ஒரு கட்ட முடிவை சுட்டுகிறது. மேற்கத்திய முதலாளித்துவ வளர்ச்சி அம்சத்தை கேள்விக்குரியதாக்கிறது, மற்றும் இது குறித்து அணுக்கமான ஆய்வினை செய்யக்கூடிய ஒரு புதிய கட்டத்திற்கு நம்மை தள்ளுகிறது.

இத்தகைய வளர்ச்சிகள் குறித்து இந்தியா நன்றாக புரிந்துகொண்டு, மேற்கத்திய மாதிரி வளர்ச்சி,அடுக்கடுக்கான பொருளாதார மந்த புதைகுழிகளில்,ஈடுபடும் முன்முயற்சியை தவிர்க்க வேண்டும்.

ஆயினும், நாட்டின் ஒட்டுமொத்த நலம், எவ்வாறு மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் பேசப்படும் உணவுப் பாதுகாப்புத் திட்டம் அடித்தள மக்களுக்கு போய் சேர்கிறது என்பதைப் பொறுத்து அமையும்.

ஆளுமையை தீர்மானிக்கும், நிர்வாகத் துறையில் சமகால சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளாமல், பொருளாதார சலுகைகள் வழங்குவது ஒரு பெரிய சவாலாகும். இலக்கு பிரிவினருக்கு உணவு போய்ச் சேரும் என்பது குறித்து, யாரும் பந்தயம் கட்ட தயாரில்லை. இலக்கு பிரிவினரை அடையாளம் காண்பது குறித்த செயற்பாங்கு சரியான கேள்விக்குரியதாகிறது. கடந்த கால அனுபவம் காட்டுவது, இசைவளிக்கப்பட்ட மூலவளங்களை சமூக, பொருளாதார,அரசியல் சக்தி வாய்ந்த நிர்வாக எந்திரம் வசப்படுத்தியுள்ளது விளங்கும்.


மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், தேசிய,மற்றும் சர்வதேசிய நலத்திட்டத்தில் சில மாநிலங்களில் நிறுவனமயப்பட்ட ஊழல் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன.உத்தரபிரதேச மக்கள் இது தொடர்பாக நீதிமன்றம் சென்றுள்ளனர். தற்போதைய சட்டவரைவு அனைவருக்குமான உணவு உரிமையை அளிக்காத நிலையில், இது பல நடைமுறைச் சிக்கல் மற்றும் கையாடல் அச்சங்களுக்கு வழிவகுக்கும்.

அரசாங்கத்தின் வாதம் அனைவருக்கும் உணவு அளிக்க வளங்கள் இல்லை என்பது அடிப்படையற்றது. இது அரசியல் உறுதிப்பாடின்மையை வெளிப்படுத்துகிறது. மேலும், கார்பரேட் நிறுவனங்களுக்கு சேவை செய்வது,சராசரி மக்களை மறப்பது ஆகும் இந்தியப் பொருளாதாரம் சராசரியாக 7.5 சதவீதம் ஆண்டொன்றுக்கு வளர்ச்சி அடைந்து வருகிறது என்றால், நிதிப் பற்றாகுறை இல்லை என்பதே பொருளாகும். பெரிய தொழிற்சாலைகளுக்கு சென்ற நிதியாண்டில் மட்டும் அரசாங்கம் வரிச் சலுகைகள் மற்றும் ஊக்க உதவிகள் உரு.4.6 இலட்சம் கோடி அளவிற்கு சலுகை வழங்கியுள்ளது, இதே சமயத்தில் மொத்த உணவுக்கான மான்யம், ஆண்டிற்கு உரு 2 இலட்சம் கோடி மட்டுமேயாகும்.


மிக முக்கியமாக, வசதி படைத்தவர்களுக்கான மான்யம் என்பது, 2009- 10 ல் 4.37 இலட்சம் கோடியிலிருந்து, 4.60 இலட்சம் கோடியாக, 2010- 11 ல் உயுர்ந்துள்ளது, இதே காலக் கட்டத்தில் ஏழை மக்களுக்கான மான்யம், 1.54 இலட்சம் கோடியிலிருந்து, 1.44 இலட்சம் கோடியாக 2011- 12 ல் குறைந்துள்ளது. இதுமட்டுமில்லாமல், 10 பெரிய கார்ப்பரெட் மற்றும் தனி நபர் தவணை தவறியவர்களின், வருமான வரி பாக்கி கணக்கைச் சேர்த்தால், 104 இலட்சம் கோடி கணக்கில் வருகிறது.

ஆக, நிதிப் பற்றாக் குறை என்கின்ற வாதம் அடிப்படையற்றது.

Friday, January 6, 2012

பொழுது!

நாளைய பொழுது
நமக்கு என்பாய்!

இன்றைய பொழுதே
இல்லாத போது!

சிந்திப்போம்! செயல்படுவோம்!

ஒரு தனி மனிதன், அடுத்தவருடன் பேசுவது, பழகுவது, ஒருவருக்கொருவர் இணக்கமாக இருப்பது ஏன் பிடித்தமில்லாது போகிறது. நம்மையே நாம் சரியாக உணர்ந்து கொள்ளாது, விளங்கி கொள்ளாதபோது, அடுத்தவரின் அசைவுகள், இசைவாக இல்லை, நசையாக இல்லை என அல்லல்படுவது, ஆர்ப்பரிப்பது
ஏன்?

சக மனிதன் குறைகளை அளவீடு செய்ய முயல்வது, நிறைபோடுவது எவ்வளவில் பண்பான அணுகு முறையாகும். குறைகள், பலகீனங்கள், பக்குவின்மை கூறுகள் சராசரி மனிதன் யாரிடமும் காணக்கூடிய, பொதிந்துள்ள, இயல்பான குணங்களாகும்.

காலப்போக்கில், பட்டறிவு வாய்ப்பில் சீர்செய்து கொள்ள வாழ்க்கை அனைவருக்கும் சம வாய்ப்பு அளித்துள்ளது. அதனை அர்த்தமுள்ள வகையில் பயன்படுத்தி, சுய திருத்தம் செய்து, வாழ்கைப் பயணத்தை நடத்திச் செல்ல வேண்டும்.

முற்சி, முனைப்பு, நேர்மறை வாழ்க்கை பாடங்கள் , மோதல் தவிர்த்த மனிதாபிமான பழக்கங்கள் தான் தற்போதைய காலத்தின் கட்டாயம்.

சிந்திப்போம்! செயல்படுவோம்!