இயற்கை உபாதையை கூட பாதுகாப்பாக கழிக்க முடியாத நிலை புதுச்சேரியில். மீத்தேன் வாயு வீட்டிற்குள் புகுந்து உயிர்பலி. ஆன்மீக பூமி, சுற்றுலா வளர்ச்சி, பல துறைகளில் முன்னேற்றம் என்ற பாராட்டு, பதாகைகள் மேடை ஏறும் நாள்தோறும்
உள்ளாட்சி நிர்வாகம், மற்றும் பொதுப்பணித்துறை கழிவு அகற்றும் பணி முறையாக செயல்படாத நிலையில் , அரசியல் சாசனம் உறுதி செய்துள்ள ,மக்களின் வாழ்வுரிமை பறிப்பு ,நிகழ்ந்துள்ளது. இத்தகைய கொடுமைக்கு ,எவ்வித சமாதானமும் ஏற்பு உடையதல்ல.
இந்த சம்பவம் ஒரு கொலைக் குற்றத்திற்கு உரியது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் , ,அதிகார அடுக்கின் மேல் நிலையில் இருந்து, கீழ் நிலை வரை , தண்டனைக்கு உரியவர்கள் ஆகும்.
பாதாள சாக்கடைத் திட்டத்தின் தரம், மற்றும் பாதுகாப்பு முறைமைகள் குறித்தும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும், புதுச்சேரி அரசு இத் தருணம் , உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
பல பகுதிகளில் கழிவு நீர் சுத்திகரி ப்பு கிணறுகள், நிலையங்கள் அமைக்காமல், ஒப்பந்ததாரர் நலனுக்காக பாதாள சாக்கடைத் திட்டத்தில் குழாய்கள் பதிப்பது, பத்தாண்டுகளுக்கு மேலாக ,அப்படியே அலட்சியமாக விட்டு விடுவது, " பொலிவு நகர திட்டத்தின்" இலட்சணம் அல்ல.
அதிக தாவர உயிர்களும், பிற உயிரினங்களும் வாழும் கடல், தாய்க்கு சமமாக,போற்றப்பட வேண்டியது, பாதுகாப்புடன் பேணப் பட வேண்டும். ஆனால், வேதியல் தொழிற்சாலை கழிவுகள்,சாக்கடைத் திட்டக் கழிவுகள் என நாள்தோறும் கடலில் பெருமளவில் கலக்கிறது.
இது யார் குற்றம் ?
சுற்றுச் சூழலை காக்க வேண்டிய அரசு நிர்வாகம் ,அதனை சீர்குலைக்கும் வகையில் பல பரிமாணங்களில் எதிர்மறையாக செயல்படுவது ,நல்லது அன்று.
ஊர் முழுக்க திறந்த சாக்கடைகள், குப்பைகள் மிதக்கும் வாய்க்கால்கள் , கொசு கும்மாளமிடும் கோட்டமாய், விளங்கும் கோலம், புதுச்சேரிக்கு அழகு சேர்க்குமா?
போர்க் கால அடிப்படையில் இவற்றை தீர்க்க களத்தில் இறங்கி , இதய சுத்தியுடன் வேலை செய்ய வேண்டும். அதிகாரம், ஆஸ்தி இவைதான் வாழ்க்கை என்ற கோணல் அரசியல் ஒரு பேரழிவை படிப்படியாக அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் என்கின்ற இயற்கை நியதியை நாம் மறந்து விடக்கூடாது.